மருத்துவ உலகில் நடக்கிற அநியாய அக்கிரமங்களை மையப்படுத்திய கதைகளின் வரிசையில் புதிய குற்றப் பின்னணியில் பரபரக்கும் ‘குற்றம் தவிர்.’
நாயகன் ரிஷி ரித்விக்கின் உடல்நிலை சரியில்லாத அக்கா ஆபரேசனுக்காக தனியார் மருத்துவமனையில் அட்மிட்டாகிறார். ஆபரேசன் தோல்வியில் முடிய இறந்து போகிறார். மனம் நொறுங்கிப் போகும் ரிஷிக்கு, அக்காவின் மரணத்தில் சந்தேகம் வருகிறது. நடந்தது என்ன என்பதை தெரிந்துகொள்ள மருத்துவமனைக்குள் நுழைகிறார். தன் அக்காவைப் போலவே ஏகப்பட்ட பேர் ஆபரேசன் தோல்வியால் இறந்திருக்கும் விவரம் கிடைக்கிறது.
அதிர்ச்சியடையும் ரிஷி, அப்படி அத்தனைப் பேரின் உயிரைப் பறிக்கிற அளவுக்கு மருத்துவமனையில் நடக்கும் சதி என்ன என்பதை தோண்டித் துருவுகிறார். அந்த களப்பணி, போலீஸ் வேலையில் சேர்வதை லட்சியமாக கொண்டிருக்கும் அவருக்கு தடையாக மாறுகிறது. அதையெல்லாம் தாண்டி அவர் என்ன கண்டுபிடிக்கிறார் என்பது கிளைமாக்ஸாக இருக்க, கண்டுபிடிப்பதற்குள் அவர் சந்திக்கும் சவால்கள், கஷ்ட நஷ்டங்கள் திரைக்கதையாகியிருக்கிறது.
ஆக்சன் ஹீரோவுக்கான தோற்றத்தோடும் உடற்கட்டோடும் வலம்வருகிற ரிஷி ரித்விக் அக்கா மீது பாசம் காட்டும்போது தென்றலாகவும், ஆபரேசன் என்ற பெயரில் அக்காவை திட்டமிட்டுக் கொன்றவர்களை பழிவாங்கும்போது புயலாகவும் மாறியிருக்கிறார்.
அக்காவாக வினோதினி வைத்தியநாதன். தனக்கிருக்கும் இதயப் பிரச்சனை தம்பிக்கு தெரிந்தால் போலீஸ் பணிக்கான அவனது முயற்சி தடைபடலாம் என்பதால் எதையும் தெரியப்படுத்தாமலிருப்பது, தன்னை அனாதை என்று ஹாஸ்பிடலில் சொல்லி அட்மிட்டாவது என களமாடி நெகிழ வைக்கிறார். வியாதி தருகிற அவஸ்தையை பொருத்தமான உடல்மொழியில் கொண்டு வந்து உருகவும் வைக்கிறார்.
ரிஷி ரித்விக்கின் காதலியாக, காவல்துறை அதிகாரியாக ஆராத்யா. அழகாக இருக்கும் அவருக்கு உணர்வுகளைக் கொட்டி நடிக்கவும் வருகிறது. பாடல் காட்சியில் நன்றாக ஆடவும் வருகிறது.
மருத்துவ மோசடியில் ஈடுபடுபவர்களாக சித்தப்பு சரவணன், ஆனந்த்பாபு. இருவரில் ஆனந்த்பாபுவின் வில்லத்தனத்தில் வீரியம் அதிகம். சாய் தீனா, சென்ராயன் என மற்றவர்களும் காட்சிகளின் வன்முறையில் பங்கெடுத்திருக்கிறார்கள்.
ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கின்றன. ஒளிப்பதிவாளர் ரோவின் பாஸ்கரின் உழைப்பில் காட்சிகள் தரம் கூடியிருக்கின்றன.
மருத்துவத் துறையில் உறுப்பு திருட்டு என்பது சகஜமாகிவிட்ட நிலையில், அரசின் மருத்துவக் காப்பீடு திட்டத்தை சாதகமாக்கி நடக்கும் மோசடிகளை தோலுரித்துக் காட்டுகிற பி.பாண்டுரங்கனின் கதையை எடுத்துக் கொண்டு,
அதிரடி ஆக்சன், எதிர்பாராத திருப்பங்கள் என விறுவிறுப்பு சேர்த்து காதல், காமெடி, சென்டிமெண்ட் கலந்து கமர்சியல் படமாக்கி ரசிகர்களை கவர முயற்சித்திருக்கிறார் இயக்குநர் எம்.கஜேந்திரா!

