HomeGeneralசசிகுமார் நடித்து இரா சரவணன் இயக்கிய ‘நந்தன்’ திரைப்படம்... சமூக மாற்றத்தை நிகழ்த்திய சிறந்த படைப்பாக...

சசிகுமார் நடித்து இரா சரவணன் இயக்கிய ‘நந்தன்’ திரைப்படம்… சமூக மாற்றத்தை நிகழ்த்திய சிறந்த படைப்பாக தேர்வு செய்து கெளரவிக்கும் டெல்லி தமிழ்ச் சங்கம்!

Published on

சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக சசிகுமார் நடிப்பில் வெளியான ‘நந்தன்’ படத்தைத் தேர்ந்தெடுத்து கௌரவித்திருக்கிறது டெல்லி தமிழ்ச் சங்கம். 2024ல் இரா.சரவணன் இயக்கத்தில் வெளியான படம் ‘நந்தன்.’

தலித் பஞ்சாயத்து தலைவர்கள் பதவிக்கு வந்தும் உரிய அங்கீகாரத்தை அடைய முடியாமல் போராடும் நிஜத்தை ‘நந்தன்’ படத்தில் கதையாக்கி இருந்தார்கள். படத்தின் க்ளைமாக்ஸில் தமிழ்நாட்டில் உள்ள தலித் பஞ்சாயத்து தலைவர்கள் பலரும் தங்களின் வேதனையான நிலையை வாக்குமூலமாக வெளியிட்டிருந்தார்கள். இது படம் வெளியான போது தமிழகம் முழுக்க பரபரப்பைக் கிளப்பியது.

‘நந்தன்’ படத்தின் சமூக நீதிக் கருத்தை இயக்குநர் பாரதிராஜா, பாக்யராஜ், நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட திரைத்துறையினரும் திருமாவளவன், அண்ணாமலை, சீமான், அன்புமணி ராமதாஸ், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்று இருந்தார்கள். படம் வெளியான பிறகு தமிழகம் முழுக்க தலித் பஞ்சாயத்து தலைவர்கள் சுதந்திரமாகக் கொடியேற்றவும், உரிய அதிகாரங்களை அடையவும் அதிரடியாக உத்தரவிட்டது தமிழக அரசு.

கடந்த வருட குடியரசு தினத்தில் இதுகாலம் வரை நடக்காத அதிசயமாகத் தமிழ்நாட்டில் உள்ள தலித் பஞ்சாயத்து தலைவர்கள் அனைவரும் கொடியேற்றினர். “நந்தன் திரைப்படம் உருவாக்கிய சமூக புரட்சி இது” என சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அதனை வரவேற்று இருந்தார்கள். இந்நிலையில், சமூக மாற்றத்தை நிகழ்த்திய திரைப்படமாக ‘நந்தன்’ படத்தைத் தேர்ந்தெடுத்து நடிகர் சசிகுமார், இயக்குநர் இரா.சரவணன் இருவருக்கும் பாராட்டு விழா நடத்தி இருக்கிறது டெல்லி தமிழ்ச் சங்கம்.

கடந்த 20.6.26 அன்று மாலை டெல்லி தமிழ்ச் சங்கம் நடத்திய பாராட்டு விழாவில் இந்திய கலாச்சார அமைச்சகத்தின் இயக்குநர் Shah Faesal IAS சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். டெல்லி தமிழ் சங்கத்தின் பொதுச் செயலாளர் சத்யா அசோகன், இணைத் தலைவர் மகேந்திரன், தயாரிப்பாளர் சிவா மற்றும் டெல்லி தமிழ்ச் சங்க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

“தமிழ்த் திரைப்படங்கள் மகத்தான உணர்வைக் கொடுக்கின்றன. சமூகத்தைச் சரியாகப் பிரதிபலிக்கின்றன. நல்ல படங்களைக் கொண்டாடுவதுதான் சமூகம் சிறக்க உதவும்”  என இந்திய கலாச்சார அமைச்சகத்தின் இயக்குநர் Shah Faesal IAS பேசினார். இணைத் தலைவர் மகேந்திரன், “நந்தன் மாதிரியான படத்தில் நடிக்க ஹீரோக்களுக்கு தனி தைரியம் தேவை. சசிகுமார் அதனை சமூக அக்கறையோடு செய்திருக்கிறார். வாயில் வெற்றிலை எச்சில் ஒழுக அவர் நடித்த காட்சிகளைப் பார்த்தபோது திகைத்துப் போய்விட்டேன். கமலுக்கு சப்பாணி என்றால், சசிகுமாருக்கு நந்தன். அந்தளவுக்கு அடி உதை வாங்கி தலித் பஞ்சாயத்து தலைவராக தன்னை அப்படியே காட்டி இருக்கிறார் சசிகுமார். டெல்லி தமிழ்ச் சங்கத்தின் அங்கீகாரம் மட்டுமல்ல, இன்னும் பல விருதுகள் ‘நந்தன்’ படத்திற்கு வந்து சேரும். சமூகத்தை வலிமைப்படுத்தும் இத்தகைய படைப்புகள்தான் இன்றைய தலைமுறையின் அவசிய தேவை…” என்றார்.

