கடத்தல், கொலை என கெத்து காட்டிக் கொண்டிருப்பவன் தனா. அவனது மகனை, அவனது மகன் என்று தெரியாத போலீஸ் அதிகாரி ஒருவர் கஞ்சா வைத்திருந்த குற்றத்துக்கான பிடித்து லாக்கப்பில் அடைக்கிறார். இரண்டு மூன்று போலீஸார் கூடி அவனை அடி வெளுக்கிறார்கள். அவன் மரணமடைகிறான். கொதிப்படையும் தனா சம்பந்தப்பட்ட போலீஸாரை விட்டுவிட்டு போலீஸாரின் குடும்பத்தினரை கொன்று தீர்க்க முடிவெடுத்து வேட்டையைத் துவங்குகிறான்.
தனாவிடம் ‘உன் மகனை ஸ்டேஷனில் வைத்து அடித்தது உண்மைதான்; ஆனால், இறப்புக்கு நாங்கள் காரணமல்ல’ என்கிறது போலீஸ் தரப்பு. அப்படியெனில் அவனைக் கொன்றது யார்? என்ற கேள்விக்கு கிளைமாக்ஸில் பதில் கிடைக்கிறது…
சித்தப்பு சரவணன் திமிரும் தெனாவட்டுமான வில்லத்தனத்தால் கொலைவெறியைக் கண்ணில் காட்டும் தனா கேரக்டருக்கு உயிரூட்டியிருக்கிறார்.
காவல்துறை உயரதிகாரியாக வருகிற ராஜா மலைச்சாமி, தன்னுடைய் இரு மகள்களையும் தனாவின் அடியாட்கள் கொலை செய்யத் துரத்தும் காட்சிகளில் போதுமான அளவுக்கு குறைவாக பயமும் பதற்றமும் கலந்து வெளிப்படுகிறார். அவருக்கு மகள்களாக வருகிற நிஷா துபே, சுரேகா உள்ளிட்டோர் தங்களுக்கு எந்தளவுக்கு வருமோ அந்தளவில் நடித்திருக்க, காதல் சுகுமார் வியக்க வைக்கும் கதாபாத்திரத்தில் வீரியம் காட்டியிருக்கிறார்.
ஜெயா கே தாஸின்பின்னணி இசையும் ஜெயகுமார் தங்கவேலின் ஒளிப்பதிவும் கதையோட்டத்திற்கு பலம் சேர்க்கின்றன.
மதுரைப் பின்னணியில் குட்டியாய் கேங்ஸ்டர் கதை போல் ஒன்றை உருவாக்கி, அதை எளிமையான பட்ஜெட்டில், முடிந்தவரை விறுவிறுப்பாக இயக்கியிருக்கிறார் பாலு. படத்தின் கதை ஆர்வத்தை தூண்டுவதாக இருந்தாலும் திரைக்கதை வீக்காக இருப்பதால் படத்திற்கான வரவேற்பும் அப்படியே இருக்கிறது!
Rating 2 / 5

