புதிய கதைக்களங்களை தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தும் வரிசையில் மைக்கேல் கே ராஜா இயக்கத்தில் ‘போகுமிடம் வெகுதூரமில்லை.’
மார்ச்சுவரி வேன் ஓட்டுநர் விமல் பிரசவத்துக்கு மனைவியை ஹாஸ்பிடலில் சேர்த்துவிட்டு, திருநெல்வேலியில் ஒப்படைக்க வேண்டிய ஒரு டெட் பாடியை எடுத்துக் கொண்டு சென்னையிலிருந்து பயணத்தை துவங்குகிறார். இடையில் லிஃப்ட் கேட்ட கருணாஸையும், கருணாஸ் ஏற்றிக் கொள்ளச் சொன்னதால் ஒரு காதல் ஜோடியையும் வேனில் ஏற்றிக் கொள்கிறார். அப்படி ஏற்றிக் கொண்ட மூன்று பேராலும் விமலுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது. வழியில் டெட் பாடியும் காணாமல் போகிறது. அதுவரை படத்தின் முன்பாதி.
டெட் பாடியை எடுத்துச் சென்றது யார், காணாமல் போன டெட் பாடி கிடைத்ததா, விமல் தனக்கு ஏற்பட்ட பிரச்சனைகளில் இருந்து மீண்டுவர முடிந்ததா என்ற கேள்விகளுக்கான பதில்கள் படத்தின் பின் பாதி…
ஜாலியான ஹீரோவாக நடித்து கலகலப்பூட்டத் தெரிந்த விமலுக்கு அப்படி எதையும் செய்ய முடியாத கதாபாத்திரம். லிஃப்ட்டில் ஏறிய காதல் ஜோடியைக் காப்பாற்ற அடிதடி வெட்டுக்குத்து என இறங்கி ரணகளமாவது, டெட் பாடி காணாமல் போனபின் சம்பந்தப்பட்டவர்களை சமாளிக்க முடியாமல் திணறிப் போய் மனம் நொறுங்குவது, அந்த மன உளைச்சலின் வெளிப்பாட்டை பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருக்கிற மனைவியிடம் காட்டுவது என மனிதாபிமானம், கோபம், இயலாமை என பல்வேறு உணர்வுகளை அதனதன் தன்மையோடு வெளிப்படுத்தி மனதில் நிறைகிறார்.
விரக்தியில் விளிம்பில் நிற்கிற கூத்துக் கலைஞராக கருணாஸ். விமலின் வேனில் லிப்ட் கேட்டு ஏறிக்கொண்டு அடிக்கடி நின்றுவிடுகிற அந்த வேனை ஸ்டார்ட் பண்ணுவதற்காக பின்னிருந்து தள்ளும் வேலையை ரசித்துச் செய்வதாகட்டும், ரணகளத்திலும் கிளுகிளுப்பு என்பதுபோல் சூழ்ந்திருக்கும் பிரச்சனைகளை ஓரங்கட்டிவிட்டு சரக்கடிப்பது, பசியடங்க சாப்பிடுவது என கவனிக்கத் தக்க நடிப்போடு வலம் வரும் அவர் கிளைமாக்ஸ் நெருங்கும்போது எடுக்கும் முடிவு மனதை உலுக்காமல் விடாது.
கருப்பையில் குழந்தையையும், மனதில் வேதனையையும் சுமக்கிற உணர்வை கச்சிதமாக காண்பித்திருக்கிறார் விமலின் காதல் மனைவியாக வருகிற மேரி ரிக்கெட்ஸ்.
முதல் தாரத்தின் வாரிசு, அடுத்த தாரத்திற்கு பிறந்தவர்கள் என டெட் பாடிக்கு கொள்ளி போடுவதற்கு ‘பகைத் தீ’யுடன் காத்திருப்பவர்களாக ஆடுகளம் நரேன், பவன், தீபா சங்கர், சினிமா விமர்சகர் வாதகோடங்கி வடிவேல் முருகன் உள்ளிட்ட சிலருடன் வேல ராமமூர்த்தி, சார்லஸ் வினோத், டெலிபோன் ராஜ் என கதைக்களத்தில் இணைந்திருக்கும் மற்றவர்களும் அவரவர் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்கள்.
என் ஆர் ரகுநந்தன் இசையில் பாடல்கள் ஒன்றிரண்டு முறை கேட்கும்படி அமைந்திருக்க, பின்னணி இசையில் குறையில்லை.
டெமில் சேவியருடைய ஒளிப்பதிவின் தரம் சென்னை டூ நெல்லை பயணத்தை களைப்பு தராதபடி கடந்துபோக உதவியிருக்கிறது.
லாஜிக் பற்றி யோசிக்காத சில காட்சிகள் படத்தின் குறைதான் என்றாலும்,
இறந்துபோனவருக்கு சம்பந்தப்பட்ட ஒருவர்கூட இல்லாமல், ஒரு டெட்பாடியை சென்னையிலிருந்து திருநெல்வேலி வரை மார்ச்சுவரி வேன் டிரைவர் ஒருவர் சாலைப் பயணமாக கொண்டு செல்வதில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்கள் இதுவரை தமிழ் சினிமாவில் பார்க்காதவை. அந்த வகையில் ‘போகுமிடம் வெகுதூரமில்லை’ படம் பார்க்க கொடுத்த காசு விரயமில்லை.
Rating 3 / 5

