எம்ஜியாரால் புதிய பூமி திரைப்படம் மூலம் கதாசிரியராக அறிமுகப்படுத்தப்பட்டவர் வி.சி.குகநாதன். தொடர்ந்து தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, மராத்தி, குஜராத்தி, ஒரியா, தெலுங்கு , கன்னடம், மலையாள திரைப்பட உலகில் கதை, திரைக்கதை எழுதிய குகநாதன் அந்த மொழிகளில் திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். ஏறக்குறைய அனைத்து மொழிகளிலும் 360 படங்களுக்கு மேல் இவரது பங்களிப்பு உள்ளது. இவர் பெப்சி அமைப்பின் முன்னாள் தலைவரும்கூட.
அப்படியான புகழுக்கும் பெருமைக்கும் சொந்தக்காரரான வி சி குகநாதன் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கன்னட மற்றும் தெலுங்கு பட உலகில் தனது கதைகளை படமாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். படங்களை தமது விக்டரி மூவீஸ் சார்பில் தயாரிக்கவுள்ளார். அதற்காக அங்கு முன்னணி கதாநாயகர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.
துவங்கியுள்ள முயற்சிகள் பற்றி அவரிடம் பேசியபோது, ”நல்ல கதையம்சம் உள்ள படங்கள் கன்னடம் மற்றும் தெலுங்கு பட உலகில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இன்றைய சமூகம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர், வாட்ஸ் அப் ஆகிய வலை தளங்களில் மூழ்கி உள்ளது. இளைய சமூகத்தினர் அனைவரும் சோஷியல் மீடியாக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். டிஜிட்டல் மயமான இந்த மாய உலகில் அவர்களை தியேட்டர்களுக்கு வந்து படம் பார்க்க வைப்பது ஒரு சவாலான காரியம்தான். அதனால் அவர்களுக்காகவே கதைகளை தயார் செய்து இருக்கிறேன்.
அதற்காக கன்னட, தெலுங்கு நடிகர்களிடம் கால்ஷீட் வாங்கி படத்தை தயாரிக்கிறேன். கணினி மயமான இந்த காலகட்டத்தில் தேவைகளை அதிகரிக்க செய்து அதை வாங்க செய்ய பல யுக்திகளை கையாளும் கார்பரேட் உலகில் அதையும் தாண்டி உள்ள தேவைகளை மையப்படுத்தி கதைகளை உருவாக்கியிருக்கிறேன்” என்றார்.

