சமூக அவலங்களை தோலுரித்துக் காட்டும் திரைப்படங்களின் வரிசையில் மற்றுமொரு படம்.
இளம்பெண் ஷிவானிக்கு திருமணமாகிறது. திருமணம் செய்துகொண்டவன், தன்னைப் போலவே பலரை திருமணம் செய்து, அவர்களை அடைத்து வைத்து தவறான முறையில் பயன்படுத்துபவன் என்பதை தெரிந்து கொள்கிறாள். ஒரு கட்டத்தில் அவன் அவளை ஒரு அமைச்சரின் காமவெறிக்கு பலிகொடுக்க தயாராகிறான்.
அவள் அந்த ஆபத்தான சூழ்நிலையிலிருந்து தப்பிக்க வேண்டும்; தன்னைப் போலவே சிக்கியிருக்கும் மற்ற பெண்களையும் காப்பாற்ற வேண்டும் என நினைக்கிறாள். நினைத்ததை அவளால் செய்ய முடிந்ததா இல்லையா என்பது மீதிக்கதை.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் தருகிற கதை. அதற்கேற்றபடி திருமண மோசடி கும்பலை சட்டத்தின் பிடியில் சிக்க வைக்க எடுத்துக் கொள்ளும் முயற்சியாகட்டும், அந்த கும்பலை வெட்டிச் சாய்க்க வாய்ப்பு கிடைக்கும்போது வெறியேறி சம்பவம் செய்வதாகட்டும் தன்னால் இயன்றளவில் சிங்கப் பெண்ணாக சீற்றம் காட்டியிருக்கிறார் ஷிவானி. ஹீரோவுடன் ரொமான்ஸ், டூயட் பாட்டு என இன்னொரு பக்கம் ஜாலியாகவும் வலம் வருகிறார்.
ஒரே நபர் சூழ்ச்சியான அணுகுமுறையால் பல பெண்களை திருமணம் செய்து அவர்களின் வாழ்க்கையை சீரழித்த சம்பவங்கள் நம் நாட்டில் நிறைய நடந்ததுண்டு. அப்படி சூழ்ச்சி செய்து பெண்களை நாசமாக்குகிற கதாபாத்திரத்தில் பகவதி பாலா. டெரரான விஷயங்களைச் செய்யும் அவர் முகத்தை அப்பாவித்தனமாக வைத்துக்கொண்டிருப்பது கவனம் ஈர்க்கிறது. அவரை விட அவரது கும்பலில் உள்ள பெண்கள் ரவுடித்தனத்தை ரசித்துச் செய்திருக்கிறார்கள்.
ஹீரோயினை காதலிப்பது, அவளை வில்லன் கும்பலிடம் பறிகொடுப்பது, வில்லன்களை பழி வாங்க களமிறங்குவது என கதாநாயகனுக்கான பங்களிப்பை பரவாயில்லை என்று சொல்லும் அளவில் செய்திருக்கிறார் தில் நட்ராஜ். கதைப்படி அவர் ஹைகிரேடு போலீஸ் ஆஃபீஸர். அவரது உடற்கட்டில் அதற்கான கெத்து மிஸ்ஸிங்.
இமான் அண்ணாச்சி குழந்தைகளுக்கும்கூட பிடித்தவர். அவரை திருச்சி சாதனாவுடன் கோர்த்துவிட்டு காமெடி என்ற பெயரில் ஒரு மாதிரியான ஆபாச காட்சியை எடுத்துக் கோர்த்திருக்கிறார்கள்.
கதையின் நாயகி சமுக விரோதிகளை வதம் செய்யும் முன் வருகிற திசையெங்கும் கயவர் கூட்டம் பாடலுக்கு ஆக்ரோஷம் பொங்கும் இசையைக் கொடுத்திருக்கும் ஏ சி ஜான்பீட்டர் பின்னணி இசையில் குறை வைக்கவில்லை. எளிமையான பொருட்செலவில் தயாரிக்கப்பட்டிருக்கும் படத்துக்கேற்ற எளிமையான ஒளிப்பதிவால் காட்சிகளை கச்சிதமாக பதிவு செய்திருக்கிறார் மஹிபாலா.
காமவெறி பிடித்த ஆண்களால் பெண்கள் பல விதங்களில் பாதிக்கப்படுகிறார்கள். அதில் திருமணம் என்கிற பெயரில் நடக்கும் கொடுமைகள் உயிரை உலுக்குபவை. அதை மையக்கருவாக எடுத்துக் கொண்டு, ஹீரோ, ஹீரோயின் உட்பட பல புதுமுகங்களோடு சில பிரபல நடிகர்களை சேர்த்துக் கொண்டு, சிம்பிள் பட்ஜெட்டில், கமர்சியல் அம்சங்கள் கலந்து இயக்குநர் பகவதி பாலா இயக்கியிருக்கும் இந்த படம் வெற்றிபெறுவதில் தடுமாறினாலும், சமூக விழிப்புணர்வூட்டும் நோக்கத்திலிருந்து தடம்மாறவில்லை.
Rating 3 / 5

