சாமானிய மனிதன் ஒருவன் ஊரையே நடுங்க வைக்கும் ரவுடியை பழி தீர்க்கும் கதை.
ஒரு வரியாக சொல்லும்போது இதெல்லாம் ஆயிரம் முறை பார்த்த கதையாச்சே’ என்று தோன்றும். ஆனால் கதை நிகழும் களம் உப்பளமாக இருக்க, கண்டிப்பாக இதில் வித்தியாசம் இருக்கும் என்று தோன்றுகிறது.
உப்பள உரிமையாளர்களிடமிருந்து உப்பை கடத்துவதிலிருந்து ரவுடியிஸத்தால் ஊர் மக்களை பயமுறுத்திக் கொண்டு வலம் வருபவன் கர்ணா. இப்போது இளைஞனாக இருக்கிற கதைநாயகனின் தந்தையை, கர்ணா இளைஞனாக இருந்த காலகட்டத்தில் கொலை செய்திருக்கிறான். அப்புறமென்ன வழக்கமான மோதல்தான்; பழி வாங்கும் படலம்தான். அந்த பழிவாங்கலை அவர் எப்படி செய்கிறார் என்பதில் வித்தியாசமாகவும் அதுவே மற்ற படங்களிலிருந்து தனித்துவமாகவும் இருக்கிறது.
கதைநாயகன் அழகு பிரகாஷ் கிராமத்து இளைஞனாக பொருத்தமான தோற்றத்தில், எளிமையான மனிதனாக வருகிறார். சராசரி அப்பாவி மனிதனாய் இருப்பவர் வில்லன் மீது காட்டும் ஆத்திர ஆக்ரோஷத்தில் கவனம் பெறுகிறார். மற்ற உணர்வுகளை பாஸ்மார்க் போடும் அளவில் வெளிப்படுத்துகிறார்.
வில்லனாக வருகிற கருணாதான் படத்தை இயக்கியிருக்கிறார். கடத்தல், கொலை என படங்களில் வருகிற கொடூர வில்லன்கள் செய்கிற எல்லாவற்றையும் மிகச்சரியாக செய்கிறார்.
நாயகி சுகன்யா ஹீரோவை காதலிக்கிற பணியில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். அதை தாண்டி பெரிய வேலை ஏதுமில்லை.
மகன் மீது பாசத்தைப் பொழியும் அம்மாவாக, தான் வணங்கும் கருப்பு சாமி வில்லனிடமிருந்து மகனைக் காப்பாற்றி அவனை தீர்த்துக் கட்டும் என்ற நம்பிக்கையை பிடித்துக் கொண்டிருப்பவராக தீபா சங்கரின் உணர்வுபூர்வ நடிப்பு கதையோட்டத்தின் பலம்.
தாய் மாமாவாக வருகிற நிர்மலும் கவனிக்க வைக்கிறார். மற்றவர்கள் அவரவர் பங்களிப்பை நிறைவாகத் தந்துவிட,
கவர்ச்சிக்கு ஒன்று, காதலுக்கு இரண்டு, வீரத்துக்கு அடுத்தது என ‘வீரத்துல நாங்க சிங்கமடா’, ‘கருடா திருடா’, ‘நில்லடி நில்லு கண்ணாடியே’ என பாடல்களுக்கான இசையில் வெரைட்டி காட்டியிருக்கிறார் ஜான் பீட்டர்.
நாகை மாவட்ட கடலோரத்திலும் கடலோர கிராமங்களிலும் வளைந்து நெளிந்து பயணித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பி சாய்நந்தா.
குறைகள் இல்லாத படைப்புகளே இல்லையென்கிறபோது, இயக்குநரிலிருந்து ஹீரோ வரை புதியவர்கள் களம் கண்டிருக்கும் இந்த படத்தின் குறைகளை பெரிதாக கருதாமல் கடந்து போகலாம். கதைக்களத்தின் புதுமை உட்பட மனதை ஆக்கிரமிக்கும் காட்சிகள் ஆங்காங்கே இருப்பதால் ஒருமுறை பார்க்கலாம்.

