ஜல்லிக்கட்டு மாதிரியான காளைகளை வைத்து நடத்தப்படும் ‘வட மஞ்சு விரட்டு’ என்ற வீர விளையாட்டில் வெற்றி என்பவர் வளர்க்கும் பாண்டிமுனி என்ற காளை, அந்த ஊரில் வழக்கமாக ஜெயிக்கும் ரத்னவேலின் காளையை பின்னுக்கு தள்ளிவிடுகிறது. அதனால் ஆத்திரமடையும் ரத்னவேல் தரப்பு, பாண்டிமுனி காளையை தாக்கிவிட சிகிச்சை தொடங்குகிறது. ரத்னவேலும் வெற்றியும் பகையாளியாகிறார்கள். அவரை தவிர இன்னும் ஒருசிலரும் எதிரிகளாக உருவெடுத்து வெற்றியைக் கொல்ல சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
வெற்றிக்கு ஏன் அத்தனை எதிரிகள்? அவர்களையெல்லாம் அவர் எப்படி சமாளிக்கிறார்? பாண்டி முனி காளை மீண்டும் களமிறங்கியதா? என்பதெல்லாம் மீதிக்கதை…
விமல் மாடுகளை நேசிப்பவராக, காளைகளை போட்டிக்கு பயிற்சி கொடுத்து தயார்படுத்துபவராக கிராமத்து இளைஞன் வேடத்தில் நன்றாக பொருந்தியிருக்கிறார். அதிரடி ஹீரோயிஸத்திற்கு கொஞ்சமாகவும் அழுத்தமான நடிப்பைத் தருவதற்கு அதிகமாகவும் காட்சிகள் அணிவகுக்க போதுமான அளவில் எல்லாவித உணர்வுகளையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
வழக்கம்போல் கதாநாயகனை வளைத்து வளைத்து காதலிக்கிற வேலைதான் என்றாலும், இடையில் எதிர்பாராத ஒரு அவதாரம் எடுத்து ஆச்சரியப்படுத்துகிறார் நாயகி சனஷ்கா ஸ்ரீ.
மஞ்சு விரட்டில் தன் காளைகள் மட்டுமே ஜெயிக்க வேண்டும் என்ற நினைப்பில் என்ன செய்கிறோம் ஏது செய்கிறோம் என்ற வரைமுறையில்லாமல் நடந்து கொள்கிறார் நட்டி நட்ராஜ்.
காமெடியை ஓரங்கட்டிவிட்டு பரிதாபம், வன்மம் என இருவேறு முகம் காட்டியிருக்கிறார் முனீஸ்காந்த்.
ஆடுகளம் நரேன் ஊரில் பெரிய மனிதர், கதாநாயகனின் தந்தை, கெட்டது செய்பவர்களை தண்டிப்பதில் கறாராக இருப்பவர் என வலம் வருகிறார்.
பாலசரவணன், மதுசூதன் ராவ், பிச்சைக்காரன் மூர்த்தி, தீபா சங்கர், இந்துமதி மணிகண்டன் என பழக்கப்பட்டவர்களை ஏராளமாய் தாராளமாய் பார்க்க முடிகிறது.
ஞானகரவேலின் கதைச்சூழலுக்கு பொருத்தமான வரிகளில் அமைந்த பாடல்களை இமான் இசையில் ரசிக்க முடிகிறது. பின்னணி இசையில் ஆர்ப்பாட்டாம் சற்றே அதிகம். பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவில் மஞ்சு விரட்டுக் காட்சிகளைப் பார்க்கும்போது கூஸ்பம்ஸ் ஃபீலிங்.
போட்டி, பகை, வெட்டுக்குத்து, காதல், காமெடி என கமர்சியல் மசாலாவில் உருவான படைப்புகளில் ஒன்றாக இணையும் இந்த வடம்,
திரைப்படங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளையே பார்த்துள்ள நிலையில் சற்றே வித்தியாசமான ‘வட மஞ்சுவிரட்டு’ என்ற பாரம்பரிய வீர விளையாட்டுப் போட்டியை மையப்படுத்தி உருவான முதல் படம் என்ற பெருமையைத் தக்க வைக்கிறது.
Rating 3.5 / 5

