போதைப் பொருள் உலகில் கொடிகட்டிப் பறக்கும் ஒருவருக்காக பல வருடங்களாக போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுகிற ஒருவருக்கும், அதே கடத்தலில் ஈடுபட முதல் வாய்ப்பு கிடைத்தவருக்கும் இடையிலான மோதல், அந்த முதல் கடத்தலுக்கு அப்பாவி கார் டிரைவர் ஒருவர் பயன்படுத்தப்படுதல் என பரபரக்கிறது தாவுத்தின் கதைக்களம்.
கடத்தல் நல்லபடியாக நடந்ததா? அதில் சிக்கவைக்கப்பட்ட டிரைவருக்கு என்னவானது என்பது திரைக்கதை.
அப்பாவி டிரைவராக லிங்கா; போதைப் பொருள் கடத்தல் எந்தளவுக்கு ஆபத்தானது என்பது தெரியாமல் அதில் ஈடுபட்டு அவதிப்படுபவர், கிளைமாக்ஸில் அதிரடி சம்பவங்களை நிகழ்த்துவது எதிர்பாராதது. அப்பாவி நபருக்கும் அடப்பாவி என ஆச்சரியப்படுத்தும் நபருக்குமான வித்தியாசத்தை நடிப்பில் சரியாக டெலிவரி செய்திருக்கிறார்.
சாய் தீனாவும், அபிஷேக்கும் தொழில் போட்டியாளர்களாக களமாடி, தங்களுக்கு எதிராக யார் எதை செய்தாலும் அவர்களை வெட்டிச் சாய்க்கிற, சுட்டுத் தள்ளுகிற வேலையை சுறுசுறுப்பாக செய்திருக்கிறார்கள்.
லிங்காவுக்கு நண்பராக வருகிற ஷாரா விஸ்கி, பிராந்திக்கெல்லாம் ‘சரக்கய்யா’ என பெயர் சூட்டி தினமும் பூஜை செய்து வழிபட்டு காமெடி பங்களிப்பை நிறைவேற்றி, படத்தின் நிறைவில் ‘அட அவரா இவர்?’ என வியக்கும்படி நடந்துகொள்கிறார்.
கடத்தல்காரர்களில் ஒரு தரப்பின் தளபதியாக செயல்படுகிற சரத்ரவி காட்டியிருக்கும் அலட்டல் அதிகரித்த வில்லத்தனம் ரசிக்க வைக்கிறது. அவருக்கு ஜோடியாக விதவிதமான கெட்டப்களில் வருகிற சாரா அச்சர் ஆழகாலும் இளமையாலும் கவர்கிறார்.
ரவுடிகளுக்கு உதவி செய்கிற காவல்துறை அதிகாரியாக ஜெயக்குமார், போதைப் பொருள் தடுப்பு பிரிவின் துடிப்பான அதிகாரியாக அர்ஜெய் என மற்ற நடிகர்கள் கதைக்கு தேவையானதை செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு நேர்த்தியாக இருக்க, ராகேஷ் அம்பிகாபதியின் பின்னணி இசை காட்சிகளுக்கு வேகம் தருகிறது.
‘முன்னணி ஹீரோக்கள் கூட தாராளமாக நடிக்கலாம்’ எனும்படியான கதைச் சூழலை உருவாக்கியிருக்கும் அறிமுக இயக்குநர் பிரசாந்த் ராமன், எளிமையான வில்லன் நடிகர்கள் சிலரை கூட்டணி சேர்த்துக் கொண்டு படத்தை பரபரப்பான கேங்ஸ்டர் விருந்தாக்கியிருக்கிறார்.
Rating 3 / 5


