தொடர்ந்து நடக்கும் கொலைகள், அதன் பின்னணியை கண்டுபிடிக்க விசாரணையில் இறங்கும் காவல்துறை அதிகாரி என வழக்கமான கிரைம் திரில்லருக்கான ஃபார்மெட்டிலேயே இந்த அறிவானின் கதையும் துவங்குகிறது. நடந்து கொண்டிருக்கும் கொலைகளை அவர் செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் பாலியல் தொழிலாளி ஒருவர் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்படுகிறார். விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே, அவர் யாரோ ஒருவரால் கொலை செய்யப்பட கதையில் தீ பிடித்த வேகம் தொற்றுகிறது.
உண்மையான கொலையாளி யார், கொலைகளுக்கு காரணம் என்ன? கிளைமாக்ஸில் தெரியவரும் விஷயங்கள் அதிர்ச்சி தருகின்றன. இயக்கம் அருண் பிரசாத்
காவல்துறை உயரதிகாரியாக ஆனந்த் நாக். துறுசுறுப்பாக செயல்படுகிற அளவுக்கு புத்திசாலித்தனமாக செயல்படுவதுபோல் தெரியவில்லையே என்ற எண்ணம் நமக்குள் உருவாகும் அளவில் இருக்கிறது அவருக்கான ஆரம்பப் காட்சிகள். கதையில் விறுவிறுப்பு அதிகரிக்க அதிகரிக்க அவரும் கம்பீரமாக தயாராகி விடுகிறார்.
அனந்த் நாக்கிற்கு ஜோடியாக வருகிற ஜனனிக்கு இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிஸ்ட் கதாபாத்திரம். துறுதுறுவென நடித்து அந்த கேரக்டருக்கான வேல்யூவை கூட்டியிருக்கிறார். காதல் உணர்வுகளை போதுமான அளவில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
கதையில் யமுனா என்ற கனமான கேரக்டரை ஏற்றிருப்பவர் காமவெறிக்கு பலியாகும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான பெண்களின் நகலாக பிரேமுக்குள் வருகிறார். அவர்களைப் போன்றோர் அனுபவித்த, அனுபவிக்கும் வலியை பிரதிபலிக்கும் அவர், அந்த வலி உருவாக்கும் கோபத்தை வீரியமாக வெளிப்படுத்தி தன் கவனம் ஈர்க்கிறார். மற்றவர்களின் நடிப்பும் கச்சிதம்.
இரா பின்னணி இசையை கிரைம் திரில்லருக்கு பொருந்தும்படி வழங்கியிருக்க, கதைக்களமான நெய்வேலியை ஏரியல் வியூவில் காண்பித்து படத்துக்கு பிரமாண்ட மேக்கப் போட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் யஷ்வந்த்.
முன்னணி நடிகர் நடிகைகள் இல்லாமல், எளிய பட்ஜெட்டில் பரபரப்பான படங்களை உருவாக்க முடியும் என்பதற்கு உதாரணமாக வரிசை கட்டும் படங்களில் ஒன்றாக இணைகிற இந்த படத்தின் கதையின் போக்கு பல படங்களில் பார்த்தவையாக இருந்தாலும் திரைக்கதையில் இருக்கிற ட்விஸ்ட் படத்தை தனித்துவமாக்கி விடுகிறது.
Rating 3 / 5

