திரில்லர் ஜானரில் வித்தியாசமான முயற்சி… பெண் கதாபாத்திரங்களே இல்லாமல் கருவாகி உருவான ‘மனிதர்கள்.’
நண்பர்கள் ஆறு பேர் குடிபோதையில் மிதக்கிறார்கள்; தகராறு உருவாகி அடித்துக்கொள்கிறார்கள். மதுபாட்டிலால் குத்தி ஒருவரை கொல்கிறார்கள். யார் கொன்றது என மீண்டும் சண்டை உருவாகிறது. அதையெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று இறந்தவரை கார் டிக்கியில் கிடத்திக்கொண்டு பயணிக்கிறார்கள். அந்த பயணத்தில் அவர்கள் சந்திக்கிற சவால்களும் இறந்தவரை என்ன செய்கிறார்கள் என்பதும் அறிமுக இயக்குநர் ராம் இந்திரா படைத்திருக்கும் கதையின் மீதி…
கபில் வேலவன், பிரேம், தனபால், தக்ஷா, சாம்பசிவம், அர்ஜூன் தேவ் என நண்பர்கள் ஆறு பேரில் கபில் வேலவன் நண்பர்களின் சண்டை சச்சரவை முடிவுக்கு கொண்டு வரும் விதமும் குத்துப்பட்டு மரணமடை வரை பிரேமின் துடிப்பான பேச்சும் கவனம் பெறுகிறது. மற்றவர்களின் நடிப்பும் ஓகே ரகம்.
இரவு நேரம், கதை நடப்பதெல்லாம் காருக்குள்… இப்படியான கதைச்சூழலை அஜய் ஆபிரகாம் ஜார்ஜின் கேமரா கோணங்களும் ஒளியமைப்புகளும் மெருகேற்றியிருக்கின்றன. அனிலேஷ் மாத்யூவின் பின்னணி இசை இன்னும் கொஞ்சம் அதிர்வூட்டியிருக்கலாம்.
படத்தின் உருவாக்கம் பெரியளவில் மனதைக் கவரும் விதமாக இல்லாவிட்டாலும் எடுத்துக்கொண்ட் கதையும், கதையை நகர்த்திய விதமும் யூகிக்க முடியாத கிளைமாக்ஸும் படத்தை தாங்கிப் பிடிக்கின்றன.
மனிதர்கள் _ வித்தியாசமானவர்கள்; வியப்பூட்டுபவர்கள்!
Rating 2.5 / 5

