காட்சிக்கு காட்சி ரத்தம் தெறிக்கிற டி சி.
எல்லாவிதமான குற்றச் செயல்களிலும் ஈடுபடுகிற கூலிப்படையில் ஒருவர் இந்த கதையின் ஹீரோ தேவதாஸ். எந்த நேரமும் வெட்டுக்குத்து, கொலை என ரத்தத்தில் ஊறிக் கொண்டிருக்கும் அவருக்கு பாலியல் தொழிலாளி இளம்பெண் சந்திராவுடன் தொடர்பு உருவாகி, அது காதலாக மாறுகிறது. இவர்தான் ரவுடி, கொலைகாரன் என்று பார்த்தால் சந்திரா இவரைவிட பவர்ஃபுல்லாக கொலைவெறிச் சம்பவங்களில் ஈடுபடுகிறார்.
இருவரும் ஏன் அப்படி ரத்தவெறி பிடித்து அலைகிறார்கள் என்பது பிளாஷ்பேக். செய்யும் குற்றச் செயல்களின் விளைவுகள் என்னென்ன என்பது மீதிக் கதை…
தேவதாஸாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ். முகம் உடல் உடை என ஒட்டுமொத்தமாக அழுக்கடைந்த மனிதராக வருகிறார். அவர் யாரையெல்லாம் தவறானவர்களாக, மோசமானவர்களாக நினைக்கிறாரோ அவர்களை கொடூரமாக கொல்கிறார். உணர்வுகளை சரியாக வெளிப்படுத்துகிறார்.
சந்திராவாக வாமிகா கபி. சிறுமியாக இருந்தபோதே பாலியல் தொழிலுக்குள் தள்ளப்பட்டவராக, அதற்கு காரணமாக இருந்தவர்களை பழி வாங்குபவராக துடிப்பான நடிப்பால் கவனிக்க வைக்கிறார்.
சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி பாலியல் தொழிலாளியாக சிறிது நேரம் வந்து, பரிதாபத்தைச் சம்பாதிக்கிறார்.
தலைவாசல் விஜய், கஸ்தூரி ராஜா, காவல்துறை அதிகாரியாக வருகிறவர் என மற்றவர்களின் நடிப்பு கதைக்கு பொருத்தமாக இருக்கிறது.
காட்சிகளுக்கு விறுவிறுப்பூட்டும் அதிரடியான பின்னணி இசையில் கர்நாடிக் மியூசிக் டச் கொடுத்து வித்தியாசம் காட்டியிருக்கிறார் அனிருத். முகேஷ் ஜி’யின் ஒளிப்பதிவு மிகமிக தரம்.
இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜும் அருண் மாதேஸ்வரனும் வன்முறைப் படங்கள் எடுப்பதில் தீவிர ஆர்வம் காட்டுபவர்கள். அவர்களில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக களமிறங்க, ஆழமில்லாத கதையை எடுத்துக் கொண்ட அருண் மாதேஸ்வரன் திரைக்கதையில் வன்முறை வெறியாட்டத்தை ‘டூ மச்’ லெவலுக்கு கலந்திருக்கிறார். அதனால் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே பிடிக்கிற படைப்பாகியிருக்கிறது இந்த டி சி.
Rating 2.5 / 5

