அதிவேகமாக சீறிப்பாயும் பல்சர் பைக்கில் ஜல்லிக்கட்டுக் காளையொன்றின் ஆன்மா புகுந்துகொண்டால், அதன் வேகம் வெறித்தனமாகத்தானே இருக்கும்? அப்படியொரு அனுபவத்தை தருகிற படம் இது.
பைக்கில் காளையின் ஆன்மா புகுந்தது எப்படி என்பது பரபரப்பான பயங்கரமான ஃபிளாஷ்பேக். அந்த பைக் ஹீரோவிடம் வந்து சேர்ந்து, அதனால் அவர் சில பிரச்சனைகளைச் சந்திப்பது, விபத்தில் சிக்குவது என பயணிக்கும் திரைக்கதை பிரச்சனைகளில் இருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார் என்பதைக் காண்பித்து நிறைவுக்கு வருகிறது.
பல்சரால் பாதிப்புக்கு ஆளாகும் நபராக தினேஷ். காதலில் விழும் இளைஞன், ஜல்லிகட்டில் காளையை அடக்கும் வீரன் என இருவேறு விதமாக வெளிப்படுகிறார். செய்கிற எல்லாமும் கதாபாத்திரங்களுக்கும் பொருத்தமாக கச்சிதமாக இருக்கிறது.
தினேஷின் காதலியாகவருகிற ரேஷ்மா வெங்கடேஷும் அவரது கொஞ்சலும் மிஞ்சலுமாக நடிப்பும் அழகு.
மன்சூர் அலிகானிடம் ‘நீங்க ஹீரோவை கொல்ல முயற்சி செய்கிற வில்லன்; உங்க வில்லத்தனத்தில் காமெடி இருக்கணும்’ என்று சொல்லி வேலை வாங்கப்பட்டிருக்கிறது. அவர் சொன்னதை புரிந்து நடித்திருப்பதை பார்க்க முடிகிறது.
பிரதான வில்லனாக, சாதி வெறியனாக அலட்டல் அதிகமில்லாமல் மிரட்டியிருக்கிறார் அர்ஜய். கதையின் இன்னொரு கதாநாயகியான மதுனிகாவின் பங்களிப்பும், மற்றவர்களின் நடிப்பும் நேர்த்தி.
பாஸ்கர் ஆறுமுகத்தின் ஒளிப்பதிவு, இன்பாவின் இசை உள்ளிட்டவை படத்தின் பலம்.
சாதி வெறிக்கு பலியாகும் மனித உயிர்களை மையமாக வைத்து பல படங்கள் வந்திருக்கின்றன. அந்த வரிசையில் இணைகிற படைப்புதான் என்றாலும், ‘ஜல்லிக்கட்டு களத்திலும் ஜாதி வெறி பரவியிருக்கிறது’ என்று எடுத்துச் சொல்லி தனித்துவம் பெறுகிறது முரளி கிருஷ் இயக்கியிருக்கும் இந்த கருப்பு பல்சர்.
Rating 3.5 / 5


