குற்றச் செயல்கள் தாராளம், கொலைகள் ஏராளம் என சென்னையில் கெத்து காட்டிக் கொண்டிருப்பவர் பூங்காவனம். அப்படிப்பட்டவர் சட்டத்தின் பிடியில் ஒரு தடவைகூட சிக்கியதில்லை. அந்தளவு செல்வாக்கு மிக்கவர்.
அந்த செல்வாக்கை தகர்த்து, அவரை கைது செய்து தண்டிக்க தயாராகிறார் ஒரு பெண் போலீஸ் அதிகாரி. பூங்காவனத்தை கொன்றழிக்க அவரது தொழில் போட்டியாளர்களில் ஒரு குழு களமிறங்குகிறது. கதை இப்படி துவங்க, பூங்காவனம் யாரிடம் சிக்குகிறார் என்பதே படத்தின் திரைக்கதையும் கிளைமாக்ஸும்.
வில்லனாக நடித்து வெட்டுக்குத்தில் ஈடுபடுவது, கொலைகளை குஷியாகச் செய்வது என எல்லாமும் ஆனந்த்ராஜுக்கு பழக்கப்பட்ட விஷயங்கள். அதை பூங்காவனமாக எழுந்து நின்று வீரியமாகவும் நகைச்சுவையோடும் செய்து தனக்கான காட்சிகளை சுவாரஸ்யமாக்கியிருக்கிறார்.
பூங்காவனத்தை சட்டப்படி தண்டிக்க எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் முயற்சி செய்து, தான் நினைத்ததை சூழ்ச்சி கலந்து செய்து முடிக்கும் போலீஸ் அதிகாரியாக சம்யுக்தா, ஏற்ற கேரக்டருக்கு பொருத்தமான கம்பீரத்தை தனது நடிப்பில் காண்பித்திருக்கிறார்.
பூங்காவனத்தின் மனைவிகளாக தீபா சங்கரும் சசி லயாவும் சண்டை சச்சரவில் ஈடுபடுவதை சிரிப்பூட்டும்படி செய்திருக்க, மூன்றாவதாக ஷகிலாவும் சேர்ந்துகொள்ள கலகலப்பு அதிகரிக்கிறது.
முனீஸ்காந்த், ஆராத்யா, ராம்ஸ் என மற்றவர்கள் நடிப்பு கதையோட்டத்தில் சரியாக பொருந்துகிறது.
ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் மனதில் தங்குவது சந்தேகம்தான் என்றாலும் கேட்கும்போதும், காட்சியாக பார்க்கும்போதும் ரசிக்க முடிகிறது. அதிலும் அஸ்மிதா ஆட்டம் போடும் பாடலுக்கான இசை ரகளை. அசோக்ராஜின் ஒளிப்பதிவு நேர்த்தி.
ரவுடியிஸம் பெரிதா, சட்டத்தின் ஆளுமை பெரிதா என்பதை மையமாக வைத்து கமர்சியல் அம்சங்களுடன் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் ஏ.எஸ்.முகுந்தன், ‘ஒருவன் இறந்தபின் அவனுக்காக அழுகிறவர்கள் இல்லையென்றால் அவனது பிறவி அர்த்தமற்றது’ என்பதை அழுத்தமாக உணர்த்தியிருக்கிறார்.
Rating 3 / 5


