காலங்காலமாக தமிழ்நாடு இந்தி மொழி திணிப்புக்கு எதிராக போராடிக் கொண்டிருப்பது ஏன் என்பதை புரிந்துகொள்வதற்கான படைப்பு. மொழியுரிமைப் போராட்டத்தில் தமிழ்நாடு காட்டிய உறுதியை, துணிச்சலை எடுத்துக்காட்டி, போராட்டத்தில் எத்தனை உயிர்களைப் பறிகொடுத்திருக்கிறது என்கிற புள்ளிவிவரங்களை பதிவு செய்து தமிழ் சினிமாவின் பொக்கிஷமாகியிருக்கிற ‘பராசக்தி.’
இந்தி திணிப்புக்கெதிராக மாணவர்கள் நடத்திய போராட்டமும் அதன் விளைவுகளையும் சுற்றிச் சுழலும் இந்த கதைக்களத்தில், ‘புறநானூற்றுப் படை’யாக மாணவர்களைத் திரட்டி எதிர்ப்பைக் காட்டுவதற்காக ரயில் எரிப்பில் ஈடுபடுவதிலிருந்து டெல்லிக்கு சென்று போராட்டத்தின் தீவிரத்தை மத்திய அமைச்சருக்கு நேரடியாக உணர்த்துவது வரை கதைநாயகன் சிவகார்த்திகேயனின் நடிப்பில் சூறாவளியின் சுறுசுறுப்பு நிரம்பியிருக்கிறது.
சிவகார்த்தியின் தம்பியாக வருகிற அதர்வாவுக்கு இந்தி எதிர்ப்பில் அண்ணனைவிட பல மடங்கு வீரியம் காட்டுகிற வேலை. அதை சீற்றத்துடன் சின்சியராக செய்திருக்கிறார்.
போராட்டக்காரர்களை அடக்கி ஒடுக்க களமிறங்கும் அதிகாரியாக ரவிமோகன். முகபாவத்தில் உடல்மொழியில் கொடூரத்தின் உச்சத்தைக் காண்பிப்பதும் போராட்டக்காரர்களைக் கொன்று குவிப்பதுமாக படம் முழுக்க மிரட்டியிருக்கிறார்.
பேரறிஞர் அண்ணாவாக வருகிற சேத்தனின் பங்களிப்பு சில நிமிடங்கள் மட்டுமே என்றாலும் அழுத்தமாக பதிகிறார். அந்த கெட்டப் அசத்துகிறது.
மொழிப் போராட்டத்தில் ஈடுபட்டோரை அப்போதைய தமிழ்நாடு முதல்வர் எந்தளவுக்கு மோசமாக நடத்தினார் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிற சம்பவங்களுக்கு சரியான விகிதத்தில் பங்களித்திருப்பவர் பிரகாஷ் பெலவாடி. இந்திராகாந்தியாக வருகிற பெண்மணியும் கவனம் பெறுகிறார். கலைஞர் கருணாநிதியாக வந்துபோகிறார் குரு சோமசுந்தரம்.
ஹீரோவின் காதலியாக வந்து பாடலுக்கு ஆடி மனதைக் கொள்ளையடிப்பதோடு முடிந்துவிடாமல், போராட்டத்தில் தன் ஈடுபாட்டையும் அர்ப்பணிப்பையும் காட்டும் அத்தியாயங்களில் அசர வைக்கிறது ஸ்ரீலீலாவின் நடிப்பு.
ராணா டகுபதி, பசில் ஜோசப் இருவரும் கேமியோ’வாக எட்டிப்பார்த்தாலும் செய்யும் செயல்கள் படத்தின் முக்கியப் பகுதிகளை நிறைக்கிறது.
ஜிவி பிரகாஷுக்கு 100-வது படம். பாடல்களாலும் பின்னணி இசையாலும் படத்தை தாங்கியிருக்கிறார்.
கலை இயக்குநர் ஒவ்வொரு பிரேமிலும் 1960 காலகட்டத்தை கண்முன் கொண்டுவந்து நிறுத்த, தரமான ஒளிப்பதிவு காட்சிகளைப் பிரமாண்டமாக்கியிருக்கிறது.
நாம் வாழும் மண்ணில் நம் உரிமைகளுக்காக போராடியவர்களிடம் இருந்த வீரம், சிந்திய ரத்தம், செய்த தியாகம் உள்ளிட்டவற்றின் சிறு பகுதியை சினிமாவுக்கான கமர்சியல் அம்சங்கள் கலந்து பரிமாறி, பராசக்தியை தமிழ்த் திரையுலக வரலாற்றில் காலம் கடந்தும் நிற்கும் சக்தியாக்கியிருக்கிறார் இயக்குநர் சுதா கொங்கரா!
Rating 4 / 5


