செல்வி என்ற பெண்ணைச் சுற்றி நடக்கிற புரட்சிகரமான கதை.
கணவன் இறந்தபின் தனது இரண்டு மகன்களை கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கும் செல்வி, மகன்கள் வாலிபப் பருவத்தை எட்டிவிட்ட நிலையில் மறுமணம் செய்து கொள்ளும் முடிவுக்கு வருகிறாள். அதற்கு உறவுகளும் ஊர் மக்களும் எதிர்ப்பு தெரிவிக்க, செல்வியின் மூத்த மகன் அம்மாவுக்கு மறுமணம் செய்து வைக்க பல விதங்களில் ரிஸ்க் எடுக்கிறான்; புத்திசாலித்தனமாக திட்டமிடுகிறான்.
தடைகளைக் கடந்து மறுமணம் நடந்து முடிகிறது.
அதற்கு முன், மறுமணத்திற்கு ஏன் எதிர்ப்பு, எதிர்ப்பால் நடக்கும் பிரச்சனைகள், அதை செல்வியும் செல்வியின் மகன்களும் சமாளிக்கும் விதம் என காட்சிகள் முழுக்க பரபரப்பு பரவியிருக்கிறது. சில உணர்வுபூர்வமான தருணங்கள் கண் கலங்க வைக்கின்றன.
செல்வியாக ஸ்வாசிகா. தன் விருப்பங்களை மனதில் அடக்கி அடக்கி, வலிகளைத் தாங்கித் தாங்கி வாழ்நாளைக் கழிக்கிற வேதனையை துல்லியமாக வெளிப்படுத்துவதாகட்டும், மறுமண முடிவின் ஆரம்பகட்டத்தில் மகனின் எதிர்ப்பைக் கண்டு மிரள்வதாகட்டும், கணவராக வரப்போகிறவருடன் பேசிப் பழகும் தருணமாகட்டும் நடிப்பில் சிலபல விருதுகளுக்கான தரமிருக்கிறது.
படத்தின் இரண்டாம் பாதியில் விஜய் ஆண்டனி, கிராமத்து விவசாயத் தொழிலாளியாக வருகிறார். ஸ்வாசிகாவுடன் குஷி மூடில் பழகுவதாக நீளும் காட்சியில் அவரது குஷி ஆடியன்ஸுக்கும் தொற்றிக் கொள்கிறது.
மூத்த மகனாக வருகிற அஜய் திஷானுக்கு அம்மாவின் மறுமண விருப்பத்தை வெறுக்கிற, ஆண்டுகள் கடந்தோடி மனதுக்கு தெளிவு கிடைத்து அம்மாவுக்கு கல்யாணம் செய்து வைக்க தீவிரமாக செயல்படுகிற கடமை. பொருத்தமான நடிப்பில் கடமையை நிறைவேற்றியிருக்கிறார்.
ஊரைத் திரட்டி மறுமணத்தை தடுக்க முயற்சிக்கும் பாலாஜி சக்திவேல் வில்லத்தனத்தை போதுமான வீரியத்துடன் செய்திருக்கிறார்.
ஸ்வாஷிகாவின் இளைய மகனாக சக்தி, மகன்களின் காதலிகளாக காவ்யா அனில், பாடினி குமார், காமெடிக்கு பகவதி பெருமாள், முக்கிய கேரக்டரில் தாமரைச்செல்வி என பலரும் நேர்த்தியகா நடித்திருக்க, பாலாஜி ஸ்ரீராம் இசையமைத்திருக்கும் ‘அம்மா அம்மாதான்’, ‘மாயக் கனவோ’ பாடல்களில் தென்றலின் இனிமையிருக்கிறது. தர்ஷன் கிர்லோஷின் ஒளிப்பதிவு கச்சிதம்.
இந்த 2026-ல் காதல், திருமணம் என்பதெல்லாம் தாறுமாறாக மாறிப்போயிருந்தாலும், ஒரு காலகட்டம் வரை பெண்களின் மறுமணம் என்பது குற்றச் செயல்போலவே பார்க்கப்பட்டுள்ளது. அந்த சூழ்நிலையிலும் தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சியில் ஒரு பெண்ணுக்கு அவரது மகன் மறுமணம் செய்து வைத்த சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது. அந்த உண்மைப் பின்னணியில் சினிமாவுக்கான மசாலா அம்சங்களைச் சேர்த்து, நூறுசாமியை தனது முத்திரைப் படைப்புகளில் கூடுதலாக சேர்த்திருக்கிறார் இயக்குநர் சசி!
Rating 4 / 5


