உடலுறுப்பு தானத்தை மையமாக வைத்து, அதன் பின்னணியில் நடக்கிற அநியாய அக்கிரமங்களின் ஒரு பகுதியை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கும் ‘மை லார்ட்.’
மத்திய அமைச்சர் ஒருவரின் இரு கிட்னிகளும் செயலிழந்துவிட, அவரது ரத்த வகை அரிதாக இருக்க, அதற்கு பொருந்தும்படியான கிட்னி சாமானிய மனிதனான முத்துச் சிற்பியிடம் இருப்பது தெரியவருகிறது. அவரை அழைத்து வந்து, அவரது கிட்னியை அமைச்சருக்கு பொருத்துவதற்கான மருத்துவ நடைமுறைகள் துவங்குகிறது. அந்த நேரமாகப் பார்த்து முத்துச்சிற்பு காணாது போகிறார். அவர் கிட்னி தந்தால் மட்டுமே அமைச்சரைக் காப்பாற்ற முடியும், வேறு வழியே இல்லை என்கிற நிலைமை.
முத்துச்சிற்பிக்கு என்னவானது? அமைச்சரின் உயிரைக் காப்பாற்ற முடிந்ததா இல்லையா? இந்த கேள்விகளுக்கான பதில்களாய் விரிகிறது படத்தின் மீதிக் கதை
முத்துச் சிற்பியாக சாமானிய மனிதனாக சசிகுமார். மார்ச்சுவரியிலிருந்து எழுந்து ஆட்டம் போடுகிற முதல் காட்சியே அமர்க்களமாக இருக்க, கிட்னியை தர ஒத்துக் கொள்வது, பிறகு மறுப்பது என நீளும் காட்சிகளில் அவர் அடிபட்டு மிதிபட்டு அனுபவிக்கிற வேதனைகள் மனதை ரணமாக்குகின்றன. கிளைமாக்ஸில் அவர் எடுக்கிற முடிவை முன்பே யோசிக்காதது ஏன் என்பது சத்தியமாய் புரியவில்லை என்றாலும் அந்த முடிவு போற்றத்தக்கதாகவே இருக்கிறது.
அமைச்சராக ஆஷா சரத். அதிகாரத் திமிர், தன் தேவைக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற மனிதாபிமானமற்ற மனோபாவம் என கெத்து காட்டியிருக்கிறார்.
சைத்ரா ஆச்சார் சசிகுமாருக்கு மனைவியாகும் விதம் ரசிக்க வைக்கிறது. அடுத்தடுத்த காட்சிகளில் பணபலம் கொண்டவர்களிடமும் அதிகாரத்தில் உள்ளவர்களிடமும் கணவரோடு சிக்கி சின்னாபின்னமாகிறபோது கவனம் பெறத்தக்க நடிப்பைத் தந்திருக்கிறார்.
அதிகாரம், ஆளுமை, ரவுடியிஸம் என பல விதங்களில் தாக்கப்பட்டாலும் அதையெல்லாம் மீறி அநியாயத்துக்கு எதிராக நிற்கிற பத்திரிகையாளராக குரு சோமசுந்தரத்தின் நடிப்பும் உடல்மொழியும் தனித்து தெரிகிறது.
கதைநாயகனை கிட்னி தானத்துக்கு சம்மதிக்க வைத்து, அறுவை சிகிச்சை நடக்கவிருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து வருவது வரை படாதபாடு படுகிற அருள் எழிலனின் நடிப்பு சீரியஸான கதையோட்டத்துக்கு இடையில் ரிலாக்ஸுக்கு உதவுகிறது. அதிகாரம் என்பது எத்தனை பவர்ஃபுல்லானது என்பதை அவரது செயல்பாடுகள் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.
மனிதாபிமானமுள்ள நீதிபதியாக ஜெயபிரகாஷ், துணிச்சலான வழக்கறிஞராக இயக்குநர் கோபி நயினார், வட்டிக்கு பணம் கொடுத்து கிட்னியைப் பறிக்கும் ஃபைனான்ஸியராக வசுமித்ர என ஏராளமான நடிகர்கள் முக்கியத்துவமுள்ள கதாபாத்திரங்களில் வந்து போகிறார்கள்.
ஷான் ரோல்டன் பாடல்களை உயிரோட்டத்துடனும் பின்னணி இசையை கதையோட்டத்தின் தன்மைக்கேற்பவும் வழங்கியிருக்க, நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு படத்துக்கு பிரமாண்ட வடிவத்தை தருகிறது.
மனிதர்கள் மனிதம் இழந்தவர்களாக மாறிவிடக்கூடாது என்பதை வலியுறுத்துவது படத்தின் இயக்குநர் ராஜுமுருகனின் நோக்கம். கதாநாயகனை வள்ளலாரின் பக்தராக காண்பித்து தன் நோக்கத்துக்கு முன்னுதாரணமாக்கியிருக்கிறார்.
வள்ளலார் வழியில் செயல்படுகிற அந்த முன்னுதாரண மனிதர், கிட்னியை கேட்டதும் கொடுத்துவிட்டுப் போயிருக்கலாம். அதை செய்யாமல் அதிகாரத் திமிருக்கெதிராக களமிறங்குகிறேன் என்ற பெயரில் எதையெல்லாமோ செய்துவிட்டு, யார் யாரோ சொல்லும்படியெல்லாம் ஆடிவிட்டு, கடைசியில் அதுவரை செய்த அத்தனைக்கும் அர்த்தமில்லாத முடிவை நோக்கி நகர்வது கேலிக்கூத்து. கிளைமாக்ஸுக்கு வந்தபிறகே திரைக்கதை மனம்போன போக்கில் பயணித்திருப்பதை உணர முடிகிறது.
குறைகள் நிரம்பிய படைப்பென்றாலும் ‘மனிதர்கள் மனிதர் நிறைந்தவர்களாக இருக்க வேண்டும்’ என்ற இயக்குநரின் எண்ணத்தை பாராட்டலாம்!
Rating 3 / 5 

