சண்டை போட்டு பிரிந்த கணவன் மனைவி மீண்டும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். அந்த சண்டையாலேயே சேர்கிறார்கள். அவ்வளவுதான் படத்தின் கதை.
இந்த எளிமையான கதைக்கு தாறுமாறான காமெடி கலாட்டாக்களுடன் திரைக்கதை அமைத்து குடும்பம் குட்டிகளோடு பார்த்து ரசிக்கும் படமாக தந்திருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.
விஜய் சேதுபதி நித்யா மேனனை காதலிக்கும்போது அசடு வழிகிறார்; அவருடன் சண்டை போடும்போதும் அதையே செய்கிறார். எல்லாமே ரசிக்கும்படி இருக்கிறது. உறவினர்களுடன் அடிதடி கலாட்டாக்களில் ஈடுபடும்போதும் ரசிக்க வைக்கிறது அவரது உடல்மொழி. வசனங்களை பேசுவதற்கு பதிலாக கத்திக் கொண்டே இருப்பது மட்டும் சலிப்பு தட்டுகிறது.
விஜய் சேதுபதிக்கு உடலளவில் நித்யா மேனன் செம பொருத்தம். சண்டை போடுவது, சேர்ந்து கொள்வது, மீண்டும் சேர்ந்து கொள்வது என நீளும் காட்சிகளில் அவரது வெகுளித்தனமான நடிப்பு மனதுக்கு உற்சாகமூட்டுகிறது.
ஹீரோவும் ஹீரோயினும் சண்டை என்கிற பெயரில் அன்லிமிடெடாக காமெடி களேபரங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, அதை தாண்டி தனது ஸ்டைலில் டயலாக் பேசி கலகலப்பூட்டுகிறார் யோகி பாபு.
இரு தரப்பு குடும்ப உறுப்பினர்களாக வருகிற சித்தப்பு சரவணன், தீபா சங்கர், ரோஷிணி ஹரிபிரியன், செம்பன் வினோத், ஊர்க் காரர்களாக வருகிற காளி வெங்கட் _ மைனா நந்தினி ஜோடி என பலரும் கவனம் பெறுகிற அளவுக்கு நடித்திருக்க,
சந்தோஷ் நாராயணன் இசையில் ‘பொட்டல முட்டாயே’ பாடல் கிறங்கடிக்கிறது. ‘ஆகாச வீரன்’ பாடலும் கவர்கிறது.
எம் சுகுமாரின் ஒளிப்பதிவு மிகமிக தரம்.
படம் பார்த்து முடித்த பிறகும் சில காட்சிகளை நினைத்து நினைத்து சிரிக்கவும்,
கொத்து பரோட்டா, கிளி பரோட்டா, பன் பரோட்டா, பொறிச்ச பரோட்டா என தயாரிக்கிற காரசார அசைவ ஹோட்டலுக்கு கிளம்பிப் போகவும் வாய்ப்பிருக்கிறது.
தலைவன் தலைவி _ கலகலப்புக்கு கேரண்டி.

