உள்ளே போன யாரும் உயிருடன் திரும்பியதில்லை. அப்படியொரு காட்டுப் பகுதிக்கு வைல்டு லைஃப் போட்டோகிராபரான வீரா சில அரிய வகை உயிரினங்களைப் படம் பிடிப்பதற்காக போகிறார். இன்னொரு முக்கியமான தேடலும் இருக்கிறது. போனவர் எந்த திசையிலிருந்து வந்தோம், எப்படி வெளியில் போவது என புரியாமல் குழம்பித் தவிக்கிறார். நாள் கணக்கில் பட்டினியாக காட்டில் சுற்றி உடல் நிலை பாதிக்கப்படுகிறார். தன்னைச் சுற்றி நடக்கும் மர்மமான விஷயங்களைக் கண்டு மிரள்கிறார்.
அப்படி அந்த காட்டுக்குள் என்னதான் இருக்கிறது? வீரா உயிருடன் திரும்ப முடிந்ததா இல்லையா?
இந்த கேள்விகளுக்கு விறுவிறுப்பான திரைக்கதையில் பதில் சொல்லியிருக்கும் இயக்குநர் அஷ்ரப், கதைநாயகன் வீராவாக பயம் பதட்டம் அதிர்ச்சி துணிச்சல் என கதாபாத்திரத்துக்கு உணர்வுகளுடன் துடிப்பான நடிப்பைத் தந்திருக்கிறார்.
நாயகி ஜனனி சமாதானம் லட்சணமாக இருக்கிறார். நடிப்பு அளவாக உள்ளது. நிழல்கள் ரவி, கருணாகரன், ஆடுகளம் நரேன், வேல ராமமூர்த்தி, தேவி மகேஷ் உள்ளிட்டோரின் நடிப்பு கதைக்கேற்றதாக இருக்கிறது.
அமானுஷ்யம், திகில் என சுற்றிச் சுழலும் காட்சிகளுக்கு சுறுசுறுப்பூட்டுகிறது ராஜ்குமார் சந்திரசேகரனின் பின்னணி இசை. காடு இருட்டு என பரவிப் பாய்ந்திருக்கிறது ஒளிப்பதிவாளர் ரயீஸ் அஹமதின் கேமரா.
இந்த படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்களை எதிர்பார்ப்பவர்களை திருப்திபடுத்துவது சந்தேகம்தான் என்றாலும் திகிலும் திரில்லுமாய் பயணிக்கும் படங்களை விரும்புவோருக்கு நிச்சயம் பிடிக்கும்.
Rating 3 / 5

