HomeCinemaஒவ்வொரு காதல் கதையும் பாரிஸில் தான் மலர வேண்டுமா? ஒவ்வொரு தேனிலவும் சுவிட்சர்லாந்தில் தான் முடிய...

ஒவ்வொரு காதல் கதையும் பாரிஸில் தான் மலர வேண்டுமா? ஒவ்வொரு தேனிலவும் சுவிட்சர்லாந்தில் தான் முடிய வேண்டுமா? -திரைத்துறையை பார்த்து கேள்வி கேட்கும் உலகநாயகன் கமல்ஹாசன்

Published on

என் அன்புக்குரிய திரைத்துறை உறுப்பினர்களே,
மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போரினால் உலகம் முழுக்க நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. எரிசக்தி, வணிகம், போக்குவரத்து, ஏற்றுமதி இறக்குமதி ஆகியவற்றின் மீது அழுத்தம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் தாக்கத்தை இந்தியாவும் எதிர்கொண்டு வருகிறது.
அதிகரித்து வரும் தயாரிப்புச் செலவுகள், நிச்சயமற்ற வருமானம் என இந்தியத் திரைப்படத்துறை ஏற்கனவே தத்தளித்துக்கொண்டிருக்கையில் இப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பொருளாதார மந்த நிலையும், பண வீக்கமும், வேலை இழப்புகளும் உருவாக்கும் அழுத்தங்கள் காரணமாக வரவிருக்கும் மாதங்களில் மக்கள் பொழுதுபோக்குக்காகச் செலவிடும் விதங்களும் மாறக்கூடும்.
இந்தச் சுமை தயாரிப்பாளர்கள், திரையரங்குகள், வினியோகஸ்தர்கள், பைனான்சியர்கள், திரைக்கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தொழிலாளர்கள் என ஒட்டுமொத்தத் திரையுலகின் மீது விழும்.
சினிமா தொடர்ந்து வளர வேண்டுமானால், செலவழிக்கப்படும் ஒவ்வொரு ரூபாயும் திரைப்படத்திற்கு முறையாகப் பயன்படுத்தப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும்; வெறும் பிரம்மாண்டமான தோற்றத்துக்காக மட்டும் அது இருக்கக்கூடாது.
சினிமா பொருளாதாரத்தில் செய்யப்படும் எந்தவொரு சீர்திருத்தமும் தொழிலாளர்களின் ஊதியம், பாதுகாப்பு, கண்ணியம், உணவு, போக்குவரத்து, தங்குமிடம், மனிதாபிமானமிக்க பணிச் சூழல் ஆகியவற்றைப் பாதிக்கும் வகையில் அமையவே கூடாது. கடினமாக உழைப்பவர்களின் மேல் கூடுதல் சுமை விழுந்து விடக்கூடாது.
நாம் செய்ய வேண்டிய உண்மையான சீர்திருத்தங்கள் வேறு இடங்களில் உள்ளது. மோசமான திட்டமிடல், தவிர்க்க சாத்தியமுள்ள வீணடிப்புகள், ஆரவாரமான ஆடம்பரங்கள், தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்கள், தயாரிப்புத் தாமதங்கள் மற்றும் செலவு செய்வதற்கும் அதன் நோக்கத்திற்கும் இடையே அதிகரித்து வரும் இடைவெளி ஆகியவற்றில் தான் சீர்திருத்தங்கள் தேவை.
ஒவ்வொரு காதல் கதையும் பாரிஸில் தான் மலர வேண்டுமா? ஒவ்வொரு தேனிலவும் சுவிட்சர்லாந்தில் தான் முடிய வேண்டுமா? அதிர்ஷ்டவசமாக, காதலுக்கு அந்நியச் செலாவணி தேவையில்லை. இந்திய சினிமாவும், இந்தியர்களும் தம்மீதும் நமது அழகான நாட்டின் மீதும் இன்னும் சற்றே கூடுதல் நம்பிக்கை வைக்க தகுதியானவர்கள்.
இந்தியத் திரைப்படத்துறை முழுவதும் உள்ள சிந்தனையாளர்கள் ஒன்றிணைவதற்கான சரியான தருணம் இதுவென நான் நம்புகிறேன். வரவிருக்கும் பொருளாதாரச் சவால்களை நாம் எவ்வாறு கூட்டு முயற்சியுடன் எதிர்கொள்வது என்பது குறித்த ஒரு விரிவான விவாதத்திற்காக தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள், தொழிற்சங்கங்கள், ஸ்டூடியோக்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், OTT தளங்கள் மற்றும் கூட்டமைப்புகளுக்கு இடையிலான ஒரு மனம் திறந்த உரையாடலுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்.
