பெண் பிள்ளைகள் பெரும்பாலும் அப்பா செல்லமாக இருப்பார்கள்; ஆண் பிள்ளைகளுக்கு அம்மாவைத்தான் அதிகம் பிடிக்கும். பாசப்பிணைப்பு பொறுத்தவரை சகஜமான விஷயம் இது.
விதிவிலக்காக இந்த படத்தில் மகன் அம்மாவை வெறுக்கிறான். வருடக்கணக்கில் ஒரே வீட்டில் வசித்தாலும் முகத்தைக்கூட பார்ப்பதில்லை. ஒரு வார்த்தைகூட பேசுவதில்லை. அவன் ஒரு வார்த்தை பேசுவானா, அம்மா என்று கூப்பிடுவானா என்று ஏங்கியபடடியே நாட்களை ஓட்டிக் கொண்டிருக்கிறாள்.
அப்படி அம்மா மகனுக்குள் என்னதான் பிரச்சனை? பிரச்சனை தீர்ந்து மகன் அம்மாவின் பாசத்தைப் புரிந்துகொண்டானா இல்லையா? என்பது இந்த மனம் உருக்கும் கதையின் கிளைமாக்ஸ்…
கதை, வசனம், பாடல்கள் மதுரா வேள்பாரி. இயக்கம் ஆனந்த் சிவம்
மகனாக வசீகரன். கண்ணால் பார்ப்பதுகூட பொய்யாக இருக்கலாம் என்பதால்தான் தீர விசாரிக்க வேண்டும் என்கிறார்கள். அப்படியெல்லாம் விசாரித்து தெரிந்து கொள்கிற அளவுக்கு பக்குவமில்லாத வயதில், தன் அம்மாவுக்கு தப்பான நபருடன் தொடர்பிருப்பதாக தவறாக புரிந்துகொள்கிறார். அதன் விளைவாக அவளை எதிரியாக நினைத்துக் கொண்டிருக்கிறார். அப்படி உருவாக்கப்பட்ட கேரக்டருக்கு எரிச்சல் பார்வையாலும், கோபமான பேச்சுக்களாலும் நியாயம் செய்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அம்மாவைப் புரிந்து கொண்டு கதறியழும்போது நிலைமை கைமீறிப் போகிறது. காதல் அதுஇதுவென ஜாலியாகவும் வலம் வருகிறார். நடிப்பு குறைசொல்ல முடியாத அளவில் இருக்கிறது.
மகன் என்னதான் வெறுத்தாலும் அவன் மீது துளியும் பாசம் குறையாத, என்றாவது ஒருநாள் அவன் தன்னை புரிந்துகொள்வான் என்ற எண்ணத்திலிருந்து விலகாமல் இருக்கிறவராக ‘பசங்க’ செந்தி. கணவரைப் பிரிந்து பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குகிற பல அம்மாக்களை இந்த ஊர் உலகம் பார்த்திருக்கிறது. அந்த வரிசையில் ஒருவர்தான் என்றாலும், அவர் மகனுக்காக உறுப்பு தானம் செய்கிற காட்சி சிலிர்ப்பூட்டாமல் விடாது. அம்மணி நடிப்பில் கண்கலங்க வைக்கிறார்.
செய்வது குற்றம், அதற்கான தண்டனையும் கிடைக்கிறது. அப்படியும் திருந்தாமல் செய்த தவறையே மீண்டும் மீண்டும் செய்கிறவராக போஸ் வெங்கட் தந்திருப்பது அனுபவ நடிப்பு.
நாயகி நேகாவிடம் லேசாக நடிகை அஞ்சலியின் சாயல் தெரிகிறது. காதல், ஆட்டம் பாட்டம் என எல்லா ஹீரோயின்களும் செய்கிற வழக்கமான கடமைகளை கச்சிதமாக நிறைவேற்றியிருப்பவர், தன் காதலனின் தவறான எண்ணங்களை அவன் மனதிலிருந்து பிடுங்கி வீசுகிற காட்சி நச்சென்றிருக்கிறது.
வசீகரனுக்கு வளர்ப்புத் தாயாக வருகிற ரிந்து ரவியின் நடிப்பு கவனம் பெறும். அமுதவாணனும் ரிஷாவும் கதாபாத்திரங்களாகவும் வருகிறார்கள்; சேர்ந்து குத்தாட்டமும் போடுகிறார்கள்.
தாஜ்நூர் இசையில் பாடல்கள் சிலமுறை கேட்கும் ரகம். குறிப்பிட்ட சில இடங்களையே திரும்பத் திரும்ப பார்த்தாலும் அதெல்லாம் ஒளிப்பதிவாளர் செல்வா ஆர் அமைத்திருக்கும் கேமரா கோணங்களால் வேறுபட்டு தெரிகிறது.
படம் பார்த்து முடித்தபின் கதையின் நாயகனுக்கு, அவனது அம்மாவைப் பற்றி அவனது இள வயதிலேயே அவனை சொந்த மகன்போல் பாசமாக பார்த்துக் கொள்கிற பெண்மணி சொல்லியிருக்கலாமே? என்பதுபோல் சிலபல கேள்விகள் மனதில் தோன்றலாம். மேக்கிங் இன்னும் பெட்டராக இருந்திருக்கலாம் என்ற உணர்வு வரலாம். அதையெல்லாம் கதையிலிருக்கும் உயிரோட்டம் பின்னுக்குத் தள்ளிவிடுகிறது.
செல்லமடா நீ எனக்கு – பெத்த மனம் பித்து; பிள்ளை மனம் கல்லு!
Rating 3 /5 

