மூட நம்பிக்கைகளை அம்பலப்படுத்தும் விதத்தில் கதைக்களம் அமைத்து தான் இயக்கிய வெங்காயம் திரைப்படம் மூலம் திரையுலகினரின் கவனத்தை ஈர்த்து, பத்திரிகைகளின் விமர்சனங்களில் பாராட்டுக்களைக் குவித்தவர் சங்ககிரி ராஜ்குமார்.
அவர் அந்த படத்தை எடுத்து முடிப்பதற்குள் பெரும் போராட்டங்களைச் சந்தித்ததோடு, தன் சொத்தையும் விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். அந்த வலி நிறைந்த அனுபவங்களை அதன் தன்மை மாறாமல் ரசிகர்களுக்கு எடுத்துக்காட்ட நினைத்தன் விளைவாக உருவான படைப்பே இந்த படம்.
படம் எடுக்க கதை ரெடி. தயாரிப்பாளரும் கிடைத்து விடுகிறார். அவரை நடிக்க வைக்கலாம் இவரை நடிக்க வைக்கலாம் என்றெல்லாம் பேசப்படுகிறது. திடீரென தயாரிப்பாளர் கைவிட்டுவிட, தானே தயாரிப்பாளராகி கையில் கிடைத்த பொருட்களையெல்லாம் வைத்து படப்பிடிப்புக்கான கருவிகளை உருவாக்குகிறார். யார் யாரையெல்லாமோ நடிக்க வைக்கலாம் என நினைத்திருந்த நிலை மாறி தன் சொந்தங்களில் ஒரு சிலரையும், தன்னைச் சுற்றியுள்ள ஊர் மக்களில் சிலரையும் தேர்ந்தெடுத்து நடிக்க வைக்கிறார். சத்யராஜை ஒரு பாடலில் இடம்பெறச் செய்கிறார். ஒரு வழியாக படம் நிறைவடைகிறது.
அப்படியெல்லாம் போராடி எடுத்து முடித்த படத்தை சேரன் உள்ளிட்ட பிரபல இயக்குநர்கள் பார்த்துப் பாராட்டுகின்றனர். சேரனே படத்தை வெளியிடுகிறார்.
அத்தனை நிகழ்வுகளையும் இந்த பயாஸ்கோப் மூலம் கண் முன் கொண்டு வந்திருக்கிறார்.
கண்ணில் மாட்டிய பொருட்களை வைத்து ஷூட்டிங் உபகரணங்களை உருவாக்குவதிலிருந்து நடிக்க வந்தவர்களின் வெகுளித்தனமான செயல்பாடுகள் வரை ரசிக்க வைக்கின்றன; மனம்விட்டு சிரிக்க வைக்கின்றன.
படத்தின் கதை தன் ஊரில் மூட நம்பிக்கைகளை உருவாக்கும் சாமியாரைப் பற்றியது என்பதால் அவரது எதிர்ப்பு பலமாக இருக்க அதை சமாளிப்பது, ஷூட்டிங் நடத்துவதற்காக சொத்தை அடமானம் வைத்து அதை மீட்க முடியாதபடியான சூழ்ச்சியில் சிக்குவது என பரிதாபப்படும்படியான நிகழ்வுகளும் அணிவகுக்கின்றன.
பின்னணி இசை, பாடல்கள், ஒளிப்பதிவு என மற்ற அம்சங்கள் எளிமையான படைப்பு ஏற்றதாக அமைந்திருக்கின்றன.
கமர்சியல் படங்களை விரும்புகிற ரசிகர்களைக் கவர்வது சந்தேகம் என்றாலும் வித்தியாசமான, யதார்த்தமான பட வரிசையில் சேர்கிற தகுதிகள் பயாஸ்கோப்புக்கு இருக்கிறது!

