தன் தம்பி தற்கொலை செய்துகொண்டதில் மர்மம் இருப்பதாக சந்தேகப்படுகிற தடயவியல் நிபுணரான சாரா (பாவனா), காவல்துறை உயரதிகாரி ஒருவர் உதவியுடன் விசாரணையில் இறங்குகிறார். தம்பி மட்டுமல்ல, இன்னும் பலரும் மர்மமான முறையில் மரணித்திருக்க, என்ன நடந்தது, ஏன் நடந்தது என்பதை கண்டறிகிறார். அது இப்படியெல்லாம்கூட நடக்குமா என்ற ஆச்சரிய அதிர்ச்சி தருகிறது. இயக்கம் ரியாஸ் மரத்
பாவனாவுக்கு சொல்லிக்கொள்ளும்படியான கதாபாத்திரம். கெத்தாகவும் இருக்கிறார்; பாசமுள்ள சகோதரியாக மனம் கலங்குவதன் பிரதிபலிப்பை துல்லியமாக வெளிப்படுத்துகிறார்.
காவல்துறை உயரதிகாரியாக ரகுமான். நடிப்பில் வெளிப்படும் கம்பீரத்தில், புலனாய்வு விசாரணையில் காட்டுகிற தெளிவில் அனுபவ நடிப்பு தெரிகிறது.
டாக்டராக வருகிறவரின் சுயரூபம் மிரட்டுகிறது. பாவனாவின் காதலராக வருகிறவரும் அதிர வைக்கிறார். தம்பியாக வருகிறவரிலிருந்து மற்றவர்கள் கவனம் பெறத்தக்க நடிப்பைத் தந்திருகிறார்கள்.
மருத்துவத் துறை சார்ந்த கிரைம் திரில்லர் கதைக்களத்துக்கேற்ற சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு, திரைக்கதையின் வேகத்துக்கேற்ற ஹர்ஷவர்தன் ராமேஸ்வரனின் பின்னணி இசை பய உணர்வைக் கூட்டுவதற்கு உதவியிருக்கின்றன.
புலனாய்வு விசாரணைகளில் விறுவிறுப்பு இருந்தாலும் புதிதாக இல்லையென்பதையும் படத்தின் நீளம் அதிகம் என்பதையும் குறையாக சொல்லலாம்.
வித்தியாசமான கிரைம் திரில்லர் கதைகள் உங்களுக்கு பிடிக்குமென்றால் அனோமி தருகிற அனுபவங்கள் அசத்தலாக இருக்கும். பாவனாவின் நடிப்புக்காகவும் பார்க்கலாம்.
Rating 3 / 5

