‘நீ யாரா வேணா இரு; நான் என் கடமையைச் செய்தே தீருவேன்; தட்ஸ் ஆல்’ என, அநியாயக்காரர்களை ஆவேசமாக எதிர்க்கும் காவல்துறை அதிகாரியின் கதையாக ‘கட்ஸ்.’
வி ஏ ஓ ஒருவர் கொலை செய்யப்பட, கொலை செய்தவன் கார்ப்பரேட் முதலாளியாக இருக்க, அவனை துணிச்சலாக தூக்கிவந்து லாக்கப்பில் அடைக்கிறார் இன்ஸ்பெக்டர் ரங்கராஜ். அந்த ஆத்திரத்தில் அவன், ரங்கராஜை பழிவாங்கும் வேலையில் இறங்குகிறான். அவன் செய்தது என்ன, அதனால் ரங்கராஜ் இழந்தது என்னென்ன, அவனை ரங்கராஜ் என்ன செய்கிறார் என்பதெல்லாம் மீதிக் கதை.
இன்னொரு பக்கம் ரங்கராஜின் அப்பாவும் அநியாயத்துக்கு எதிராக பொங்குபவராக இருந்தது, அதனால் அவரும் அவர் மனைவியும் பட்ட கஷ்ட நஷ்டங்கள் என பரபரப்பான பிளாஷ்பேக்கும் எட்டிப் பார்க்கிறது.
படத்தை இயக்கியிருக்கிற, இன்ஸ்பெக்டராக வருகிற ரங்கராஜ் போலீஸ் அதிகாரிக்கான கம்பீரமான உடல்மொழியை தன்னால் முடிந்தளவில் வெளிப்படுத்தி, மனைவி மீதான காதல் உணர்வு, மகள் மீதான பாசப்பிணைப்பை இயல்பாக பிரதிபலித்திருக்கிறார். அவருக்கு மனைவியாக வருகிற நான்ஸியின் அழகும், கேரக்டருக்கு பொருத்தமான நடிப்பும் கவர்கிறது.
ரங்கராஜுக்கு அப்பாவாகவும் ரங்கராஜே நடித்திருக்கிறார். கார்ப்பரேட் தொழிலதிபரின் விவசாய நிலத்தைக் கெடுக்கும் திட்டத்தை ஆக்ரோசமாக தடுத்து அதனால் கொடுமைகளை அனுபவித்து தனது கடமையை நிறைவு செய்கிறார். வில்லங்க வீடியோ பிரபலம் ஸ்ருதி நாராயணனுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரம் கனமானது; கவர்ச்சி, ஆபாசம் என எதுவும் இல்லாதது. அன்பான மனைவியாகவும், தைரியமான பெண்மணியாகவும், கொடுமைகளைத் தாங்கி மீண்டுவரும் சக்தியாகவும் அவர் தந்திருக்கும் நடிப்பு தரமானது.
மண்ணைக் காக்கும் போராட்டத்தில் அதிரவைக்கும்படியும் தங்கை மகன் மீதான பிரியத்தில் நெகிழவைக்கும்படியும் பங்களித்திருக்கிறார் சாய் தீனா.
நம் மண்ணின் வளங்களைக் கெடுக்கத் துடிக்கும் கார்ப்பரேட் பிஸினஸ் மேனாக பிரவீன் மஞ்ச்ரேக்கரின் வில்லத்தனத்திலிருக்கும் கெத்து பரவாயில்லை ரகம். மற்றவர்கள் கதையின் தன்மை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
‘இணையாய் துணையாய்’ என்ற பாடலின் இசையில் இதம் கூட்டி, பின்னணி இசையால் காட்சிகளுக்கு புத்துணர்ச்சியூட்ட முயற்சித்திருக்கிறார் ஜோஸ் பிராங்ளின்.
ஒளிப்பதிவு நேர்த்தி தெரிகிறது.
காவல்துறை அதிகாரி நேர்மையானவராக, ‘கட்ஸ்’ உள்ளவராக இருக்கிற பட்சத்தில் அந்த கதைகள் எப்படி பயணிக்குமோ அப்படியே பயணித்து முடிகிற இந்த படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல சிலபல குறைகள் உண்டு. அதையெல்லாம் ‘எத்தனை தடைகள் வந்தாலும் மண்ணையும் மொழியையும் காப்பது நம் கடமை’ என்கிற படம் வலியுறுத்தும் கருத்து பின்னுக்குத் தள்ளி விடுகிறது.
கட்ஸ் _ தீமைகளை ஏறி மிதிக்கும் போராளி; மண்ணின் காவலன்!
Rating 3 / 5

