காதல் கதையை புதுவிதமாக அணுகியிருக்கும் படம்
காதல் தோல்வியால் தற்கொலை செயதுகொள்ளத் தயாராகும் அந்த இளைஞனுக்கு, அனிதா என்ற பெண்ணிடம் இருந்து ‘தற்கொலை செய்து கொள்ளாதீர்கள்’ என்று மெஸன்ஜரில் மெசேஜ் வருகிறது. அவன் தற்கொலை முயற்சியைக் கைவிடுகிறான்.
அந்த அனிதா யார் என்றால், அந்த இளைஞனை ஃபேஸ்புக் வழியாக பார்த்து மயங்கி அவனை ஒரு தலையாக காதலித்தவள். அவள் விபத்தில் இறந்து இரண்டு மாதங்கள் கடந்து விட்டது.
அப்படியெனில், மெஸன்ஜர் வழியாக வந்து அவனது தற்கொலையை தடுத்தது யார்? அதை தெரிந்துகொள்ள அவனும், போலீஸும் புறப்பட அதன்பிறகு நடப்பதெல்லாம் சற்றே புதுமையாகவும் கொஞ்சம் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது…
காதல் தோல்வியைப் பிரதிபலிப்பது, இறந்த பெண்ணின் பின்னணியை போலீஸுடன் சென்று அலசி ஆராய்வது, தன்னை ஒரு தலையாய் காதலித்த பெண்ணின் மனதை உணர்ந்து வருந்துவது என எல்லாவற்றையும் அலட்டலின்றி செய்திருக்கும் ஸ்ரீராம் கார்த்திக் இறந்துபோன பெண்ணின் காதலுக்கு மரியாதை செய்ய அவளை மனைவியாக்கிக் கொண்டு வாழ்க்கை நடத்தும்போது ரசிக்க வைக்கிறார்.
ஒரு தலைக் காதலியாக வருகிற ஃபாத்திமா கிராமத்துப் பெண்ணுக்கான வெகுளித்தனத்தை தன் நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார்.
ஃபாத்திமாவின் தோழியாக வருகிற வைஷாலி ரவிச்சந்திரன் இளமையாக அழகாக கவர்ச்சியாக இருக்கிறார்; நன்றாக நடிக்கவும் செய்கிறார். ஸ்ரீராம் கார்த்திக்கிடம் ஃபாத்திமாவுக்கு பதிலாக தன்னை பயன்படுத்திக் கொள்ளச் சொல்லும்போது அவரது கேரக்டர் தரம் தாழ்கிறது.
தன் மகன் செய்கிற கிறுக்குத்தனங்களுக்கு துணைபோகிறவராக பிரியதர்ஷியின் செயல்பாடுகள் சிரிப்பையும் எரிச்சலையும் கலந்து தருகிறது.
கதாநாயகியின் காதலியாக மனிஷா ஸ்ரீ, சப் இன்ஸ்பெக்டராக லிவிங்ஸ்டன் என மற்றவர்களின் நடிப்பும் அபுபக்கரின் பின்னணி இசையும் ஆர் பாலகணேசனின் ஒளிப்பதிவும் கதையின் தேவையை நிறைவு செய்திருக்கிறது.
இறந்த பெண்ணுடன் கல்யாணம், குடித்தனம் என்றெல்லாம் கடந்தோடும் காட்சிகள் லேசாக வெறுப்பேற்றுவது போலிருந்தாலும்,
நடப்பதற்கு சாத்தியமா இல்லையா என்பதைத் தாண்டி இயக்குநர் ரமேஷ் இலங்காமணி அமைத்திருக்கும் கிளைமாக்ஸ் நெகிழ வைக்கிறது.
Rating 2.5 / 5


