யானைக்கும் மனிதனுக்குமான பாசப்பிணைப்பில் மற்றுமொரு படம். எடுத்து சிலபல வருடங்கள் கழித்து தடைகளைக் கடந்து திரையரங்குகளைச் சந்தித்திருக்கிற ‘கும்கி 2.’
கதாநாயகன் மதி சிறுவயதிலிருந்து வளர்க்கும் யானையை முதலமைச்சர் பலியிட திட்டமிட, அந்த திட்டத்தை தடுத்து யானையைக் காப்பாற்ற கதாநாயகன் என்ன செய்கிறான் என்பதே இயக்குநர் பிரபு சாலமன் தருகிற திரையனுபவம்.
யானையை பாசமாக வளர்ப்பது, யானையைப் பிரிந்து வருந்துவது, ஐந்தாறு வருடங்கள் கழித்து தனது பாசக்கார யானையைப் பார்த்து குதூகலமாவது, யானையை ஆபத்திலிருந்து காப்பாற்றத் துடிப்பது என கதைநாயகன் மதியின் நடிப்பு இயல்பாக இருக்கிறது.
மதியால் வளர்க்கப்படுகிற யானைக் குட்டியும் வளர்ந்த யானையும் அத்தனை அழகு. ஓவியம் வரைதல், விசிலடித்தல், எதிரிகளை தூக்கிவீசிப் பந்தாடுதல் என அந்த யானைகளை ரசிக்க சிலபல விஷயங்கள் இருக்கின்றன.
மதியின் இளவயது கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் சிறுவனுக்கும் யானைக்கும் தொடர்பு உருவாகும் விதமும், சிறுவன் யானை மீது பாசம் காட்டும் விதமும் மனதைக் கொள்ளையடிக்கிறது.
கொடுக்கப்பட்டிருக்கும் சில காட்சிகளில் நம்ப வைத்துக் கழுத்தறுக்கும் வில்லத்தனத்தை அலட்டலின்றி செய்து கவனிக்க பெறுகிறார் அர்ஜுன்தாஸ்.
அரசியல் எதிரிகளை அழித்து பதவியை தக்க வைப்பதற்காக யானையை பலியிட திட்டமிடும் முதலமைச்சராக பெராரா, அவரது பலித்திட்டம் நிறைவேற ஸ்கெட்ச் போடுகிறவர்களாக ஹரிஷ் பெராடி, ஆகாஷ் உள்ளிட்டோர் ஏற்ற கேரக்டருக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள்.
ஷ்ரிதா ராவ் காட்டுக்குள் எழுகிற சப்தங்களை ஒலிப்பதிவு செய்கிறவராக வந்து, இயல்பான நடிப்பைத் தந்து கதையின் திருப்பத்துக்கு காரணமாகிறார். மைனா சூசன், ஆண்ட்ரூஸ், திருச்செல்வம், நடக்கல் உன்னிகிருஷ்ணன் என பலரும் கதையில் கலந்து வலம் வருகிறார்கள்.
பொட்டல் காட்டைக்க்கூட அழகாக காட்டிவிடுகிற எம் சுகுமாரிடம் அடர்ந்த காடு, அருவி, மலை என கண்ணுக்கு குளிர்ச்சியான பசுமையான லொகோசனில் கேமராவை வைக்கச் சொன்னால் காட்சிகள் தரம் உயரத்தான் செய்யும். அது இந்த படத்திலும் நிகழ்ந்திருக்கிறது.
நிவாஸ் கே பிரசன்னா இசையில் பாடல்கள் மனதில் தங்க மறுக்கின்றன. பின்னணி இசை கதையோட்டத்துக்கு பலம் தந்துள்ளது.
விக்ரம் பிரபு நடித்த ‘கும்கி’க்கும் இந்த இரண்டாம் பாகத்துக்கும் கதையளவில் தொடர்பு இல்லை; அதிலிருந்த ஆழமான கதை, உயிரோட்டமான காதல், இன்றைக்கும் ரசித்துச் சிரிக்க முடிகிற காமெடி என எதுவும் இதில் இல்லை. படம் பார்த்து முடித்தபின் இதை பார்த்ததற்கு பதிலாக அந்த ‘கும்கி’யையே திரும்பவும் ஒருமுறை பார்த்திருக்கலாமே என்று தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.
Rating 3 / 5


