முத்துராமலிங்கம் என்பதோடு நிறுத்திக் கொள்வதில்லை; ‘தேவர்’ என்ற சொல்லைச் சேர்த்தே அவருடைய பெயரை உச்சரிக்கிறோம்; எழுதுகிறோம். தவிர்க்க முடிவதில்லை.
ஏராளமானோர் அவரை தேவர் சாதி மக்களுக்கு மட்டுமான பிரதிநிதியாக, தலைவராக கருதுகிறார்கள். அதையும் தவிர்க்க முடியவில்லை.
அதையெல்லாம் தாண்டி அவரது வாழ்க்கைப் பயணத்தை ஊடுருவிப் பார்த்தால் அவர் ஒட்டுமொத்த மக்கள் நலனுக்கான பாடுபட்டவர், எதிர்ப்புகளைச் சந்தித்தவர் என்பதை தெரிந்து கொள்ளலாம். தெரிந்துகொள்ளும்போது அவர் சாதித் தலைவரில்லை என்பதை உணரலாம்.
இந்தியா சுதந்திர நாடான பிறகு மக்களின் செல்வாக்கைப் பெற்று எம் எல் ஏ’வாக, எம் பியாக பொறுப்பு வகித்தவர் என்பது அவருக்கான அரசியல் கள அடையாளமாக இருக்கிறது. அதற்கு முன்பே, இந்தியாவை அடிமைபடுத்தி வைத்திருந்த வெள்ளையர்களின் ஆட்சியின் மக்கள் விரோதப் போக்கிற்கு எதிராக குரல் கொடுத்து நினைத்ததை சாதித்ததிலிருந்து, சுபாஸ் சந்திரபோஸுடன் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டது வரை இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னும் துணிச்சல்மிக்க ஆளுமையாக இருந்திருக்கிறார்.
இன்று நாம் பெருந்தலைவர் என்ற அடைமொழியோடு மதிக்கிற காமராஜரை அரசியல் களத்துக்கு அறிமுகப்படுத்தி தேர்தலில் ஜெயிக்க வைத்து மக்கள் தலைவராக உருவாக்கிய பெருமைக்கும் சொந்தக்காரர்.
கொலைக் குற்றச்சாட்டுக்கு ஆளாகி சட்டப் போராட்டங்களைச் சந்தித்து நீதிமன்றத்தால் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்டு கம்பீரமாக வலம் வந்தவர்.
சாகும் காலம்வரை உண்மையான பிரம்மச்சாரியாக வாழ்ந்தவர். மரணத்தை தழுவும் காலம் நெருங்கிய நிலையில் சித்தராக மாறி வாழ்ந்தவர்.
இப்படி மக்கள் நலன் சார்ந்து செயல்பட்ட, வாழ்நாள் முழுக்க ஒழுக்கத்தைக் கடைப்பிடித்த, பயம் என்ற உணர்வின்றி வாழ்ந்த, ஆச்சரிய மனிதர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்றை கண்ணியம் குறையாதபடி திரைப் படைப்பாக்கியிருக்கிறார் இயக்குநர் அரவிந்த் ராஜ்.
தோற்றப் பொருத்தம் அசத்தலாக இருக்க, பாராட்டுக்களை கொட்டிக் கொடுக்கும்படி நடிப்புப் பங்களிப்பை வழங்கியிருக்கிறார் தேவராக நடித்திருக்கிற ஜெ எம் பஷீர்.
காந்தி, நேரு, சுபாஸ் சந்திரபோஸ், காமராஜர் என நாடறிந்த தலைவர்களின் கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள், மற்ற கேரக்டர்களை ஏற்றிருப்பவர்கள் குறை சொல்லமுடியாத பங்களிப்பை வழங்கியிருக்க,
தேவரின் அருமை பெருமைகளை எடுத்துச் சொல்லும் பாடல்களுக்கு தன் இசையால் கம்பீரத்தை தந்திருக்கும் இளையராஜா, காட்சிகளுக்கு உயிரூட்டும்படி பின்னணி இசையை வழங்கி படத்தை தாங்கியிருக்கிறார்.
ஒளிப்பதிவு நேர்த்தியாக இருக்க, கலை இயக்குநரின் உழைப்பு பல காட்சிகளில் தென்படுகிறது.
எளிய பட்ஜெட்டிலான படைப்பு என்றாலும், நம்மிடையே வாழ்ந்து மறைந்த தலைவர் ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை முடிந்தவரை நேர்த்தியாக உருவாக்கம் செய்திருக்கும் படக்குழுவை மனம் திறந்து பாராட்டலாம்!
Rating 3.5 / 5


