உணர்வுபூர்வமான கதையில் உருவான ‘இட்லி கடை.’
தன்னுடைய இட்லி கடையில் தன் கைப்பக்குவத்தில் தயாராகும் இட்லியின் சுவைக்கு ஊர் மக்களை அடிமையாக்கி வைத்திருக்கிறார் சிவனேசன். அவர் இறந்தபின் கடையை நடத்த, வெளிநாட்டு ஸ்டார் ஹோட்டலில் செஃப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கும் அவரது மகன் முருகன் (தனுஷ்) முன் வருகிறார். ஆர்வமாக தொழிலில் இறங்கினாலும் அப்பா கொடுத்த சுவையில் இட்லி, சட்னியை தயாரிக்க முடியாமல் திணறுகிறார். ஊர் மக்கள் மத்தியில் கடைக்கு இருந்த மரியாதை குறைகிறது.
அது போதாதென்று, முருகனையும் கடையையும் ஒழித்துக் கட்ட அஸ்வின் என்ற அயல்நாட்டு கார்ப்பரேட் பணக்காரன் களமிறங்குகிறான். கதையில் இப்படி பரபரப்பு பற்றிக்கொள்ள, அந்த அஸ்வினுக்கும் முருகனுக்கும் என்ன பிரச்சனை? முருகனால் அஸ்வினின் தாக்குதலை சமாளிக்க முடிந்ததா? இட்லியில் அப்பாவின் ருசியைக் கொண்டுவர முடிந்ததா? என்ற சிலபல கேள்விகளுக்கு பதில் சொல்லி நிறைவுக்கு வருகிறது தனுஷ் இயக்கியிருக்கும் ‘இட்லி கடை.’
‘என்னுடன் உதவியாக இருந்து கடையை பொறுப்பெடுத்து நடத்து’ என்பதுபோல் தன் அப்பா உயிருடன் இருக்கும்போது சொன்னதை பொருட்படுத்தாமல் கேட்டரிங் படித்து வெளிநாட்டில் வேலை தேடிக் கொள்ளும்போதே தன் கதாபாத்திரம் அடுத்து என்ன செய்யும் என்பதை லேசாக சொல்லிவிடுகிறார் தனுஷ்.
வெளிநாட்டில் தான் வேலை பார்க்கும் ஸ்டார் ஹோட்டல் எம் டி’யின் மகளைக் காதலித்து கல்யாணம் வரை சென்ற நிலையில் அப்பா காலமாகிவிட, பல்லாயிரம் கோடிக்கு அதிபதியாகும் வாய்ப்பை உதறித்தள்ளி அப்பாவின் கடையை தொடர்ந்து நடத்த எடுத்துக் கொள்ளும் முயற்சிகளில் நடிப்பு அசுரன் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பு கதாபாத்திரத்தின் தரத்தைக் கூட்டுகிறது.
தன்னை மூர்க்கமாக தாக்கும் அஸ்வினை திருப்பியடிக்கும் ஆக்சன் காட்சிகளில் அனல் பறக்கச் செய்திருக்கும் அவருக்கு ஃபாரினில் ஒருவர், உள்ளூரில் ஒருவர் என இரு ஜோடிகள் அமைந்துவிட அளவான ரொமான்ஸில் ஈடுபடுவதற்கும் திரைக்கதையில் நேரம் ஒதுக்கியிருக்கிறார்.
தான் தயாரிக்கும் இட்லியின் சுவை எக்காரணம் கொண்டும் குறைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிற ராஜ்கிரண் அதற்காக போடும் உழைப்பினாலும் அர்ப்பணிப்பாலும் கதையின் நாயகனாக உயர்ந்து நிற்கிறார். அவரது மனைவியாக வருகிற கீதா கைலாசத்தின் நடிப்பு நெகிழ வைக்கிறது.
தனுஷ் மீது, தன் தங்கையைக் காதலித்து கைவிட்ட கோபத்தை காட்டுகிற கடமை அருண் விஜய்க்கு. அந்த கடமையை, சண்டைக் காட்சிகளில் மிரட்டலாக பங்களித்து கார்ப்பரேட் கம்பீரத்துடன் நிறைவேற்றியிருக்கிறார்.
தனுஷை காதலிப்பதில் ஷாலினி பாண்டே பணக்காரத் தனத்தை பந்தாவாக காட்ட, நித்யா மேனன் காட்டும் காதலில் இருக்கும் ஆழமான அன்பும் வெகுளித்தனமும் மனதில் நிரம்புகிறது.
அருண் விஜயின் அப்பாவாக, உலகமகா கோடீஸ்வரராக வருகிற சத்யராஜ் பண்பையும் திமிரையும் தேவையான இடங்களில் பிரதிபலித்திருக்கிறார். சமுத்திரகனி, இளவரசு உள்ளிட்ட மற்றவர்களின் நடிப்பு நிறைவு.
கதைக்குப் பொருத்தமான பாடல்கள் ஜி வி பிரகாஷ் இசையில் உயிரோட்டம் பெற, பின்னணி இசை காட்சிகளின் தன்மைக்கேற்ப பயணித்திருக்கிறது.
கிரண் கௌசிக்கின் ஒளிப்பதிவு, கலை இயக்குநர் ஜாக்கியின் ஈடுபாடு இரண்டும் இணைந்து படத்தை பலப்படுத்தியிருக்கின்றன.
‘பாரம்பரிய தொழிலை விட்டுடாதீங்க’ என்று கருத்து சொல்லி ‘எல்லாரும் கிராமத்தை விட்டு வெளியூர் வெளிநாடுன்னு கிளம்பிட்டா கிராமத்தோட பாரம்பரியமெல்லாம் என்னவாகுறது?’ என யோசிக்க வைத்திருக்கும் இந்த இட்லி கடைக்கு குடும்பத்தோடு போகலாம். மண்மணம் சுவாசித்து திரும்பலாம்!
Rating 4.5 / 5


