இயக்குநர் வ.கெளதமன் கதை திரைக்கதை எழுதி, இயக்கி, நாயகனாக நடிக்கும் படம் ‘படையாண்ட மாவீரா.’
மண்ணையும் மக்களையும் காக்க வீரம் ஈரம் அறத்துடன் போராடி வாழ்ந்த ஒரு மாவீரனைப் பற்றிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இப்படைப்பில் படையாண்ட மாவீரனாகவே வாழும் வ.கௌதமனுக்கு எதிர் நாயகர்களாக மன்சூரலிகான், ஆடுகளம் நரேன், பாகுபலி’ பிரபாகர், வேதாளம் கபீர், மதுசூதனராவ், தீனா என ஆறு பேர் களமிறங்கி மோதுகின்றனர்.
பூஜிதா நாயகியாக நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், ரெடின் கிங்ஸ்லி, ‘நிழல்கள்’ ரவி, இளவரசு, தமிழ் கெளதமன், தலைவாசல் விஜய், ஏ.எல். அழகப்பன் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.
கனவே கலையாதே, மகிழ்ச்சி வெற்றிப் படங்களை தொடர்ந்து வ.கௌதமன் நாயகனாக நடிக்கும் இரண்டாவது திரைப்படம் இது.
படம் பற்றி இயக்குநர் வ.கௌதமனிடன் கேட்டபோது ” என் வாழ்நாள் லட்சியமே தமிழர்களின் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத சந்தனக்காடு, முந்திரிக்காடு, வன்னிக்காடுகளில் வாழ்ந்த மாவீரர்களின் வரலாற்றை படைப்பாக்கி ஒரு தரிசனமாக இவ்வுலகிற்கு தருவது மட்டும்தான். சந்தனக்காட்டு மாவீரன் வீரப்பனை படைத்துவிட்டேன். முந்திரிக்காடும் வன்னிக்காடும் மட்டுமே மீதமுள்ளது. தமிழ் மண்ணில் ஆகப் பெரும் பேரதிர்வுகளை உருவாக்கப் போகும் இப்படைப்பு ‘உன்னையும் இந்த மண்ணையும் காக்க ஒருத்தாய் மக்களாக நில்லுங்கள்’ என்று உரக்கப் பேச வருகிறது. ‘மாவீரம்’ சுமந்த இப்பெரு வரலாற்றின் படப்பிடிப்பு இதுவரை 76 நாட்கள் நடைபெற்று மீதமுள்ள ஐந்து நாட்கள் மெய்சிலிர்க்கும் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு தயாராகிக் கொண்டிருக்கிறது” என்றார் உற்சாகமாக.
பரபரப்பான திருப்பங்களுடன் கூடிய இந்த படைப்பில் நெருப்பு தகிக்கும் நான்கு சண்டைக் காட்சிகளை ஸ்டண்ட் சில்வா வடிவமைக்க நடனக் காட்சிகளை டான்ஸ் மாஸ்டர் தினேஷ் காட்சிப் படுத்தியுள்ளார். பேரழகான இசையை ஜிவி.பிரகாஷ் குமாரும், பாடல்களை ‘கவிப்பேரரசு’ வைரமுத்துவும் வழங்கியுள்ளனர். ஒளிப்பதிவு வெற்றிவேல் மகேந்திரன், கோபி ஜெகதீஸ்வரன், கலை மோகன், வசனம் பாலமுரளி வர்மன், படத்தொகுப்பு ராஜா முகமது, ஸ்டில்ஸ் அன்பு, மக்கள் தொடர்பு நிகில்.

