பிரியா பவானி சங்கர், எம் எஸ் பாஸ்கர், தம்பி ராமையா, அஸ்வின், பவானிஸ்ரீ, பிரிகிடா சகா உள்ளிட்டோர் நடிப்பில் ‘ஹாட் ஸ்பாட் 2 ‘ மச்’ திரைப்படம் கடந்த ஜனவரி 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இதனால் உற்சாகமடைந்த படக்குழுவினர் வெற்றி விழாவை சென்னையில் ஒருங்கிணைத்தனர்.
விழாவில் பேசிய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், ” ஹாட்ஸ்பாட் டூ மச் படம் வெளியாகி இன்றுடன் ஆறு நாள் ஆகிறது. அதற்குள் ஏன் சக்சஸ் மீட்? என கேட்டார்கள். ஹாட்ஸ்பாட் படத்தின் முதல் பாகம் குறைவான திரையரங்குகளில் வெளியாகி, ஐந்து வாரங்கள் வெற்றிகரமாக ஓடியது. பெரும் வரவேற்பும் இருந்தது. ஹாட்ஸ்பாட் படத்தின் முதல் பாகத்தின் ஒட்டுமொத்த வசூல் எவ்வளவோ.. அதைவிட இரண்டு மடங்கு இப்படம் வெளியான நான்கு நாளில் வசூலித்திருக்கிறது. அந்த வகையில் இந்தப் படம் எங்களுக்கு வெற்றி தான். அதனால் தான் இந்தப் படத்திற்கு ஆறாவது நாளில் நம்பிக்கையுடன் வெற்றி விழாவை ஒருங்கிணைத்திருக்கிறோம். இந்த வெற்றிக்கு காரணமான ரசிகர்கள்- ஊடகங்கள் – விநியோகஸ்தர்கள்- திரையரங்கு உரிமையாளர்கள் – உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படத்தில் என்னுடன் பணியாற்றிய படத்தொகுப்பாளர் – ஒளிப்பதிவாளர்கள்- கலை இயக்குநர் – இசையமைப்பாளர் – தயாரிப்பு நிர்வாகி – நடிகர்கள் ராபின், அஸ்வின் குமார், ஆதித்யா பாஸ்கர் ரக்சன், பிரியா பவானி சங்கர், ஆதித்யா கதிர், பவானி ஸ்ரீ, பிரிகிடா சகா, சஞ்சனா திவாரி மற்றும் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய எல்லா திரைப்படங்களிலும் முதல் நன்றி ‘குறிஞ்சி’ என்பவருக்கு இருக்கும். இவர்தான் 2013 ஆம் ஆண்டில் எனக்கு இரண்டு லட்ச ரூபாயை கொடுத்து ‘முதல் கனவே’ எனும் என்னுடைய முதல் குறும்படத்தை தயாரித்தவர். அவர் கொடுத்த ஊக்கம் தான் இன்று ஹாட்ஸ்பாட் டூ மச் வரை தொடர்கிறது. அவருக்கு நன்றி தெரிவிப்பது என்னுடைய அனைத்து படங்களிலும் தொடரும்.
இப்படத்தின் விமர்சனங்களில் நாங்கள் இரண்டு குறிப்பிட்ட நட்சத்திரங்களின் ரசிகர்களைத்தான் சுட்டிக் காட்டி இருக்கிறோம் என்று இடம்பெற்று இருந்தது. இது தவறு. பொதுவாகவே ரசிகர்களைப் பற்றிய பார்வை தான் இது. அதனை இரண்டு நட்சத்திரங்களின் வழியாக சொன்னால் நன்றாக இருக்கும் .. எளிதாக புரியும் என்பதாகத்தான் விவரித்து இருக்கிறோம்.
டோனி ரசிகர்கள் கோலியை வசைபாடுவதும், கோலியின் ரசிகர்கள் தோனியை வசை பாடுவதும் இணையத்தில் தொடர்கிறது. ஒரு இசை அமைப்பாளரின் ரசிகர்கள் மற்றொரு இசையமைப்பாளரை விமர்சிக்கிறார்கள். இவை அனைத்தையும் ஒன்றிணைத்து தான் நாங்கள் ரசிகர்களின் கோணத்தில் அவர்களுடைய உணர்வாக பேசி இருக்கிறோமே தவிர.. குறிப்பிட்ட இரண்டு நட்சத்திரங்களின் ரசிகர்களை பற்றி நாங்கள் ஒருபோதும் எங்கும் குறிப்பிடவில்லை.
அதே சமயத்தில் தம்பி ராமையா பேசும் வசனங்கள் தொடர்பாகவும் இணையத்தில் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் விமர்சனங்கள் இடம் பிடித்திருக்கிறது. ஒரு படம் பிடித்திருக்கிறது என்பதும் ஒரு படம் பிடிக்கவில்லை என்பதும் படத்தை பார்த்த ஒவ்வொரு ரசிகர்களின் தனிப்பட்ட கருத்து. இதை நாங்கள் மதிக்கிறோம். வரவேற்கிறோம். ஆனால் பெண்ணியவாதிகள் சிலர் தங்களின் கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து கொள்கிறார்கள். ஆனால் இவர்கள் இந்த திரைப்படத்தை முழுமையாக பார்க்காமல்.. இணையத்தில் வெளியான துண்டு காணொளிகளை மட்டும் பார்வையிட்டு சில சூடோ ஃபெமினிஸ்ட்டுகள் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்கள். இது தவறு. அவர்கள் இந்தப் படத்தை முழுமையாக பார்த்துவிட்டு தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
ஒரு படைப்பை பற்றிய விமர்சனங்களை முன் வைப்பதற்கு எப்படி பார்வையாளர்களுக்கு முழு உரிமை இருக்கிறதோ… அதே போல் ஒரு படைப்பை எப்படி வழங்கிட வேண்டும் என்பதில் படைப்பாளனாகிய எனக்கும் முழு உரிமை உள்ளது.
நான் என்னுடைய மனசாட்சிக்கு உட்பட்டு எனக்குத் தெரிந்த வகையில் நிறைய மக்களுடன் விவாதித்து அதனை எப்படி குழப்பம் இல்லாமல் தெளிவாக மக்களுக்கு வழங்கிட இயலும் என்பதையும் எப்படி சமூக பொறுப்புடன் இதனை சொல்ல வேண்டும் என்பதையும் மனதில் வைத்து தான் இந்த படைப்பை உருவாக்கி இருக்கிறேன். ஒரு படைப்பாளனாக ஒரு படைப்பை உருவாக்குவதற்கு எனக்கு முழு சுதந்திரமும், உரிமையும் உண்டு என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்” என்றார்.
நடிகர் அஸ்வின் குமார், நடிகைகள் பவானிஸ்ரீ, பிரிகிடா சகா, சஞ்சனா திவாரி,
தயாரிப்பாளரும் நடிகருமான கே.ஜே. பாலாமணி மார்பன் ஒளிப்பதிவாளர் ஜோசப் பால் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.

