ஊரில் கோயில் திருவிழா உற்சாகமாக நடந்துகொண்டிருக்கும் இரவு நேர பெருங்கூட்டத்தில், இளம்பெண் பிதாலெஷ்மி தன் தொலைந்துபோன தம்பியைத் தேடியலைகிறாள்.
இன்னொரு பக்கம், பணக்காரர்களைக் கடத்தி பணம் பறிக்கும் ஒரு கும்பல், 25 கோடி ரூபாயை தட்டித் தூக்க திட்டமிட்டு, தொழிலதிபர் ஒருவரைக் கடத்தி வைத்து மிரட்டிக் கொண்டிருக்கிறது. அவர்களிடம் பிதாலெஷ்மி சிக்கிக் கொள்ள, கும்பலின் அல்லக்கைகள் அவளை அனுபவிக்கத் துடிக்கிறார்கள்.
இப்படி பரபரப்பு பற்றிக் கொள்ளும் கதையில்,
பிதாலெஷ்மியின் நிலைமை என்னவாகும்? கடத்தப்பட்டவர் திருட்டுப் பேர்வழிகளிடமிருந்து தப்பிப்பாரா; கொலை செய்யப்படுவாரா? காணாமல் போன தம்பி கிடைப்பானா; மாட்டானா? என்றெல்லாம் நமக்குள் எதிர்பார்ப்பு தொற்றிக் கொள்கிறது… அதற்கான பதில்கள் இயக்குநர் எஸ் சுகன் அமைத்திருக்கும் திரைக்கதையில் கிடைக்கிறது. படத்தின் நீளம் 93 நிமிடங்கள்.
தொலைந்த தம்பியைத் தேடும்போது பதற்றம், இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியபின் மனதில் உருவாகும் கலவரத்தை பிரதிபலிக்கும் விதம், கிடைத்த சந்தர்ப்பத்தில் தான் மட்டும் தப்பிக்க நினைக்காமல் தன்னைப்போல சிக்கியிருக்கும் இருவரை காப்பாற்ற நினைக்கும் மனோபாவம், காதலனுடன் உணர்வுபூர்வ மனஸ்தாபம் என துறுதுறுப்பான நடிப்பைத் தந்திருக்கிறார் பிதாலெஷ்மியாக வருகிற அனுகிருஷ்ணா.
பிரதான வில்லனாக ஆதேஷ்பாலா. தொழிலதிபரை மடக்கிப் பிடிக்கும்போதும், அவரிடம் பணம் கேட்டு மிரட்டும்போதும் வெறித்தனம் காட்டியிருப்பவர், கடத்தலுக்கு ஐடியா கொடுத்தவனே ஆப்பு வைக்கும்போது அடங்கி ஒடுங்கி தன் பங்களிப்பில் நிறைவு தருகிறார்.
சாம்ஸுக்கு மெல்லிய வில்லத்தனத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பு. அதில் தனது வழக்கமான நகைச்சுவையை கலந்து ஓரளவு கலகலப்பூட்டியிருக்கிறார்.
நாயகி பிதாலெஷ்மியின் காது கேட்காத, பேசும் திறனற்ற தம்பியாக தர்ஷித். இயல்பான தோற்றத்திலேயே, ஏற்றிருக்கும் கதாபாத்திரத்துக்கு தேவையான பரிதாபம் படர்ந்திருக்க, படுபாவிகளிடம் சிக்கிய அக்காவை மீட்க எடுத்துக் கொள்ளும் முயற்சிகளில் கவனிக்க வைக்கிறது அந்த குட்டிச் சிறுவனின் கெட்டியான நடிப்பு. தர்ஷித் இந்த பட இயக்குநரின் மகனாம்!
தொழிலதிபரின் மனைவியாக வருகிற ரெஹானாவின் தேகத்தில் இளமையும், நடிப்பில் நேர்த்தியும் அதிகம்!
தொழிலதிபருக்கு கார் டிரைவராக வருகிற சிவாஞ்சி, கிளைமாக்ஸின் டிவிஸ்ட்க்கு உதவியிருக்கிறார்; நடிப்பில் அலட்டல் கலந்து மிரட்டியிருக்கிறார்.
பிதா லெஷ்மியின் காதலனாக ஸ்ரீராம் சந்திரசேகர், தொழிலதிபராக அருள் மணி, வில்லனின் உதவியாளராக மாரிஸ் ராஜா என மிச்சமிருக்கிற ஒருசிலரும் கச்சிதமான நடிப்பைக் கொடுக்க, திகிலும் திரில்லும் கலந்த பின்னணி இசையைத் தந்து கதையோட்டத்துக்கு உயிரூட்டியிருக்கிறார நரேஷ்.
23 மணி நேரம், 23 நிமிடங்களில் எடுத்து முடிக்கப்பட்ட இந்த வரலாற்று சாதனைப் படம், ஒளிப்பதிவாளரை எந்தளவுக்கு வேலை வாங்கியிருக்கும் என்பதை திருவிழாக் கூட்டம், இரவு நேர சாலை, வில்லனின் வீடு என மாறி மாறிப் பாயும் காட்சிகளின் நீள அகலம் உணர்த்துகிறது.
திரைக்கதை விறுவிறுப்பாக கடந்தோடினாலும் கதையில் பெரிதாய் புதிய சங்கதிகள் இல்லாதது படத்தின் பலவீனம்.
குறைகளைப் பொருட்படுத்தாமல், படக்குழுவின் சாதனை முயற்சியை வரவேற்றுப் பாராட்டலாம்; படத்தை தியேட்டரில் பார்த்து ஊக்குவிக்கலாம்.

