சும்மா பேச்சுக்கு சொல்வது போலில்லாமல் நிஜமாகவே வித்தியாசமான படைப்பு. புதுமுகங்களின் நடிப்பில் ‘ஆகக்கடவன.’
இந்தப் பக்கம் நல்லவர்கள் மூன்று பேர். அவர்கள் பார்ட்னராக சேர்ந்து மெடிக்கல் ஷாப் துவங்குவதற்காக சேகரித்த ஆறு லட்ச ரூபாய் திருடு போகிறது. அந்த இழப்பிலிருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம் கெட்டவர்களாய் மூன்று பேர். இரு தரப்பினரும் ஓரு இடத்தில் சந்திக்கும் சூழ்நிலை உருவாகிறது.
நல்லவர்களை கெட்டவர்கள் தாறுமாறாய் தாக்குகிறார்கள். இரு தரப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்பது இதில் குறிப்பிடத்தக்க விஷயம்.
கெட்டவர்களிடம் சிக்கித் தவிக்கிற நல்லவர்களுக்கு, அந்த மூன்று பேர் யார்? அவர்களுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? எதற்காக நம்மை அடித்து துவைக்கிறார்கள்? அவர்களிடமிருந்து தப்பிப்பது எப்படி? என்றெல்லாம் பல கேள்விகள், குழப்பங்கள் உருவாகிறது.
அதே கேள்விகளும் குழப்பங்களும் படம் பார்க்கும் நமக்கும் உருவாகிறது.
அந்த குழப்பங்களை படத்தின் பின்பாதி திரைக்கதை கொஞ்சம் கொஞ்சமாகத் தீர்த்து வைக்கிறது. கெட்டவர்களிடமிருந்து நல்லவர்கள் தப்பிக்க முடிந்தா இல்லையா என்பது கிளைமாக்ஸ்… படத்தில் பெண் கதாபாத்திரங்களே இல்லையென்பது விசேச செய்தி.
கடனை வாங்கி, நிலத்தை விற்று என்றெல்லாம் புரட்டிய பணத்தை பறிகொடுத்த வேதனை, பைக் பஞ்சர் ஒட்டப்போன இடத்தில் ஊர் பேர் தெரியாத யாரோ மூன்று பேரிடம் சிக்கிச் சின்னாபின்னமாகும்போது குழப்பமும் ஆத்திரமும் கலந்த உணர்வு என ஆதிரன் சுரேஷ், சி ஆர் ராகுல், ராஜசிவன் மூவரும் கதையோட்டத்தின் தன்மைக்கேற்ப நடிப்புப் பங்களிப்பை தந்திருக்கிறார்கள்.
வில்லன்களுக்கான தோற்றத்திற்கு பொருந்திப்போகிற மைக்கேலும் தஷ்ணாவும் பார்வையால் கணிசமாக மிரட்டியிருக்கிறார்கள். வில்லன்கள் குழுவில் ஒருவராக வருகிற சதீஷ் ராமதாஸுன் அலட்டலில்லா நடிப்பும் அவர் சொல்லும் கதைகளும் கவனம் ஈர்க்கிறது.
ஒளிப்பதிவாளர் லியோ வி ராஜாவின் நேர்த்தியான ஒளிப்பதிவும் சாந்தன் அன்பழகனின் கதையின் பரபரப்புக்கு துணையாக நிற்கும் பின்னணி இசையும் படத்திற்கு பலம்.
‘உலகில் காரண காரியமின்றி எதுவும் நடப்பதில்லை’ என்ற பிரபஞ்ச விதியை மையமாக வைத்துக்கொண்டு ‘நமக்கு எது கிடைக்கணுமோ அது கிடைத்தே தீரும்’ என்பதை எடுத்துச் சொல்வது கதையின் நோக்கம். அதை போகிற போக்கில் நிறைவேற்றி,
எங்கிருந்தோ திருடுபோகிற பணம், எப்படியெல்லாமோ சுற்றி யாரிடம் சேரவேண்டுமோ அங்கு சேர்கிற பயணத்தை படு சுவாரஸ்யமான திரைக்கதையால் மெருகேற்றி, வித்தியாசமான விறுவிறுப்பான படம் பார்த்த திருப்தியை தருகிறார் இயக்குநர் தர்மா!

