தமிழ் சினிமாவில் சாதிவெறியை மையப்படுத்திய படைப்புகளுக்குப் பஞ்சமேயில்லை. அந்த வரிசையில் சாதி வெறியர்களின் அக்கிரம அராஜகத்தை சுற்றிச் சுழல்கிற கதையாக ‘பருத்தி.’
கதையின் நாயகி கன்னியம்மாள். அவள் ஊருக்குள் அவ்வளவாக வருவதில்லை; எப்போதாவது வந்தாலும் அவரை ஒரு பாட்டி கடுமையான வார்த்தைகளால் திட்டித் தீர்க்கிறாள். அந்த பாட்டியின் அரவணைப்பில் வாழும் சிறுவன் அவன் வயதிலிருக்கிற உயர்சாதிப் பெண்ணுடன் பழகுகிறான். அதனால் அந்த பெண்ணுக்கு வீட்டில் பிரச்சனை வருகிறது. அப்படியான சூழ்நிலையில் அவனது பாட்டி இறந்துபோக அவன் அனாதை போலாகிறான். அப்போதுதான் கன்னியம்மாள் அவனது அம்மா என்பதும், அவளைத்தான் தன் பாட்டி திட்டிக் கொண்டிருந்திருக்கிறாள் என்பதும் அவனுக்கு தெரிகிறது.
கன்னியம்மாள் மகனை விட்டுப் பிரிந்து வாழ்வது ஏன்? அவளை அம்மாவாக அந்த மகன் ஏற்றுக் கொண்டானா? அவனுக்கும் உயர்சாதிப் பெண்ணுக்குமான நட்பு என்னவானது? என்பதெல்லாம் மீதிக் கதை…
கன்னியம்மாளாக கணவனை இழந்து, மகன்களைப் பிரிந்து வாழ்கிற வலியை பொருத்தமான நடிப்பால் பிரதிபலிக்கிற சோனியா அகர்வால், பொருத்தமேயில்லாமல் புத்தம்புது உடைகளை உடுத்தியபடி விவசாயக் கூலியாக சிலபல வேலைகளையும் செய்கிறார்.
கதைநாயகனாக வருகிற திலிப்ஸுக்கு தாய் தந்தையில்லாமல் பாட்டியின் அரவணைப்பில் வறுமைச் சுழலில் வாழ்கிற நிலைமை. ஒடிசலான அந்த சிறுவனின் தோற்றமே பரிதாப உணர்வைத் தூண்டிவிட சொந்த சித்தப்பாவிடமே சாப்பாட்டை பிச்சையாக பெறும்போது அந்த பரிதாபம் அதிகமாகிறது. உயர்சாதி சிறுமியிடன் நட்பாகப் பழகும்போது, அவளை சாமியாக மதிக்கும்போது, அவளை இனி சந்திக்க முடியாதோ என நினைத்து வருந்தும்போது, பாட்டியை இழந்து கலங்கும்போது, அம்மா யார் என தெரிந்தபின் அவளிடம் கோபம் காட்டும்போது என இயல்பான நடிப்பு கவனம் பெறுகிறது.
திலிப்ஸுடன் பழகுகிற சிறுமி வர்ஷிட்ட சுகன்யா திலிப்ஸ் மீது காட்டும் கனிவும், சாதிவெறி பிடித்த தன் பாட்டியிடம் சிக்கிக் கொண்டு அவதிப்படுவதும், சாதி என்றால் என்ன, ‘தீட்டு என்றால் என்ன?’ என்று கேள்வி எழுப்புவதும் கவனம் பெறுகிறது.
சிறுமியின் அப்பா சாதிப் பாகுபாடு பார்க்காத உயர்சாதிக்காரராக வலம்வந்து மதிப்பில் உயர்கிறார். அவரது அண்ணன் சாதிவெறியராக சொந்த மகனையே கொலை செய்து சமூக அவலத்தின் சாட்சியாக நிற்கிறார்.
படத்தில் இரு பாட்டிகளுக்கு முக்கியத்துவம். ஒருவருக்கு சாதி வெறியில் அநியாயமாக நடந்துகொள்கிற வேலை. இன்னொருவருக்கு பேரனை அன்பாக வளர்க்கிற, அவனது அம்மாவான சோனியா அகர்வாலை நியாயமில்லாமல் வசைபாடுகிற வேலை.இருவரும் நடிப்பதாகவே தெரியவில்லை; கேரக்டர்களாகவே மாறிவிட்டது போலிருக்கிறது.
ரஞ்சித் வாசுதேவன் பாடல்களுக்கு இதமான இசை தந்து, பின்னணி இசையை தேவைக்கு சற்றே தூக்கலாக தந்திருக்கிறார். கிராமத்தின் தன்மையை உள்வாங்கிப் பிரதிபலித்திருக்கிறது ராஜேஷின் ஒளிப்பதிவு.
சமூகத்தில் எந்த இடத்திலும், யாருடைய மனதிலும் செயலிலும் சாதிப் பாகுபாடு இருக்கக்கூடாது என்பது இயக்குநர் ஏ குருவின் நோக்கம். அதை வலியுறுத்தும்படியான கதையை உருவாக்கி, கதைக்கேற்ற நடிகர் நடிகைளை இடம்பெறச் செய்து, படத்தை எளிமையான படைப்பாக்கியிருக்கிறார். நோக்கம் சரியானதுதான். படம் இப்போதைய ஆடியன்ஸின் எதிர்பார்ப்புக்கு பொருத்தமானதா என்பதுதான் கேள்விக்குறி.
Rating 2 / 5


