ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில், ரக்ஷிதா மஹாலஷ்மி, அபி நட்சத்ரா, ஆனந்த் நாக், அம்ரிதா ஷெல்டர், சிவம் நடிப்பில் சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியுள்ள ‘எக்ஸ்டிரீம்’ திரைப்படம் வரும் டிசம்பர் 20-ம் தேதி வெளியாகவுள்ளது. முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
நிகழ்வில் பேசிய படத்தின் இயக்குநர் ராஜவேல், ”எனது பிழை படத்தை சென்னையில் ஒரு வாரம் கஷ்டப்பட்டு ஓட வைத்த என் முதல் பட தயாரிப்பாளர் தாமோதரன் அவர்களுக்கு நன்றி. என் வாழ்வில் முக்கியமானவர் சிவம் சார் அவர் தான் இந்தப்படத்தின் தயாரிப்பாளர்கள் கமலகுமாரி, ராஜ்குமார் அவர்களிடம் அழைத்துச் சென்றார். முதலில் ஒரு ஷார்ட் ஃபிலிம் தான் எடுத்தோம் அதற்கே ராஜ்குமார் சார் என்ன கேட்டாலும் தருவார், இந்தப்படத்திற்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்துள்ளார். என் டீம் எனக்காக எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுப் பார்த்தனர். அனைவருக்கும் நன்றி. ஒரு குறுகிய காலத்தில், சின்ன பட்ஜெட்டில் படம் செய்ய முடிந்ததற்குக் காரணம் இவர்கள் தான்.
பெண்களுக்கான படம் இது, தப்பாகப் போய்விடக்கூடாது என்று தயாரிப்பாளர் தெளிவாக இருந்தார். நானும் கண்டிப்பாகத் தவறாகிவிடாது எனச் சொன்னேன். இன்று ஆடியன்ஸ் மாறிவிட்டனர் ஆனால் திரையரங்குகள் மாறவில்லை. பெரிய அளவில் திரையரங்குகள் கிடைக்காத போதும் வெளியூர்களில், எனது தூவல் படம், இரண்டாவது வாரம் நன்றாக ஓடுகிறது. ஆனால் சென்னையில் திரையரங்குகள் தரவில்லை. உலகநாடுகள் முழுதும் 40 விருதுகள் வழங்கி அங்கீகரித்த திரைப்படம், இங்கு மக்கள் ஆதரவு இருந்தும், திரையரங்குகள் தராதது மிகுந்த வருத்தமளிக்கிறது. அவர்கள் நல்ல படத்திற்குத் திரையரங்குகள் தருவதில்லை. நல்ல திரைப்படங்களைத் திரையிடுங்கள்.
எனக்கு இந்தப்படத்தில் கிடைத்த வரம் ரக்ஷிதா மேடம் தான், அவருக்குள் ஒரு இரும்புப் பெண் இருக்கிறார். உப்புக்கருவாடு படத்தில் கலக்கியிருந்தார் அதைப்பார்த்துத் தான் நான் அவரை இப்படத்திற்குத் தேர்ந்தெடுத்தேன். அபி நட்சத்திரா, ஆனந்த் நாக் எல்லோரும் நல்ல நடிப்பை வழங்கியுள்ளனர். தயாரிப்பாளருக்கு வெற்றி வரவேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம். அதை மனதில் வைத்துத் தான் உழைத்துள்ளோம்.
‘எக்ஸ்டிரீம்’ என்றால் உச்சக்கட்டம், தீவிரம், அளவுக்கு அதிகம்னு சொல்லுவோம்.
எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு. ஆனால் அதை மீறும்போது நடக்குற விளைவுதான் இந்த படத்தின் கதை. ஒரு நல்ல படைப்பு அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி” என்றார்.
நடிகை ரக்ஷிதா மஹாலட்சுமி ”பிக்பாஸ் முடிச்சு வந்தபோது தான் இயக்குநர் எனக்கு போன் செய்தார். அவருக்கு முதலில் என்னை யாரென்று தெரியவில்லை. எனக்கு லுக் டெஸ்ட் எல்லாம் வைத்தார். அவருக்கு என்ன வேண்டும் என்பதில், மிகத் தெளிவாக இருந்தார். அவருக்கடுத்து சிவம் மிகக் கடினமாக உழைத்துள்ளார். இந்தப்படத்தில் மியூசிக் மிக அற்புதமாக வந்துள்ளது. டிரெய்லர் பார்த்த எல்லோரும் பாராட்டினார்கள். நான் நடிக்காமலிருந்தாலும் இந்தப்படத்தை வியந்து பார்த்திருப்பேன். அந்தளவு நல்ல கதையம்சம் உள்ள படம். எல்லோரும் எவ்வளவு கடுமையாக இப்படத்திற்காக உழைத்துள்ளனர் என அருகிலிருந்து பார்த்துள்ளேன். படம் மிக அருமையாக வந்துள்ளது. உங்கள் ஆதரவைத் தாருங்கள்” என்றார்.
நடிகை அபி நட்சத்திரா, தயாரிப்பாளர் கமலா குமாரி, இசையமைப்பாளர் ராஜ் பிரதாப், பிழை பட தயாரிப்பாளர் தாமோதரன், இயக்குநர்கள் ஆர் வி உதயகுமார், பேரரசு, ராஜகுமாரன், தயாரிப்பாளர் கே ராஜன் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.