நிகழ்வில் நடிகர் சசிகுமாரும் இயக்குநர் இரா.சரவணனும் திரண்டிருந்த தமிழ்ச் சங்க நிர்வாகிகளின் கேள்விகளுக்குப் பதில் அளித்தனர். “படத்தில் நான் பட்ட சிரமங்கள் யாவும் டெல்லி மக்களின் பாராட்டில் சரியாகிவிட்டன. ‘நந்தன்’ படம் வெளியான பிறகு எங்களுக்கு விடிவு பிறந்திருப்பதாக ஒரு பெண் பஞ்சாயத்து தலைவர் என் கைகளைப் பிடித்து அழுதார். அந்தக் கண்ணீர் தேசிய விருதுக்கு நிகரானது” என்றார் சசிகுமார். “எப்போதுமே சினிமா தமிழ் மக்களின் ரத்தத்துடன் கலந்தது. அதனால்தான் முதலமைச்சரையே தமிழ் மக்கள் சினிமாவில் இருந்து தேர்ந்தெடுக்கிறார்கள். ‘நந்தன்’ படத்திற்குக் கிடைத்திருக்கும் இந்தப் பாராட்டு அடுத்தடுத்த படைப்புகளை இன்னும் பொறுப்போடு செய்ய வைக்கும்” என்றார் இயக்குநர் இரா.சரவணன்.

சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்ந்தெடுக்கப்பட்டு சசிகுமார், இரா.சரவணன் இருவருக்கும் விருது கொடுக்கப்பட்டது. ஜென்ஸி தலைமுறையினரும் இத்தகைய சமூக அக்கறையான படங்களைப் பார்க்க வேண்டும் என்பதால் வரும் வாரத்தில் ‘நந்தன்’ படத்தை பிரத்யேகமாகத் திரையிடவும் டெல்லி தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்து வருகிறது.

Latest articles

குஷ்புவின் மகள், தனுஷின் மருமகன் நடிக்கும் ‘அட்டாக்கர்’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

ஜினிமா எண்டர்டெய்ன்மெண்ட் லிமிடெட் தயாரிப்பாளர் தினேஷ்ராஜ் தயாரிப்பில்  நடிகர் தனுஷின் அக்கா மகன் பவிஷ், நடிகை குஷ்பூவின் மகள்...

ராக்ஸ்டார் அனிருத்தின் ‘வைப் வித் அரவிந்த்.’ உலக இசை தினத்தில் 15,000-க்கும் மேற்பட்ட ரசிகர்களுடன் உற்சாக கொண்டாட்டம்!

உலக இசை தினத்தை முன்னிட்டு சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடைபெற்ற ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்திரனின் ‘வைப் வித் அரவிந்த்’...

பல அடுக்குகள் கொண்ட திரைக்கதையை எந்த சமரசமும் இல்லாமல் திரையில் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் ஜியேன் கிருஷ்ணகுமார்! -‘ஆனந்தன் காடு’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ஆர்யா

ஆர்யா, சுனில் நடித்துள்ள, வரவிருக்கும் தமிழ் – மலையாள திரைப்படமான ‘ஆனந்தன் காடு’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில்...

மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருக்கும் அன்னா பென்னுடைய கதாபாத்திரம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும்! -‘கான் சிட்டி’ திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வில் இயக்குநர் ஹரிஷ் துரைராஜ்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “கான் சிட்டி” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில் படத்தின் டிரெய்லர்...

More like this

குஷ்புவின் மகள், தனுஷின் மருமகன் நடிக்கும் ‘அட்டாக்கர்’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

ஜினிமா எண்டர்டெய்ன்மெண்ட் லிமிடெட் தயாரிப்பாளர் தினேஷ்ராஜ் தயாரிப்பில்  நடிகர் தனுஷின் அக்கா மகன் பவிஷ், நடிகை குஷ்பூவின் மகள்...

ராக்ஸ்டார் அனிருத்தின் ‘வைப் வித் அரவிந்த்.’ உலக இசை தினத்தில் 15,000-க்கும் மேற்பட்ட ரசிகர்களுடன் உற்சாக கொண்டாட்டம்!

உலக இசை தினத்தை முன்னிட்டு சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடைபெற்ற ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்திரனின் ‘வைப் வித் அரவிந்த்’...

பல அடுக்குகள் கொண்ட திரைக்கதையை எந்த சமரசமும் இல்லாமல் திரையில் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் ஜியேன் கிருஷ்ணகுமார்! -‘ஆனந்தன் காடு’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ஆர்யா

ஆர்யா, சுனில் நடித்துள்ள, வரவிருக்கும் தமிழ் – மலையாள திரைப்படமான ‘ஆனந்தன் காடு’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில்...