ஈழத் தமிழர்கள் பற்றி இதுவரை வந்த படங்களிலிருந்து வித்தியாசப்பட்டு, முழுக்க முழுக்க வேறொரு விதமான உணர்வுக்குள் ஆடியன்ஸை தள்ளுகிற படைப்பு.
அது போர் நடந்து கொண்டிருக்கும் காலகட்டம். அப்போது ஒரு வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. அந்த வீட்டில் (இந்தியாவால் அனுப்பப்பட்ட) அமைதிப்படையினர் நுழைகிறார்கள். அந்த படையிலுள்ள ஒருவர், அந்த வீட்டாரை சிங்கள ராணுவத்துக்கு எதிரான போராளிகள் என சந்தேகப்படுகிறார். போராளிகளை அடக்கி ஒடுக்குவதுதான் அமைதிப்படையின் கடமை என்பதால், அந்த படையிலுள்ள ஒருவர் அடாவடி நடவடிக்கையில் ஈடுபடுகிறார். அவர் சந்தேகப்பட்டபடி அவர்களுக்கும் போராளிகள் குழுவினருக்கும் தொடர்பு இருக்கிறது.
இப்படி பகீர் திகீர் சம்பவங்களுடன் கதை துவங்க, திருமணம் நடந்ததா இல்லையா என்பது கிளைமாக்ஸ்… தாலி கட்டும் நிகழ்வு மிகமிக புதுமையாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.
ஈழ மண்ணில் களமாடிய அமைதிப்படைக்கு ஏகப்பட்ட கெட்டப்பெயர் உண்டு. இந்த படத்தில் அவர்களை நல்லவர்களாக பார்க்க முடிகிறது. அந்த படைக்குத் தலைவராக வருகிற நவீன் சந்திரா மனிதாபிமானமிக்க ராணுவ வீரனாக குறையின்றி நடித்திருக்கிறார்.
போராளிக்காக வீரத்தையும், போராளியாக இருந்தாலும் அவனுக்குள்ளும் சராசரி மனிதனுக்கான உணர்வுகள் இருக்கும் என்பதையும் கலந்து பிரதிபலித்திருக்கிறார் சனந்த்.
பயத்தையும் பதற்றத்தையும் சுமந்தபடி திருமணத்துக்குத் தயாராகும் தருணங்களில் பொருத்தமான நடிப்பைத் தந்திருக்கிறார் மணப்பெண்ணாக வருகிற சித்து குமரேசன்.
எமகாதகி படத்தில் படுத்துக்கொண்டே நடித்த ரூபா கொடுவாயூர், இந்த படத்திலும் படுத்துக் கொண்டிருக்கிறார். மனநலம் பாதிக்கப்பட்டவராகவும் இருக்கிறார். ‘அவரால் என்ன பயன்?’ என யோசித்துக் கொண்டிருக்கும்போது, எழுந்து நடமாடுகிறார். அவருக்கு பின்னேயுள்ள அழுத்தமான கதை தெரிகிற போது கண் கலங்குகிறது.
மணப்பெண்ணின் தாயாக கபிலா வேணு மனதின் படபடப்பை வெளிப்படுத்த முகபாவங்களில் மிரட்சியைக் காட்டி கவர்கிறார்.
விது, கயல் வின்சென்ட், நவயுகா, ஸ்வாதி கிருஷ்ணன், நமசிவாயம் தம்பிபிள்ளை, ரோஹித் உள்ளிட்டோரின் நடிப்பு அளவாய் கலந்திருக்கிறது.
படத்தின் பலம் கதையென்றால் அதை தாங்கும் தூண்களாகியிருக்கிறது செல்வரத்தினம் பிரதீபனின் ஒளிப்பதிவும் கே தந்திருக்கும் இசையும். படத்தில் தேவையற்ற காட்சிகளை அவ்வளவாய் பார்க்க முடியவில்லை. அந்தளவுக்கு செதுக்கி படத்தின் நீளத்தை 101 நிமிடங்களாக்கியிருக்கிறார் படத் தொகுப்பாளர் ராதா ஸ்ரீதர்.
போர்ச் சூழலில் ஈழத் தமிழர்கள் அனுபவித்த கொடுமைகள் ஏராளம். அவற்றை நினைத்தாலே உயிர் நடுங்கும். அப்படியான காலகட்டத்தில் ஒரு திருமணத்துக்கான ஏற்பாடு அது இதுவென கதைக்களத்தை இதுவரை காணாத விதத்தில் உருவாக்கி, ஈழத் தமிழர்கள் அனுபவித்த வலிகளில் திரைப்படைப்புகள் மூலம் வெளிவராத வலியை அதன் தன்மையோடு வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குநர் சோமிதரன்.
Rating 3 / 5

