அளவுக்கு மீறி கடன் வாங்கினால் அதன் விளைவு நிச்சயமாய் விபரீதம்தான். இந்த, யாராலும் மறுக்க முடியாத கருத்தை காலத்துக்கேற்ப எடுத்துச் சொல்லியிருக்கும் படம். அசத்தலான சைக்கலாஜிகல் திரில்லராக விரிகிற ‘கேம் ஆஃப் லோன்ஸ்.’
மனைவி, மகனோடு வசிக்கிற டேனியல் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுகிறார். தோல்வியடைகிறார். ஒரு ஆப் மூலம் கடன் பெறுகிற வசதி இருப்பதை அறிந்து லட்சக்கணக்கில் கடன் பெறுகிறார். அதை வைத்து மீண்டும் மீண்டும் சூதாடுகிறார். வாங்கிய கடன் பல லட்சங்களாக கூடிவிட, எந்த வழியில் முயற்சி செய்தாலும் திருப்பிக் கட்ட முடியாத நிலைமை.
கடன் கொடுத்த நிறுவனம் அவரிடம் கடனை வசூலிக்க இரண்டு பேரை அனுப்புகிறது. அவர்கள் டேனியலிடம் நடந்து கொள்ளும் முறை குற்றவாளிகளிடம் அராஜக போலீஸ்காரர்கள் நடந்து கொள்வதைப் போல் முரட்டுத்தனமாக இருக்கிறது. அப்படியெல்லாம் நடந்து கொண்ட பிறகு அவரிடமிருந்து பணத்தைப் பெற முடியாது என்பதை தெரிந்து கொள்ளும் அவர்கள், டேனியலை தற்கொலை செய்து கொள்ள சொல்கிறார்கள். டேனியலுக்கு அவர்கள் சொல்வதை செய்வதை தவிர எந்த வழியும் இருப்பதாக தெரியவில்லை.
கதை இப்படி பதற்றமான கட்டத்தை எட்டியபின், டேனியல் என்ன முடிவெடுக்கிறார்? கடனை வசூலிக்க முடியாத நிலையில் சம்பந்தப்பட்டவரை தற்கொலை செய்துகொள்ள சொல்வதற்கு என்ன காரணம்? என்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லி முடிவுக்கு வருகிறது கேம் ஆஃப் லோன்ஸ்.
டேனியலாக நிவாஸ் ஆதித்தன். கடனில் சிக்கி மீள முடியாதவர்களின் பரிதாப நிலைமையை மிகச்சரியாக தன் நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார். ஏற்கனவே பெற்ற கடனே பெரியளவில் நெருக்கடியைக் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலைமையில், கடனை வசூலிக்க வந்தவர்களிடம் சூதாடி தோற்பது கதையில் பரபரப்பைக் கூட்டுகிறது.
கடனை வசூலிக்கும் ஏஜென்டாக வருகிற அபிநய், மாஸ் ஹீரோக்களின் படங்களில் வருகிற ஸ்மார்ட்டான வில்லன்களைப் போல் உருட்டி மிரட்டும் நடிப்பால் கவனிக்க வைக்கிறார். அவருடைய உதவியாளராக வருகிற ஆத்விக் அடிக்கடி தன் மனைவியுடன் போனில் பேசுவது படத்தில் காமெடி இல்லாத குறையைப் போக்குகிறது.
நிவாஸின் மனைவியாக வருகிறவருக்கு சில நிமிடங்கள் மட்டுமே நடிக்கிற வாய்ப்பு. அதை பயன்படுத்தி பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளும் கணவனைக் கண்டிப்பதும், உடனடியாக கனிவு காட்டுவதுமாய் இயல்பாக நடந்து கொள்கிறார்.
கதை முழுவதும் ஒரு வீட்டுக்குள்ளேயே நடந்தாலும் ஆடியன்ஸை சோர்வுக்குள் தள்ளாதபடி கேமரா கோணங்களை அமைத்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார் சபரி. ஜாய் கோஸ்டாவின் பின்னணி இசை காட்சிகளுக்கு சுறுசுறுப்பு தந்திருக்கிறது.
படத்தின் நீளம் ஒன்றரை மணி நேரம்தான். பொருட்செலவு மிகமிக குறைவுதான். கேரக்டர்கள் என்று பார்த்தால் நான்கைந்து பேர்தான். அளவுக்கு மீறி கடன் வாங்கியவன் அவஸ்தைப் படுகிற கதையும் பழகியதுதான். இந்த எளிமையான கட்டமைப்பை வைத்துக் கொண்டு ‘ஆன்லைன் கேம்ல சிக்கி சீரழியாதீங்க’, ‘லோன் எந்த விதத்தில் வாங்கினாலும் சிக்கல்தான்; ஆப் மூலம் வாங்கும்போது ஆபத்தின் சதவிகிதம் அதிகமாக இருக்கலாம்’ என்கிற விழிப்புணர்வை விதைத்து, படத்தை சமூக அக்கறைமிக்க படைப்பாக்கியிருக்கிறார் இயக்குநர் அபிஷேக் லெஸ்லி.
Rating 3.5 / 5

கதையின் கேரக்டர்கள் அவ்வளவுதான். அவர்களை வைத்துக் கொண்டு கடன் பெறுபவர்கள்

