தவறான புரிதல்களும் தாறுமாறான சம்பவங்களுமாக ‘மாயபிம்பம்.’
இளைஞன் ஜீவாவிடம் ஒரு பெண் பேசிப் பழகுகிறாள். அவள் என்ன நினைப்பில் பழகுகிறாள், நோக்கம் ஏதும் இருக்கிறதா என்பதை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஜீவாவின் நண்பன், ஜீவாவுக்கு ரூம் ஏற்பாடு செய்து கொடுத்து, அந்த பெண்ணை அங்கு அழைத்துப் போகச் சொல்கிறான். ஜீவாவும் அப்படியே செய்கிறான். எந்த தொந்தரவுமில்லாத தனிமை. அவளிடம் ஒருவித கிறக்கம் தெரிகிறது. ஜீவா அவளை அனுபவிக்க நெருங்குகிறான்…
அந்த காட்சி கிட்டத்தட்ட பிட்டு படம் பார்ப்பது போலிருக்கிறது. அவர்களுக்குள் ‘அந்த’ சம்பவம் நடக்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு உருவாகிறது. எதிர்பார்த்தது நடந்ததா? எக்குத்தப்பாக முடிந்ததா? என்பது மீதிக் கதை…
ஜீவாவாக ஆகாஷ் நாகராஜன். லட்சணமாக இருக்கும் அவர் தன்னிடம் பழகும் பெண்ணை காம உணர்வுடன் அணுகுவது, பிறகு அவளது மனதில் என்ன இருந்தது என்பதை அறிந்து அதிர்வது, அவளுக்கு நேர்ந்த விபரீதம் தெரிந்து மனம் நொறுங்கிப் போவது என தனக்கான காட்சிகளை இயல்பான நடிப்பால் ஆக்கிரமித்திருக்கிறார்.
கண்களாலேயே பேசுவது, வெட்கச் சிரிப்பைச் சிந்துவது என்றிருக்கிற கதைநாயகி ஜானகி, காதல் உணர்வை, ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் தருணங்களில் அசத்தலான நடிப்பைத் தந்திருக்கிறார்.
எந்த நேரமும் பெண்களை நோட்டமிடுவதும், எந்த பெண் காம வலைக்குள் விழுவாள், எந்த பெண் வழிக்கு வர மாட்டாள் என்பதை உணர்ந்து சொல்வதுமாக ஜீவாவின் நண்பனாக வருகிற ஹரி கிருஷ்ணாவின் பங்களிப்பு கிளுகிளுப்பாக, ரசிக்கும்படியாக இருக்கிறது.
ஹீரோவின் நண்பர்களாக வருகிற ராஜேஷ் பாலா, அருண்குமார், மற்ற கதாபாத்திரங்களை ஏற்றிருப்பவர்கள் கதையில் தங்களது முக்கியத்துவத்துக்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள். பின்னணி இசையில் நந்தா, ஒளிப்பதிவில் எட்வின் சகாய் ஆகியோர் கதையோட்டத்தின் தேவையை கச்சிதமாக நிறைவேற்றியிருக்கிறார்கள்.
ஆரம்பக் காட்சிகளில் ஏடாகூடமான படம் பார்ப்பது போன்ற உணர்வுக்குள் தள்ளிவிட்டு, அடுத்தடுத்த நிமிடங்களை திரில்லர் ஸ்டைலில் நகர்த்தி, எதிர்பாராத திருப்பங்களைக் கலந்துகட்டி, மனம் கலங்குகிற கிளைமாக்ஸோடு காதல் கதையில் வித்தியாசம் காட்டியிருக்கிறார் இயக்குநர் எஸ் ஜே சுரேந்தர்.
Rating 3.5 / 5 

