புத்திசாலித்தனமான கதைப்பின்னலில் ‘பீப்.’
ஹீரோ ராகவ்க்கு புகைப்படங்களை வைத்து, அந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ளும் ஸ்பெஷல் பவர் இருக்கிறது. அதை வைத்து, வில்லங்கமான தொழிலில் ஈடுபடுகிற தனது தோழியைக் கொன்றது யார் என்பதையும், கொலைக்கான காரணம் என்ன என்பதையும் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே கதை…
வழக்கமான கிரைம் திரில்லர் படங்களில் வருகிற ஹீரோக்களைப் போல் அதிரடியான செயல்பாடுகளில் ஈடுபட அவசியமில்லை. புத்திசாலித்தனமான நகர்வுகளால் கொலையின் பின்னணியை கண்டுபிடிக்கிற வேலை. அதை சரியான உடல்மொழியுடன் செய்திருப்பவர், மற்ற உணர்வுகளை வெளிப்படுத்தி நடிக்க வேண்டிய காட்சிகளில் பரவாயில்லை என்கிற அளவில் நடித்திருக்கிறார்.
ராகவ்வின் தோழியாக யாமினி லெஷ்மணன். பாலியல் தொழிலாளியாக எந்த நேரமும் மிதப்பான உற்சாக மனநிலையில் இருப்பவராக எளிய நடிப்பாலும், அளவான கவர்ச்சியாலும் ஈர்க்கிறார்.
யாமினியுடன் உறவிலிருக்கிற, அதனால் பிரச்சனைகளை சந்திக்கிற நபராக வருபவர் இந்த படத்தை இயக்கிய எல் சண்முக சுந்தர். பங்களிப்பு இயல்பாக இருக்கிறது.
இன்ஸ்பெக்டராக வருகிற நிதீஷ் வீரா அலட்டலில்லாமல் கெத்து காட்ட, மற்ற கேரக்டர்களில் பிரேர்னா கண்ணா, நயனா கபூர், அருண் மோகன், ஷ்ரவண் ராமகிருஷ்ணன், ஜூஹி சர்மா, பிரியதர்ஷினி, பாலாஜி, வெங்கட் ரமேஷ், ஜி சிவகுமார், அதுல் என ஏகப்பட்ட பேர் நிரம்பியிருக்கிறார்கள்.
காட்சிகளின் நகர்வுக்கேற்ப அதிரடி, அடக்கி வாசிப்பு என தன் கடமையைச் செய்திருக்கிறார் இசையமைப்பாளர் பிரசாந்த் விஹாரி. பிரதீப் பத்ம குமாரின் ஒளிப்பதிவு நேர்த்தி.
படத்தின் முன் பாதி பொறுமையைச் சோதிக்க,
கொலை விவகாரத்தில் சந்தேகத்துக்கு உள்ளான நபர், தன்னிடமுள்ள ஸ்பெஷல் பவரை வைத்து போலீஸை விட பல மடங்கு தீவிரமாக துப்பறியும் பணியில் ஈடுபடுவது போல் அமைந்திருக்கும் இரண்டாம் பாதி ஓரளவு இன்ட்ரஸ்டிங்’காக நகர்கிறது.
படத்தின் ஒவ்வொரு காட்சியும் தீ பிடித்தது போல் பரபரப்பாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களை இந்த படம் திருப்திபடுத்த வாய்ப்பு குறைவு. வித்தியாசமான, அறிவுபூர்வமான சப்ஜெக்டில் உருவான கிரைம் திரில்லர்களை விரும்புகிறவர்கள் தாராளமாக பார்க்கலாம்.
Rating 2.5 / 5

