வறட்சிக்குப் பேர்போன ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் தண்ணீர்ப் பஞ்சத்திற்கு தீர்வுகாண கிணறு தோண்டுகிறார்கள். அதிகபட்சம் 20 அடி தோண்டியிருப்பார்கள். பல்லாயிரம் ஆண்டுகள் முன் வாழ்ந்ததாக சொல்லப்படும் டைனோசரின் எலும்புக்கூடு கிடைக்கிறது. அதன்பின், அதுவரை தோண்டிய கிணறு மட்டுமல்ல; அந்த கிராமமே தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. மேற்கொண்டு கிணறு தோண்டுவது சாத்தியமில்லை என்பதோடு, அங்கு வசிக்கும் மக்கள் அந்த கிராமத்திலிருந்து வெளியேற வேண்டும் என்பது போன்ற சூழ்நிலையும் உருவாகிறது.
அந்த ஊரின் கோயில் பூசாரி அப்படியெல்லாம் வெளியேற முடியாது, இது எங்கள் மண், நாங்கள் இங்குதான் வாழ்வோம்’ என்ற முடிவுக்கு வருவதோடு, மக்களையும் தன் முடிவுக்கு ஆதரவாக திரட்டுகிறார்.
அவரது முடிவால் ஊருக்கு நல்லது நடக்கிறது. அது எப்படி நடக்கிறது என்பதை காமெடி கலாட்டாக்களுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் சங்கையா.
கிணறு தோண்ட தனக்கு சொந்தமான இடத்தை கொடுப்பதோடு, தான் வசிக்கும் ஊர் மக்களுக்கு அரசாங்கம் மூலம் தண்ணீர் வசதி உள்ளிட்ட வசதிகள் கிடைக்க புத்திசாலித்தனமான செயல்பாடுகளில் ஈடுபடுவது வரை பூசாரியாக வருகிற யோகிபாபு அவரது வழக்கமான ஸ்டைலில் தெனாவட்டான உடல்மொழியோடு வலம் வருகிறார்.
யோகிபாபு அவரை விரும்புகிறார்; அவரும் நேசிக்கிறார் என்பதை தவிர லவ்லின் சந்திரசேகரிடமிருந்து கவனம் ஈர்க்கும்படி எதுவுமேயில்லை.
ஊர் மக்களாக வருபவர்கள், ஊர்த்தலைவராக வருபவர், மக்களில் ஒருவராக ஹலோ கந்தசாமி என ஒட்டுமொத்த கேரக்டர்களும் மண்மணம் மாறாத காமெடி பங்களிப்பிலும், அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு ஆளாகி ரத்தம் சிந்துபவர்களாகவும், மக்களாகிய நாங்கள் ஓரணியாக களமிறங்கினால் அரசாங்கம் வழிக்கு வரும் என்பதற்கு உதாரணமாகவும் களமாடியிருக்கிறார்கள்.
அகழ்வாராய்ச்சித் துறை அதிகாரிகளாக வருகிற ரேச்சல் ரெபாக்கா சார்ந்திருக்கும் பணிக்கு நியாயமாக நடந்துகொள்ள, ரேச்சலுக்கு அஸிஸ்டண்டாக வருகிற ராமகிருஷ்ணன் நியாயம் எதுவோ அதன் பக்கம் நின்று தன் கேரக்டரை மதிக்கும்படி செய்கிறார்.
வறட்சியான நிலப்பரப்பு, களிமண் சுவர்கள் தாங்கி நிற்கும் வீடுகள் என முழுக்க முழுக்க மண்மணம் மாறாத கதைக்களம், அதில் திரும்பிய பக்கமெல்லாம் பாவப்பட்ட வெள்ளந்தி மனிதர்கள் என நிரம்பியிருக்க, ஒளிப்பதிவாளர் வி. தியாகராஜன் எதன் தன்மையும் கெடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
நிவாஸ் கே பிரசன்னா இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். பின்னணி இசை ஓரளவு படத்தை தாங்கியிருக்கிறது.
சீரியஸாக எடுத்திருக்க வேண்டிய படத்தை காமெடி கலாட்டாக்களால் ஆக்கிரமித்திருப்பது குறையாக தெரிந்தாலும், ஆராய்ச்சிகள் எதுவானாலும் அது மக்களை துன்புறுத்துவதாக இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்திய விதத்தில் கெணத்த காணோம் சமூகத்திற்கு அவசியமான படைப்பு என்ற வரிசையில் இணைகிறது!
Rating 3 / 5


