கணவன் குடிகாரனாக வாய்த்ததால் வாழ்வில் நிம்மதியைத் தொலைத்த ஒரு தாய், தன் மகனை ஊர் உலகம் மதிக்கிற குடிமகனாக உருவாக்க நினைக்கிறாள். அந்த நினைப்பில் சமூகம் மண்ணள்ளிப் போட, அவளிடமிருந்து வெளிப்படும் ஆவேசத் ‘தீ‘ என்ன செய்கிறது என்பதே கதையோட்டம்… படிக்கும் காலத்தில் பணக்கார வீடடுப் பெண், ஏழை மாணவனை காதலிக்கிற வழக்கமான சினிமா மசாலா சங்கதிகளையும் காட்சிகளில் கலந்திருக்கிறது திரைக்கதை.
படத்தை தயாரித்து இயக்கிருக்கிற ஜெயகிருஷ்ணா, கதைநாயகனாக நடித்து குடிப் பழக்கத்துக்கு அடிமையான மனிதன் என்னவெல்லாம் அநியாய அக்கிரமங்களைச் செய்வானோ அதையெல்லாம் மிகச்சரியாக செய்திருக்கிறார். அந்த வேடத்துக்கு அவரது கரடு முரடான தோற்றமும் ஒத்துப் போயிருக்கிறது. அவரே கல்லூரி மாணவனாக வரும்போது மனது ஏற்க மறுக்கிறது.
குடி நோயாளிக்கு வாழ்க்கைப்பட்ட பெண்கள் எப்படியான துன்பங்களை அனுபவிப்பார்களோ அவற்றில் எதையும் மிச்சம் வைக்காமல் அனுபவித்திருக்கிறார் சாந்தினி.
மகனை குடிகாரனாக, கால் இழந்தவனாக, குப்பையோடு குப்பையாக பார்த்த நொடியில் மனம் உடைகிறபோது கலங்க வைக்கிறது ஈஸ்வரி ராவின் தேர்ந்த நடிப்பு.
தீபா சங்கர், தங்கதுரை, சிசர் மனோகர் என மற்றவர்களும் கதையின் தேவைக்கேற்ப நடித்திருக்க, என்.ஆர். ரகுந்தந்தனின் பின்னணி இசை காட்சிகளை பலமாக்கியிருக்கிறது. பாடல்கள் பொருத்தமான சூழலில் கலந்து நுழைந்து கடந்தோடுகின்றன. ஒளிப்பதிவு நேர்த்தி.
குடிப்பழக்கம் அழிவின் தொடக்கம் என்பதை எடுத்துச் சொல்ல பல படங்கள் வந்தாயிற்று. ஆனாலும் அவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாத சமூகத்துக்கு ஆலகாலம் மாதிரியான படைப்புகளின் தேவை அவசியமாகிறது.
ஆலகாலம் – சமூகத்தை நல்ல திசைக்கு அழைத்துப்போகும் பாலம்!

