‘ஹீரோயின் சென்ட்ரிக் ஃபிலிம்’ என்று சொல்லப்படுகிற ஜானரில் கதைநாயகியை சுற்றிச் சுழன்று திரை விருந்து படைக்கும் ‘திரைவி.’
ஒரு பெரிய பங்களாவுக்குள் நுழைந்த அந்த திருடனுக்கு இரண்டு வாய்ப்பு எதிரில் இருக்கிறது. கையில் கிடைத்ததை சுருட்டிக்கொண்டு கிளம்பலாம். போலீஸில் சிக்கினால் திருடிய குற்றத்துக்கு ஒன்றிரண்டு மாதங்கள் சிறை தண்டனை கிடைக்கும். அந்த வீட்டின் எஜமானியை சுட்டுக் கொன்றால் கூடுதலாக பணம் நகை என அள்ளிக் கொண்டு எஸ்கேப்பாகலாம். போலீஸில் சிக்கினால் பல வருடங்கள் சிறையிலேயே கழிக்க வேண்டியிருக்கும். அந்த திருடன் எந்த வாய்ப்பை பயன்படுத்துவான்?
கிட்டத்தட்ட இந்த கேள்விக்கான பதில்தான் படத்தின் திரைக்கதை. அதற்குள், தன்னை கொலை செய்கிற வாய்ப்பை அந்த வீட்டு முதலாளியே அந்த திருடனுக்கு தருகிறாள்; அவள் தற்கொலைக்கு முயற்சித்துக் கொண்டிருந்த நேரமாகப் பார்த்து திருடன் உள்ளே நுழைந்திருக்கிறான்; அவன் திருட துவங்கியதே அன்றுதான்; அவனுக்கு லங் கேன்சர் வேறு இருக்கிறது; அந்த கன்னித் திருடனுக்கு அவளை கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை; திருடன் அவளையும் காப்பாற்றி தன்னையும் காப்பாற்றிக்கொள்ளும் முடிவுக்கு வருகிறான் என ஏகப்பட்ட பரபரப்பை கலந்துகட்டியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் தட்சிணாமூர்த்தி.
திருடனிடம் தற்கொலை முயற்சிக்கான காரணத்தை இந்த கதையின் நாயகி ஆஷ்னா சவேரி சொல்லும்போதும், தன்னைக் கொலை செய்யச் சொல்லி வலியுறுத்தும் போதும் ஐயோ பாவம் என்றிருக்கிறது. நேரம் போகப்போக அவரிடம் உருவாகும் மாற்றங்கள், திமிரும் தெனாவட்டுமான உடல்மொழியில் நல்ல நடிப்பு வெளிப்படுகிறது.
திருட வந்த இடத்தில் கொலை செய்ய வேண்டும் என்கிறபோது உருவாகிற பதட்டத்தை வெகுநேரம் தக்கவைக்கும் முனீஸ்காந்த் சிரிப்புக்கு கேரண்டி தருகிறார். அவர் ஏன் அந்த வீட்டுக்குள் வந்தார், எதற்காக வந்தார் என்பதையெல்லாம் எடுத்துச் சொல்லும்போது ஆச்சரியத்துக்குள் விழ வேண்டியிருக்கிறது.
‘பிடிச்சிருக்கு’ அசோக்குமார் கதாநாயகியின் கணவராக வருகிறார். அப்பாவியாகவும், அடப் பாவி என வெறுப்பாகப் பார்க்கும்படியும் ஒருசில விஷயங்களைச் செய்கிறார். உணர்ச்சிக் கொந்தளிப்பு, உணர்வுப் பரிமாற்றம் என இரண்டும் ஓகே ரகம்.
இந்த மூன்று பேரைத் தாண்டி போலீஸ் அதிகாரியாக சரவண சுப்பையா, செக்யூரிடியாக வினோத் சாகர், தொழிலதிபராக நிழல்கள் ரவி என கதையில் மிச்சமிருக்கும் ஒரு சில நடிகர்கள் ஜஸ்ட் வந்து போகிறார்கள். நடிப்பில் குறையில்லை. ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார் அஸ்மிதா.
என்.டி.ஆர் இசையில் பாடல்கள் இதமூட்டுகின்றன. ஆர் அதிசயராஜின் ஒளிப்பதிவும், ஆர்.வசந்தகுமாரின் படத்தொகுப்பும் படத்தை தாங்கியிருக்கின்றன.
படத்தில் நடித்திருப்பது மொத்தமே ஐந்தாறு பேர்தான். அதில் ஆஷ்னா முனீஸ்காந்த என இரண்டு பேரை மட்டுமே அதிக நேரம் பார்க்கிறோம். ஆனாலும் பெரிதாக அலுப்போ சலிப்போ வரவில்லை. அதற்கு காரணம் நாம் ஒன்றை எதிர்பார்த்தால் வேறொன்றாக நடக்கிற சம்பவங்கள். கிளைமாக்ஸும் அசத்துகிறது.
திரைவி – திருப்பங்கள் நிறைந்த திரில்லர்!
Rating 3.5 / 5 

