மக்களுக்கெதிரான அரசாங்கத்தின், தனியார் நிறுவனங்களின் அராஜக நடவடிக்கைகளை மையப்படுத்தி உண்மைச் சம்பவ பின்னணியில் உருவாகும் படங்களின் வரிசையில் ‘டீசல்.’
கச்சா எண்ணெயை திருடி, அதை வைத்து நேர்மையாக ஒரு பிஸினஸ் செய்து வருகிறார் படத்தின் நாயகன் ஹரிஷ் கல்யாண். அவரை போலவே கச்சா எண்ணெயை திருடி நேர்மையற்ற வழியில் பிஸினஸ் செய்கிறார் ஒருவர். அவர்களை வைத்து ஒரு கார்ப்பரேட் மாபியா அசுரத்தனமாக வளர்கிறான். அவனால் மீனவ மக்கள் வசிக்கும் பகுதிக்கு பேராபத்து உருவாகும் சூழ்நிலை. அதை தடுக்க களமிறங்கும் ஹரிஷ் கல்யாண் என்னவெல்லாம் செய்கிறார், என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார், எப்படி நினைத்ததை சாதிக்கிறார் என்பது டீசலின் திரைக்கதை…
கச்சா எண்ணெய் பரிமாற்றத்துக்காக ராட்சதக் குழாய் பதிக்கப்பட்டு வட சென்னை மீனவ மக்களின் பிழைப்பில் மண்ணள்ளிப் போட்ட வலிமிகு வரலாறை துவக்கக் காட்சியில் விளக்கும்போது மனம் ரணமாகிறது… இயக்கம் சண்முகம் முத்துசாமி
நேர்மையற்ற தொழில் செய்துகொண்டு, அதேபோல் நேர்மையற்ற தொழில் செய்பவரை எதிர்ப்பவர் கதையின் நாயகன் என்பது அவ்வளவாக மனதைக் கவரவில்லை என்றாலும், ஒரு கட்டத்தில் அவர் மக்களுக்கான போராளியாய் மாறி நிற்கும்போது மனம் சமாதானமடைகிறது. இதுவரை காதலில் உருண்டு புரண்டு கொண்டிருந்த ஹரிஷ் கல்யாண் இதில் எடுத்திருப்பது மாஸான ஆக்சன் அவதாரம்; சண்டைக் காட்சிகளில் தெறிக்க விட்டு, உணர்வுபூர்வமான காட்சிகளில் பொருத்தமான நடிப்பைத் தந்து பாராட்டுக்களைக் குவிக்கிறார்.
ஹரிஷ் கல்யாணின் காதலியாக அதுல்யா ரவி. மெழுகுச் சிலை போலிருக்கிற அவரது முகத்தில் காட்சிகளின் தேவைக்கேற்ற முகபாவங்களை எதிர்பார்த்து ஏமாற வேண்டியிருக்கிறது.
போலீஸ் உயரதிகாரியாக வருகிற வினய் ராய், ஹரிஷ் கல்யாணை எதிர்த்து பிஸினஸில் இறங்குகிற விவேக் பிரசன்னா இருவரின் வில்லத்தனத்தில் போதுமான உருட்டல் மிரட்டல் இருக்கிறது.
ஹீரோவின் வளர்புத் தந்தை என்ற முக்கியத்துவமுள்ள கதாபாத்திரத்தில் சாய்குமார் குறிப்பிட்டுச் சொல்லும்படியான பங்களிப்பைத் தந்திருக்கிறார். கருணாஸ், போஸ் வெங்கட், காளி வெங்கட் என பலரும் கதையில் கலந்து களமாடியிருக்கிறார்கள்.
‘எம்மாடி…எம்மாடி…’ பாடலின் இசையில் உள்ளத்தைக் கொள்ளையடிக்கிற திபு நினன் தாமஸின் பின்னணி இசை காட்சிகளுக்கு பொருத்தமான சுறுசுறுப்பை வழங்கியிருக்கிறது. எம்.எஸ். பிரபு, ரிச்சர்ட் எம். நாதன் கூட்டணியின் ஒளிப்பதிவு நேர்த்தி.
ராட்சதக் குழாய் பதிக்கப்பட்டு வட சென்னை மீனவ மக்களின் பிழைப்பில் மண்ணள்ளிப் போடப்பட்ட வலிமிகு வரலாறை விளக்கும்போது மனம் ரணமாகிறது. படத்தில் காண்பித்திருக்கிற ‘கச்சா எண்ணெய் மாஃபியா’ என்ற உலகம் தமிழ் சினிமாவுக்கு புதியது. அது தருகிற ஆச்சரியத்தை திரைக்கதையும் தந்திருந்தால் டேங்கில் டீசலை நிரப்புவதுபோல் தியேட்டர்களில் ரசிகர்களை நிரப்பியிருக்கலாம்.
Rating 3 / 5 

