‘பூமர காத்து’ என்ற படம் மாணவர்களுக்கு மட்டுமின்றி பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுப் படைப்பாக உருவாகியுள்ளது.
ஞான ஆரோக்கிய ராஜா கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி, ஜீசஸ் கிரேஸ் சினி என்டர்டெயின்மென்ட் சார்பில்தயாரித்திருக்கும் இந்த படத்தில் விதுஷ், சந்தோஷ் சரவணன் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகியாக மனிஷா நடித்திருக்கிறார். இவர்களுடன் மனோபாலா, தேவதர்ஷினி, சிங்கம் புலி, ஓ.எஸ்.மணி, முத்துக்காளை, போண்டாமணி, சிஸ்ஸர் மனோகர், குழந்தை நட்சத்திரம் ஜி.வி.சன்மதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.
பள்ளி பருவத்தில் வரும் காதல் சரியா? தவறா? என்பதை மையமாக கொண்டு எழுதப்பட்டுள்ள இப்படத்தின் கதையில், காதலோடு பல்வேறு சமூக கருத்துகளும் பேசப்பட்டுள்ளது.

’பூமர காத்து’ படத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பார்த்தால், நிச்சயம் அனைத்து மாணவர்களிடமும் படத்தை கொண்டு சேர்ப்பார் என்று சொல்லும் இயக்குநர், படம் பார்க்க, அவரிடம் தேதி கேட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த படத்துக்கு மதுரை ஈஸ்வர் பின்னணி இசையமைத்துள்ளார். பாடல்களுக்கு அரவிந்த் ஸ்ரீராம் இசையமைத்திருக்கிறார். ஜோ ஒளிப்பதிவு செய்ய, சார்ப் ஆனந்த் படத்தொகுப்பு செய்துள்ளார். ஓ.எஸ்.மணி இணை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.

