பேராசைக்காரர்களின் உலகத்தில் மோசடிக்காரர்கள்தான் ராஜாக்களாக இருப்பார்கள். அப்படியொரு ராஜாதான் இந்த கதையின் ஹீரோ; பெயர் ராவணன். அவர் தனக்கு பொருத்தமான நான்கு பேரை கூட்டாளிகளாக சேர்த்துக் கொண்டு மக்களை ‘சதுரங்க வேட்டை’ ஸ்டைலில் விதவிதமாக ஏமாற்றி கோடிக்கணக்கான பணத்தைச் சுருட்டுகிறார். ஒரு கட்டத்தில் கைதாகி சிறையில் நாட்களைக் கடத்துகிறார். தூக்கு தண்டனைக்கான நாளும் நெருங்குகிறது.
அவர் எப்படியெல்லாம் ஏமாற்றினார், எந்தளவுக்கு பணம் சம்பாதித்தார், போலீஸில் எப்படி சிக்கினார் என்பதெல்லாம் ஸ்கிரீன்பிளே… கிளைமாக்ஸில் எதிர்பாராத திருப்பம் இருக்கிறது.
படத்தை இயக்கியிருக்கிற கார்த்தீஸ்வரனே கதைநாயகன் ராவணனாக நடித்திருக்கிறார். மக்களை ஏமாற்றுவதற்காக அவர் போடும் திட்டங்கள் புத்திசாலித்தனமாகவும், போடுகிற கெட்டப்கள் காமெடியாகவும் இருக்கிறது. நடிப்பில் குறையில்லை. அசத்தலாக ஆடவும் செய்கிறார்.
மோசடிக்கார ராவணன் செல்வாக்கானவர்; அதையெல்லாம் தாண்டி அவரை சட்டப்படி தண்டிப்பதற்காக சந்தர்ப்பம் பார்த்து காரியம் சாதிக்கும் இன்ஸ்பெக்டராக ஸ்ரீநிதி. கவர்ச்சியான உடற்கட்டுடன் வலம்வரும் அவரது நடிப்பு கச்சிதமாக இருக்கிறது.
ராவணனின் மோசடி பார்ட்னர்களாக பிளாக் பாண்டி, ஆதவன், அகல்யா வெங்கடேசன் கூட்டணி தேவையான பங்களிப்பை ரசிக்கும்படி செய்திருக்கிறது.
லிவிங்ஸ்டன், கிரிக்கெட் வீராங்கனை மிருதுளா சுரேஷ் உள்ளிட்ட மற்றவர்களின் நடிப்பு சரியான விகிதத்தில் கதையில் கலந்திருக்கிறது. பாடலொன்றுக்கு வழக்கம்போல் குட்டைப் பாவாடையில் குத்தாட்டம் போட்டிருக்கிறார் அஸ்மிதா.
தேனிசைத் தென்றல் தேவாவின் குரலில் ஒரு பாடல், நடிகர் ஜெய் குரலில் ஒரு பாடல் என அணிவகுக்க அவறுக்கு தன் இசையால் எனர்ஜியேற்றியிருக்கும் ஸ்ரீகாந்த் தேவா, பின்னணி இசையில் இரைச்சலை அதிகப்படுத்தியிருக்கிறார். என்.எஸ்.ராஜேஷின் ஒளிப்பதிவு நேர்த்தி.
மக்கள் எப்படியெல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுவதுதான் இயக்குநரின் நோக்கம். சுவாரஸ்யமாக எடுத்துக் காட்டியிருப்பது படத்தின் பலம். படத்தின் மூலம் நடத்தியிருப்பது சமூக விழிப்புணர்வுப் பாடம்.

