ஆன்மிகம், அறிவியல், சிஜி என மிக்ஸிங் காக்டெயிலாக ‘மாயன்.’
ஐடி பணியாளர் ஆதிக்கு வரும் மெயிலில் 13 நாட்களில் உலகம் அழிந்துவிடும் என்ற அதிர்ச்சித் தகவல் இருக்கிறது. அதில் சொல்லியிருப்பது நிஜம்தான் என்பதை உறுதிபடுத்தும்படி சில சம்பவம்ங்களும் நடக்கிறது. ஆதியின் நாட்கள், நிமிடங்கள், விநாடிகள் எல்லாமே பரபரப்பாகிறது.
பேங்கில் கடன் பெற்று தன் அம்மாவுக்காக வீடு ஒன்றை வாங்குகிறார். மனதுக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்துகொள்கிறார். அப்படியே சில நாட்கள் கடந்துபோக, போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் மோதுகிற சூழ்நிலை. அவரிடமிருந்து தப்பிக்க சிலரை கொலை செய்ய வேண்டிய கட்டாயம்… ஆதி அந்த கொலைகளைச் செய்ய சம்மதித்தாரா இல்லையா? உலகம் அழிந்ததா இல்லையா? என்பதெல்லாம் அடுத்தடுத்த காட்சிகளில்…
ஆதி மாயர்களின் வாரிசு என்பதும், அவர் பிறவி எடுக்கும் போதெல்லாம் தீயவர்களை அழிப்பது வழக்கம் என்பதும் கதையிலிருக்கிற சுவாரஸ்யங்கள்…
அடர்ந்து படர்ந்த தலைமுடியோடும் மீசை தாடிக்குள் புதைந்த முகத்தோடும் ஆதியாக வருகிற வினோத் மோகன் ஐடி பணியிலிருக்கிற இளைஞனாக, சாமியார் தோற்றத்தில் தீயவர்களை அழிக்கிற மகா சக்தியாக என மாறுபட்ட வேடங்களை ஏற்றிருக்கிறார். அதற்கேற்ப நடிக்க முயற்சியும் செய்திருக்கிறார். அந்த முயற்சி இதெல்லாம் பத்தாது தம்பி என்று சொல்லும் விதத்தில் இருக்கிறது.
ஹீரோவின் காதலியாக பிந்து மாதவி. கண்களால் உணர்வுகளைக் காட்டி, புன்னகையால் மனதைக் கவர்ந்து நகர்கிறார்.
போலீஸ் அதிகாரியாக வருகிற ஜான் விஜய் பதவித் திமிரோடு ஆட்டம் காட்ட, ஆடுகளம் நரேன், சாய் தீனா, ராஜ சிம்மன் என மற்றவர்கள் அவரவர் பங்களிப்பை குறையின்றிச் செய்திருக்கிறார்கள்.
கடைசி கால் மணி நேர படத்தை பாகுபலி படத்தின் போர்க்களக் காட்சியைப் போல் எடுக்க நினைத்திருப்பார்கள் போலிருக்கிறது. சிஜி தொழில்நுட்பம் கவர்ந்தாலும் உருவாக்கத்தின் ரிசல்ட் வீடியோ கேம் ரேஞ்சில் வந்திருக்கிறது.
மாயர்கள், அவர்களின் பின்னணி, ஜென்ம ஜென்மமாய் தொடரும் நல்ல சக்திக்கும் தீய சக்திக்குமான போர், கதைநாயகனை வேட்டையாடத் துரத்தும் பிரமாண்ட பாம்பு, ஆதிசிவன் என ஆன்மிக சமாச்சாரங்களை கையிலெடுத்திருக்கும் இயக்குநர் ராஜேஷ் கண்ணா, கதை திரைக்கதையில் இப்போதைய ரசிகர்களின் மனநிலையை மனதில் வைத்து நேர்த்தி காட்டியிருந்தால் மாயன் வசூலில் மன்னனாகியிருப்பான்!

