சரியாக படிக்காததால் போஸ்டர் ஒட்டுவது, இடியாப்பம் விற்பது என கிடைத்த வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் கதாநாயகனுக்கு (சென்றாயன்), வங்கி அதிகாரி ஒருவரின் மகள் மீது காதல் உருவாகிறது. அவளுக்கு அவனையும் அவனது வேலைகளையும் பிடிக்கவில்லை. காதலை ஏற்க மறுக்கிறாள்.
கதை இப்படி துவங்கும்போது, அந்த பெண்ணின் பணக்கார அப்பன் வில்லனாக மாறி அந்த காதலனை போட்டுப் பொளக்கப் போகிறார் என்று நினைத்தால், அப்படியெல்லாம் எதுவும் நடக்காமல் அந்த காதலன் அந்த பெண்ணை சம்மதிக்க வைக்க சிலபல விஷயங்களைச் செய்வதாக, அதாவது காக்கா பிடிப்பதாக கதை சுவாரஸ்ய ரூட்டில் வேகமெடுக்கிறது.
அவன் எப்படியெல்லாம் காக்கா பிடிக்கிறான், அதனால் என்னென்ன பிரச்சனைகளைச் சந்திக்கிறான் என்பதை கடந்து அவனது காதலுக்கு சம்மதம் கிடைத்ததா இல்லையா என்பது கதையின் மீதி…
தனது காதலியின் அக்காவின் கல்யாணம் நின்று போனது தெரிந்து, அதை நடத்தி வைக்க சம்பந்தப்பட்ட மாப்பிள்ளையைப் பார்த்துப் பேசலாம் என்று போய், மாப்பிள்ளையின் ரவுடித்தனத்தைப் பார்த்து தலை தெறிக்க ஓட்டமெடுப்பது,
யார் யாருக்கோ காதலியின் வீட்டு அட்ரஸ் கொடுத்து யார் யாரோ காதலியின் அக்காவை பெண் பார்க்க போனதன் விளைவாக காதலிடம் அடிபட்டு மிதிபடுவது என சென்றாயணின் பெர்ஃபாமென்ஸ் பல இடங்களில் ரசிக்க வைக்கிறது.
சென்றாயனின் லவ் டார்ச்சருக்கு ஆளாகி வெறுப்படைவது, அவரை கழட்டிவிட முயற்சிப்பது, அவரது உழைப்பை மதித்து காதலுக்கு கிரீன் சிக்னல் கொடுப்பது என சாய் தன்யாவின் நடிப்பு அளவாகவும் அவரை போல அழகாகவும் இருக்கிறது.
அவரது அக்காவாக வருகிற ரோஸ்மினுடைய மனதுக்கு பிடித்தவராக வருவது ரம்மி பட நாயகன் இனிகோ பிரபாகர். குறைவான காட்சிகள் என்றாலும் இனிமையான காதலனாக நிறைவான நடிப்பைத் தந்திருப்பவர், மரக்கன்று நடுவதை சேவையாக செய்பவராக களமாடி முன்னுதாரண மனிதனாகவும் மாறுகிறார்.
ரோஸ்மினை கல்யாணம் செய்துகொள்ள தயாராகி, தாலி கட்ட மணமேடைக்கு வர முடியாத அளவுக்கு குடிபோதையில் மிதப்பதில் ஆரம்பித்து, கல்யாணம் நின்றபின் சம்பந்தப்பட்ட பெண் வீட்டுக்கு போய் அடிபட்டு கன்னம் வீங்குவது வரை தனக்கான காமெடி வில்லன் கேரக்டரில் ரகளையாக நடித்திருக்கிறார் தேனி கே பரமன். படத்தை ரசித்துச் சிரித்து பார்க்கும்படி எழுதி இயக்கியிருப்பவரும் அவரே.
அவருக்கு நிச்சயிக்கப்பட்டு, திருமணம் நின்று மன உளைச்சலுக்கு ஆளாகி அதற்கு ஆறுதலாக இனிகோ பிரபாகருடன் பழகி அவருக்கு மனைவியாகிற ரோஸ்மினும் கவரும்படி நடித்திருக்கிறார்.
முனிஸ்காந்த் நான்கைந்து காட்சிகளில் மட்டுமே வருகிறார். மனதை உற்சாகப்படுத்தி சிரிக்க வைக்கிறார். அவருக்கு மனைவியாக வருகிற திருச்சி சாதனாவுடனான முதலிரவுக் காட்சி அதிரிபுதிரி ரகம்.
மகாநதி சங்கர், அப்புக்குட்டி, கூல் சுரேஷ் என மற்றவர்கள் கதைக்கு தேவையானதை செய்திருக்க, எளிமையான ஒளிப்பதிவில் காட்சிகளை தரமாக்கி தந்திருக்கிறார் சுரேஷ்குமார்.
கெவின் டி கோஸ்டாவின் பின்னணி இசை கதையின் நகர்வுக்கு பொருத்தம். அவரது இசையில் இரண்டு பாடல்கள் இதமூட்டும்.
சாதாரண கூலித் தொழிலாளி தன் மனதுக்கு பிடித்த பெண்ணின் மனதைக் கொள்ளையடிக்க என்னவெல்லாம் செய்கிறான் என்கிற சிம்பிளான கதையை எடுத்துக்கொண்டு, அதில் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு நகைச்சுவை மசாலா சேர்த்துக் கொண்டிருக்கும் காக்கா தியேட்டரில் குடும்பத்தோடு பார்ப்பதற்கு ஏற்ற இந்த புத்தாண்டின் முதல் சாய்ஸ்!
Rating 3 / 5


