அந்த இளைஞன் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு, நம்மூருக்கு திரும்பும்போது ‘ஜின்’ என்ற பேயோடு வருகிறான். பெட்டிக்குள் அடைக்கப்பட்டிருக்கும் அந்த ஜின்னுக்கு சாப்பிட பால் பிஸ்கட் கொடுத்து ‘பெட்’ அனிமல் போல் பார்த்துக் கொள்கிறான். அந்த ஜின்னை தொட்ட நேரம் அவனுக்கு ஒன்றிரண்டு நல்ல விஷயங்கள் நடக்கிறது. அதனால் ஜின்னை அவன் ராசியாக நினைக்கிறான்.
ஜின் வீட்டுக்கு வந்ததிலிருந்து வீட்டிலுள்ளவர்களுக்கு ஒன்றிரண்டு கெட்ட விஷயங்கள் நடக்கிறது. அதனால் அவர்கள் ஜின்னை பார்த்து பயப்படுகிறார்கள். ஒரு நாள் அவன் மனைவி ரத்த வெள்ளத்தில் கிடக்கிறாள். அவள் மீது கொலை முயற்சி நடந்துள்ளது தெரிகிறது.
அதற்கு ஜின் தான் காரணம் என்ற முடிவுக்கு வருகிறார்கள். உண்மையில் ஜின் என்பது நல்லது செய்கிற பேய். அப்படியெனில் மனைவியை கொலை செய்ய முயற்சி செய்தது யார்? ஜின் ராசியானதா? ஆபத்தானதா?
இப்படியான குழப்பங்களை தீர்த்து வைக்கும் விதமாக திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் டி ஆர் பாலா.
முகேன் ராவ் புன்னகை தவழும் முகவெட்டோடு புஸுபுஸுவென்றிருக்கிறார். துடிப்பாக, பதற்றமாக, உற்சாகமாக, கவலையாக என காட்சிகளின் தேவைக்கேற்ப நடித்திருக்கிறார்.
ஹீரோயின் பவ்யா திரிகாவுக்கு ஹீரோவை காதலிக்க வேண்டிய, அவருக்கு மனைவியாக வேண்டிய, கண் எதிரில் நடக்கும் அநியாய அக்கிரமத்தை பார்த்து கொதிக்க்க வேண்டிய வேலைகள் தரப்பட்டிருக்க அதை குறையின்றி செயதிருக்கிறார்.
இமான் அண்ணாச்சி, வினோதினி, வடிவுக்கரசி, நிழல்கள் ரவி, ராதாரவி, நந்து ஆனந்த் என மற்ற நடிகர் நடிகைகளின் நடிப்பு கச்சிதம்.
ஜின்னாக வருகிற பேயின் உருவமும், அது காட்டும் விசுவாசமும், குரலும் ரசிக்கும்படி இருக்கிறது.
விவேக் _ மெர்வின் கூட்டணியின் பின்னணி இசை காட்சிகளுக்கு விறுவிறுப்பூட்ட உதவியிருக்க, ஒளிப்பதிவு நேர்த்தி.
ஒரு குடும்பத்துக்குள் வசிக்கும் பேய், அந்த குடும்பத்தில் நடக்கும் ஒரு கிரைம் சம்பவம், அதற்கு காரணம் யார் என்ற தேடல்… இப்படி அமைத்திருக்கும் கதை சுவாரஸ்யம்தான். திரைக்கதையிலும் அந்த சுவாரஸ்யம் இருந்திருந்தால் அட்டகாசமான ஃபேண்டஸி அனுபவம் ரசிகர்களுக்கு கிடைத்திருக்கும்.

