வலிகளோடு நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிற சிலரை முதன்மை கதாபாத்திரங்களாக்கி, கமர்சியல் அம்சங்களைத் தவிர்த்து உருவாகி, விருதுகளைக் குவித்துக் கொண்டிருக்கும் படம்.
அந்த மனிதர் தனது மூன்று மகன்களோடு வசிக்கிறார். மூன்று பேரையும் கண்டிப்பு என்ற பெயரில் அடிமைகள் போல் நடத்துகிறார். சமைப்பதிலிருந்து கழிவறை சுத்தம் செய்வது வரை எல்லா வேலைகளையும் அவர்கள்தான் செய்ய வேண்டும். கூடவே படிப்பிலும் முதலிடம் பிடிக்க வேண்டும்.
அப்படி அந்த பிள்ளைகள் சொந்த அப்பனிடம் மாட்டிக்கொண்டு படுகிற அவஸ்தைகளைப் பார்க்கும்போது, மூவருமாக சேர்ந்து அவரை ஏதாவது செய்து விடுவார்கள் என்று தோன்றுகிறது.
அப்படியான எண்ணத்தை ஏற்படுத்தி கடந்தோடும் கதையில் அடுத்தடுத்து நடப்பவை எல்லாம் உணர்வுகளை அசைத்துப் பார்ப்பவை…
நல்ல பணக்காரர், ஆசிரியர், சொந்தமாக ஸ்கூல் நடத்துபவர், சொந்தமாக எஸ்டேட்டும் இருக்கிறது, அதில் தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். இருந்தாலும் எல்லாவற்றிலும் பிரச்சனைகள்… ஏழ்மை நிலைக்கு வருகிறார். அந்த மன அழுத்தத்தில் மகன்களிடம் சர்வாதிகாரி போல் நடந்துகொள்கிறார், குடிக்கிறார். நமக்கு அவர் மீது வெறுப்பு வருகிற அளவுக்கு நடந்துகொள்ளும் நடிப்புப் பங்களிப்பால் ஏற்ற கேரக்டருக்கு உயிரூட்டியிருக்கிறார் அப்துல் ரஃபீ.
அப்பாவின் கண்டிப்புக்கும் தண்டிப்புக்கும் ஆளாகும் மிதுன், ரித்திக், நிதின் மூவரும் பரிதாபத்தை அள்ளுகிறார்கள்.
அந்த பிள்ளைகளுக்கு அம்மாவாக, கணவனை பிரிந்து வாழ்கிறவராக, பிள்ளைகளுடன் மீண்டும் சேர்கிறபோது புத்துணர்ச்சி அடைபவராக வருகிற பிரார்த்தனா ஸ்ரீகாந்த்தின் நடிப்பில் ஆழமிருக்கிறது.
மற்றவர்களும் கதைக்கேற்ப நடித்திருக்க, ஒரு செழிப்பாக வளர்ந்த நாயும் முக்கிய பாத்திரத்தில் அவ்வப்போது வந்து போகிறது.
கதைச் சூழலின் பரிதாபத்துக்கு ஏற்ப பின்னணி இசையை தவழ விட்டிருக்கும் வேத் சங்கர் சுகவனம், ‘கனவே’ பாடலின் வரிகளிலுள்ள உணர்வுகளை மெல்லிசையால் கச்சிதமாக கன்வே செய்திருக்கிறார்.
1998 காலகட்டம், மங்கிய வெளிச்சத்திலும் இருளிலும் நகரும் கதையோட்டத்தை தன் ஒளிப்பதிவால் மெருகேற்றியிருக்கிறது ஒளிப்பதிவாளர் அவினாஷ் பிரகாஷின் கேமரா.
கதையில் சில குழப்பங்களும் உருவாக்கத்தில் சில குறைகளும் இருக்கின்றன என்றாலும், கலைப்படைப்புகள் அப்படியும் இப்படியும்தான் இருக்கும் என்பதால் அதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை.
வித்தியாசமான படங்களை விரும்புகிறவர்கள் தாராளமாய் பார்க்கலாம்.

