தமிழர் பாரம்பரிய மல்லர் கம்ப கலையில் கலக்கும், கை கொடுக்கும் கை மாற்றுத்திறனாளி குழுவினருக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ஸ்கூட்டி அன்பளிப்பாக வழங்கியுள்ளார். அவரது சேவையை பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
மாஸ்டர் ராகவா லாரன்ஸ் பலருக்கும் தொடர்ந்து பல்வேறு உதவிகள் செய்து வருகிறார். மட்டுமல்லாது மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேகமாக கை கொடுக்கும் கை எனும் ஆதரவு அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார். அந்த அமைப்பில் வாழும் மாற்றுத்திறனாளி குழுவினர் நடனம் முதலான பலவிதமான திறமைகளில் பல துறைகளில் அசத்தி வருகின்றனர். தற்போது, இதுவரையிலும் உடல் வலு கொண்டவர்கள் மட்டுமே பங்கேற்கும் கலையாக இருந்த மல்லர் கம்பம் சாகச கலையை முறையாக கற்றுக்கொண்டு பங்கேற்று ஆச்சரியப்படுத்தி வருகின்றனர். அவர்களை அறிமுகப்படுத்தும் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது..
அப்போது பேசிய ராகவா லாரன்ஸ், ”மல்லர் கம்ப கலையில் ஈடுபடுபவர்கள் நடந்து செல்ல மிகவும் சிரமமாக இருப்பதாக சொன்னார்கள். அது எனக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தியது. அதனால் அவர்கள் அனைவருக்கும் இருசக்கர வாகனம் வாங்கி தரவிருக்கிறேன். அது மட்டுமில்லாமல் மாற்றுத்திறனாளிகளை வைத்து ஒரு படம் எடுக்கவுள்ளேன், அதன் மூலம் வரும் வருமானத்தில், இவர்களுக்கு வீடுகட்டி தரவுள்ளேன். நீங்களும் இவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளியுங்கள்” என்று பேசியிருந்தார். சொன்னபடி செய்திருக்கிறார்.

