1978 காலகட்டத்தில் நடக்கிற கதை. கவன ஈர்ப்புக்காக ‘மட்டுமே லெட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறதே தவிர, பிளாக் & ஒயிட் காலத்து எம் கே தியாகராஜ பாகவதருக்கும் என் எஸ் கிருஷ்ணனுக்கும் தொடர்புள்ள கொலை வழக்குக்கும் இந்த படத்தின் கதைக்கும் தொடர்பில்லை.
தொழில்முறை திருடன் அறிவுமதி சர்ந்தர்ப்ப சூழ்நிலையால் ஒருவரை கொலை செய்துவிட, தூக்கு தண்டனை வழங்கப்படுகிறது. தூக்கில் போட சில நிமிடங்களே இருக்கும்போது சிறைத்துறை அதிகாரியிடம் நான் செய்தது கொலையென்றால் என்னை துக்கில் போடுவதும் கொலைதான் என்கிறான். அவன் சொல்வது அதிகாரியை யோசிக்க வைக்கிறது.
இந்த நிலையில் ஆடியன்ஸ் தூக்கு தண்டனை ரத்தாகி விடும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கிக் கொள்வதை தவிர்க்க முடியாது. அப்படி எதிர்பார்ப்பது நடக்கிறதா? இல்லை துக்கு தண்டனை நிறைவேறுகிறதா என்பது மீதிக்கதை…
அறிவுமதி யாரை கொலை செய்தான், எதற்காக செய்தான் என்பதெல்லாம் பரபரப்பான ஃபிளாஷ்பேக்.
அறிவுமதியாக வெற்றி. திருடன், கொலை செய்வதற்கான அனைத்து தகுதிகளும் கொண்ட நபரை கொலை செய்தவன், மரண தண்டனையும் கொலைதான் என சிறையதிகாரி முன் துணிச்சலாக பேசுபவன்,பாசமான மகன், பிரியமான கணவன் என அவருக்கான பங்களிப்பை அலட்டிக் கொள்ளாத உடல்மொழியில் பரிமாறியிருக்கிறார்.
குற்றவாளியின் கருத்தை அவனது வாழ்நாளின் கடைசியிலும் காது கொடுத்துக் கேட்கும் பொறுமையான சிறை அதிகாரியாக ரங்கராஜ் பாண்டேவின் நடிப்பு இயல்பாக இருக்கிறது.
பிரிகிடா சகாவுக்கு வெற்றியின் காதலியாக, மனைவியாக மிகச்சில காட்சிகளில் தலை காட்டுகிற வேலை. வழக்கமான கிறங்கடிக்கும் சிரிப்பும் கேரக்டருக்கு பொருத்தமான நடிப்பையும் தந்து போகிறார்.
கந்து வட்டிக் கொடூரன், காமவெறியன் என ஏற்ற பாத்திரத்தில் கெத்து காட்டியிருக்கிறார் கவிதா பாரதி. படத்தின் திரைக்கதை, வசனத்திலும் பங்களித்திருக்கிறார்.
அம்மாவாக லிஸி ஆண்டனியின் நடிப்பு கவனம் பெறுகிறது. சித்தப்பு சரவணன், கன்யா பாரதி, இயக்குநர் சுப்ரமணிய சிவா, லொள்ளுசபா மாறன் என மற்றவர்களின் நடிப்பும், தர்புகா சிவாவின் பின்னணி இசையும், எம் வி பன்னீர்செல்வத்தின் ஒளிப்பதிவும் நேர்த்தி. பாடல்கள் கதையோட்டத்தில் கலந்திருக்கிறது.
தண்டனைகளில் தவிர்க்கப்பட வேண்டியது மரண தண்டனை என்பதை வலியுறுத்துகிற விதமாக தயாள் பத்மநாபன் இயக்கியிருக்கும் இந்த படம் சமூகத்தில் விவாதத்தை உருவாக்க வாய்ப்பிருக்கிறது.
Rating 3 / 5 