திறமையான திரைப்படத் தயாரிப்புக்கான நடைமுறைகள் மற்றும் நிலையான செயல்பாட்டு முறைகளை நாம் இணைந்து உருவாக்க வேண்டும். கவனமான படப்பிடிப்பு, நேர்த்தியான கால அட்டவணைகள், ஆடம்பரம் மற்றும் பரிவாரங்களுக்கான செலவுகளைக் குறைத்தல், பொருத்தமான உள்ளூர் மாற்றுகள் இருக்கும்போது தவிர்க்கக்கூடிய வெளிநாட்டுப் பயணங்களைக் கட்டுப்படுத்துதல், படப்பிடிப்புத் தளங்கள் மற்றும் ஸ்டுடியோக்களில் ஆற்றலைச் (energy) சேமித்தல் அத்துடன் செட் கட்டுமானங்களின் பயன்படுத்திய பொருட்களை மறுபயன்பாடு செய்வதை ஊக்குவித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
ஆடம்பரமாகச் செய்யப்படுவதுதான் பிரமாண்டம் என தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால் நமது மிகச்சிறந்த திரைப்படங்கள் ஆடம்பரத்தால் ஆனவை அல்ல. மாறாக தெளிவான திட்டமிடல், நேர்த்தியான செயலாக்கம் மற்றும் உறுதியான நம்பிக்கையுடனே அவை உருவாக்கப்பட்டன.
உலக அளவில் நிச்சயமற்ற சூழ்நிலை நிலவும் காலத்தில் ஒவ்வொரு துறையும் தொலைநோக்குப் பார்வையுடனும் கட்டுப்பாட்டுடனும் செயல்பட வேண்டும் என்பதை, பொறுப்பான நுகர்வு மற்றும் கூட்டு ஒழுக்கத்திற்கான தேசிய அளவிலான அழைப்பு நமக்கு சரியான நேரத்தில் நினைவூட்டுகிறது. இந்தியத் திரைப்படத்துறையும் இந்தச் சூழலுக்கு ஏற்ப தன் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.
தனிப்பட்ட நலனை விட தேசிய நலனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய தருணம் இது. நமது சினிமாத் துறை ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான மக்களைச் சென்றடைகிறது; கலாச்சாரத்தை வடிவமைப்பதிலும், சிந்தனையைத் தூண்டுவதிலும் பெரும் பங்களிப்பாற்றுகிறது. சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கையும் தாண்டிய பொறுப்புகளைக் கொண்டுள்ளது.
இந்தத் துறையிலிருந்து அதிகம் பெற்றுக் கொண்டவர்கள் தான் முதலில் முன்மாதிரியாகத் திகழ வேண்டும். இன்று நாம் சினிமாவின் பொருளாதாரத்தைப் பாதுகாத்தால், நாளை சினிமாவின் எதிர்காலத்தைப் பாதுகாக்க முடியும்.
மரியாதையுடனும் பொறுப்புணர்வுடனும்,
கமல் ஹாசன்.

Latest articles

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

கதைக்களம் மதுரை… முதன்மை கதாபாத்திரத்தில் சசிகுமார்… பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் அசத்த வரும் ‘வதந்தி சீசன் 2.’

ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும்...

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

More like this

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

கதைக்களம் மதுரை… முதன்மை கதாபாத்திரத்தில் சசிகுமார்… பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் அசத்த வரும் ‘வதந்தி சீசன் 2.’

ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும்...

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...